Friday, December 10, 2010

பாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் - 10. தீராத விளையாட்டுக் குதிரை.

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 

பாகம் இரண்டு:

அமர்நாத் புனித யாத்திரை. 

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.

பாகம் ஒன்று: வைஷ்ணோதேவி தரிசனம்.

பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.  (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: ஜம்மு to  பால்டால்  முகாமுக்கு

பாகம் இரண்டு - பகுதி 2:  காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது 

பாகம் இரண்டு - பகுதி 3. பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது: 

பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். 

பாகம் இரண்டு - பகுதி 5 : இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பாகம் இரண்டு - பகுதி 6: பால்டால் முகாமில். 

பாகம் இரண்டு. பகுதி 7. பால்டால் முகாமிலிருந்து அமர்நாத் புனித குகைக்கு 


தொடர்கிறது....
பாகம் இரண்டு.
பகுதி 10:  தீராத விளையாட்டுக் குதிரை.  

குதிரை வாடகை பேசியதும் நாங்கள் நால்வரும் ஒவ்வொருவராக குதிரையில் ஏறிக் கொண்டோம்.

குதிரைகள் என்று இவற்றை சொல்ல முடியாது. கோவேறு கழுதைகள் அல்லது மட்டக் குதிரைகள் என்று அழைக்கலாம். குதிரைக்கு கடிவாளம் போட்டிருக்கிறார்கள். ஆனால் கண்களுக்கு போடும் கவசம் இல்லை. திரு.பாண்டியனும், திருமதி.பாண்டியனும் முதலில் குதிரைகளை அமர்த்திக் கொண்டார்கள். அடுத்து நண்பர் கோவிந்த் மனோகர் குதிரையில் ஏறி அமர்ந்ததும், நான் குதிரைக்காரரின் உதவியுடன் ஏறி குதிரையின் முதுகில் அமர்ந்தேன்.

குதிரையின் முதுகில் போட்டிருந்த இருக்கை (இதன் பெயர் தான் சேணமா?) ஒன்றும்  அவ்வளவு சவுகரியமாக இல்லை. குதிரையின் முதுகில் பிணைக்கப்பட்டிருந்த இருக்கை மிகக் கடினமாக இருந்தது. நிச்சயமாக இந்த பயணம் அவ்வளவு சு(மு)கமாக அமையப் போவதில்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. முன்னே பாண்டியன் தம்பதியர் புறப்பட்ட குதிரைகள் சென்று கொண்டிருக்க. அதன் பின்னர் கோவிந்த் மனோஹரின் குதிரை சென்று கொண்டிருந்தது.

நாங்கள் பயணம் துவங்கிய போது காலை மூன்றரை மணி இருக்கும். அது ஒரு அரையிருட்டு வேளை. சாலையில் விளக்கொளி இல்லை. மலையடிவாரத்தில் மலை ஏறும் முன்னர் ஒரு பரிசோதனை கட்டம் இருக்கிறதாம். அது வரை தரைச் சாலை தான். அந்தத் தரைச் சாலையும் குண்டும் குழியுமாகத் தான் இருந்தது. கொஞ்சம் தூரம் போனதும் கோவிந்த் மனோஹரின் குதிரை பின் தங்கியதைக் கண்டேன். அவரும் என்னை நிற்கச் சொன்னார். குதிரையில் இருந்து இறங்கி அவருடன் சென்று என்ன சேதி என்று விசாரித்தேன்.

அவர் உயரத்துக்கு குதிரையின் உயரம் பொருந்தவில்லை. குதிரை மிகவும் குள்ளமாக இருக்கிறது, அதனால் கால்களை வைத்துக் கொள்வதில் சிரமம் இருக்கிறது என்றார். நான் அமர்ந்திருந்த குதிரை அந்தக் குதிரையை விட கொஞ்சம் உயரமாக இருந்ததால் குதிரையை மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டார். நான் சராசரி உயரம் உள்ளவன் என்ற காரணத்தினால் சரி என்று நாங்கள் குதிரையை மாற்றிக் கொண்டோம். நான் குதிரை மீது ஏறி அமர்ந்தவுடன் அது நடக்க ஆரம்பித்தது. இரு கைகளாலும் இருக்கையை பிடித்துக் கொள்ளவேண்டும். இருக்கையின் பிடிப்பு சரியாக அமையவில்லை. இரு கால்களையும் குதிரையின் கீழே தொங்கிக் கொண்டிருக்கிற வளையங்களில் மாட்டிக் கொண்டேன். எங்கோ சம்பந்தம் இல்லாமல் அமர்ந்து இருப்பது போல ஒரு உணர்வு என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.

கோவிந்த மனோகர் என்னை முந்தி சென்று கொண்டிருந்தார். மேலும் இரண்டு கி.மீ. சென்றதும் நான் முன்னர் குறிப்பிட்ட சோதனை சாலை வந்தது. இங்கு உடமைகள், உடல் போன்ற பரிசோதனைகளை எதுவும் பாதுகாப்பு அதிகாரிகள் எங்களுக்கு  செய்யவில்லை. மாறாக அமர்நாத் யாத்திரை வாரியத்தினர் வழங்கிய யாத்திரை அனுமதி கடிதம் (புகைப்படம் ஒட்டியது) எங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து விட்டு மேலே செல்ல அனுமதித்தார்கள்.

மலையை ஒட்டிச் சென்ற ஒரு பாதை மலைமீது ஏறத் துவங்கியது.  அதிகாலை நான்கரை மணிக்கு நாங்கள் மலை மீது ஏற ஆரம்பித்து விட்டோம். ஒரு பக்கம் நெடிதுயர்ந்த மலை, மற்றொரு பக்கம் ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் ஒரு ஆறுஓடிக்கொண்டிருக்கிறது.  
அதிகாலை விடியலில் இருட்டு விலகாத அந்த அரைகுறை வெளிச்சத்தில் வெள்ளை வெளேரென்று பனிப் பாளங்கள் தென்பட்டன. ஐநூறு அடி உயரம் வந்திருப்போம் என்று நினைக்கிறேன். முன்னும் பின்னும் யாத்திரிகள் நெருக்கமாக சென்று கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் யாத்திரை செய்ய அனுமதி கிடைக்காமல் முகாமில் காத்திருந்த யாத்திரிகள் எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தார்கள். எத்தனை விதமான மக்கள்? எல்லா வயதிலும் ஆண், பெண்கள், குழந்தைகள் என்று நடந்து கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே குதிரைகள் குதிரைக்காரர்களால் நிறுத்தப்பட்டு அவற்றிற்கு ஆசுவாசம் அளிக்கப்படுகிறது.

நான் ஏறி அமர்ந்த குதிரை அதுவரை ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தது என்று எண்ணியது தான் தாமதம், குதிரை முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. எல்லாக் குதிரைகளும் நிறுத்தப்படும் சமயத்தில் நான் பயணித்த குதிரை மட்டும் வந்த பாதை வழியே திரும்பிச் செல்ல யத்தனித்தது. குதிரைக்காரர் சொல்வதை அது கேட்பதாக இல்லை. அதற்கு என்ன கஷ்டமோ, அது மேலும் பயணத்தைத் தொடர ஆர்வம் இன்றி முகாமுக்குத் திரும்புவதிலேயே குறியாக இருந்தது. குறுகிய பாதையில் அந்த குதிரை மட்டும் திரும்ப யத்தனித்ததால் பின்னே வரும் குதிரைகள், பல்லக்குத் தூக்கிகள், மற்றும் நடந்து வருபவர்களுக்கு இடைஞ்சலாக அந்தக் குதிரையின் நடவடிக்கைகள் இருந்தது.

இந்த இடையூறினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஹிந்தியிலும், காஷ்மீரியிலும் வசவு மாரி பொழியத் தொடங்கியது. ஏற்கனவே குதிரைப் பயணம் பழக்கமில்லாத எனக்கு இந்த நிலைமை அறத்துன்பமாக ஆகிவிட்டது. ஹிந்தி, காஷ்மீரி தெரியாத நிலையில் நான் குதிரைக்காரரிடம் எளிய ஆங்கிலத்தில் கேட்ட விஷயங்கள் அவருக்கு புரியவில்லை.  யாத்திரிகள் கூட்டம் கூட்டமாய் பயணித்த வேளையில் இப்படி ஒரு குதிரையோடு எனது புனித யாத்திரை தொடங்கும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சரி நம்முடன் வந்தவர்களை துணைக்கு அழைக்கலாம் என்று பார்த்தால் என்னுடன் வந்த மூவரையும் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை காணவில்லை. கூட்டம் அதிகமாக இருப்பதால் ஒன்றாக புறப்பட்டு ஒன்றாக பயணிப்பது சாத்தியப் படவில்லை. மேலும் சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல நான் சண்டிக் குதிரையின் மேல் செய்த பயணம் கால தாமதத்தை விளைவிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக அவர்கள் முந்திச் சென்று விட்டார்கள்.

மட்டமான குதிரையை விவரம் தெரியாமல் மனோகர் என் தலையில் கட்டி விட்டாரோ என்று அவர் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. ஆயிரம் அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த குதிரையின் தொடர் சண்டித்தனம் எனக்கு வெறுப்பை உண்டாக்குவதாக அமைய, குதிரைக்காரரிடம் சொல்லிவிட்டு குதிரையில் இருந்து கீழே இறங்கிவிட்டேன். பின்னர் கோபத்துடன் வேகமாக நடக்கத் தொடங்கினேன். எனது திடீர் செய்கையால் அதிர்ச்சியுற்ற குதிரைக்காரரால் குதிரையை விட்டுவிட்டு என்னைப் பின்தொடர முடியாமல் போனது. நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

எனக்கு முன்னே சென்ற பாண்டியன் தம்பதியினரையும், கோவிந்த் மனோஹரையும் தேட ஆரம்பித்தேன். எல்லோருமே மூக்கு மூடிகள், முகம் மறைக்கும் குல்லாக்கள் அணிந்து பயணித்ததால் பின்புறமாக குதிரையில் அமர்ந்து செல்பவரை எப்படி அடையாளம் காண்பது?

மேலும் குறுகிய பாதையில் திரும்பி, திரும்பி பார்த்து நண்பரைத் தேடுவதும் கடினமாக இருந்தது. கோலை ஊன்றி கவனமாக நடந்து கொண்டே சென்ற நான் ஒரு கணத்தில் கோவிந்த் மனோஹரைக் கண்டேன். நான் நடந்து வந்து அவரது குதிரையை முந்திச் செல்வதைக் கண்ட அவரும் அதிர்ந்து போனார்.

இரண்டு வளைவுகளை தாண்டி மேலே ஒரு ஓய்வு எடுக்கும் இடம் தெரிந்தது. எங்கள் பயணத்தின் முதல் தேநீர் விடுதி அது. நடந்து செல்வோர், குதிரைக்காரர்கள், பல்லக்குத் தூக்கிகள் போன்றோர் அங்கே நின்று டீ சாப்பிடுவார்கள். குதிரைகள் சற்று நேரம் ஓய்வெடுக்கும். மேலும் யாத்திரிகளும் அமர்ந்து டீ சாப்பிடலாம். நான் மனோஹரிடம், நான் மேலே இருக்குமிடத்தில் அமர்ந்து காத்திருக்கிறேன். அங்கே வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கே சென்று காத்திருந்தேன். மலைப்பாறைகளின் இடுக்கில் ஒரு சிறிய தேநீர்க்கடை இருந்தது. ஏற்கனவே சென்றிருந்த பாண்டியன் தம்பதிகள் அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். திருமதி பாண்டியனுக்கு குளிர் அதிகமாகி நடுக்கம் அதிகரித்து விட்டது.

நண்பர் கோவிந்த் மனோஹரும் குதிரையில் இருந்து இறங்கி நடந்து எங்களை நோக்கி வந்தார். குளிர் அதிகமாக இருந்ததால் அவருக்கும் நடுக்கம் அதிகமாக இருந்தது.

வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டே வந்தார். முகம் சிவந்திருந்தது. அவரால் முடியவில்லை. அவருக்கு நான் அமர்ந்திருந்த ஒரு சிறிய மேடையில் அமர இடம் தந்தேன். ஆசுவாசப் படுத்திக் கொண்ட அவர் ஏன் நடந்து வருகிறீர்கள் குதிரை எங்கே என்றார் அப்பாவியாக.

எனக்கு கோபமான கோபம் வந்தது. அது குதிரை இல்லை கழுதை என்றேன். நைசா கழுதையை என் தலையில் கட்டிவிட்டு நீங்கள் பாட்டு போய்விட்டால் எப்படி? என்று கேட்டு விட்டு எனது நிலைமையை அவரிடம் விளக்கிச் சொன்னேன்.

இதைக் கேட்ட மனோகர், ''எனக்கு எப்படி இந்த பிரச்சினை எல்லாம் தெரியும்? நான் வந்த குதிரை உயரம் கம்மி என்பதால் உங்கள் குதிரைக்கு மாறிக் கொண்டேன்'' என்று சமாதானம் சொன்னார், மூச்சிரைத்துக் கொண்டே. அவரது நிலைமை கண்டதும் எனக்கு பரிதாபமாகப் போய் விட்டது.

இதற்கிடையே குதிரைக்காரரின் அடையாள அட்டையை நான் வைத்திருந்ததால் பதறி போன எனது குதிரைக்காரர் அலறி அடித்துக் கொண்டு என்னைத் தேடி வந்தார். அடையாள அட்டை குதிரைக்காரர்களின் வாழ்வாதாரம். எனவே மற்ற குதிரைக்காரர்கள் அவருக்கு பரிந்து பேச எங்களிடம் வந்தார்கள். நான் தெளிவாக சொல்லிவிட்டேன். இப்போது நான் வரும் குதிரையில் தொடர்ந்து பயணம் செய்ய என்னால் முடியாது. வேறு ஒரு நல்ல குதிரையை ஏற்பாடு செய்து தந்தால் தான் அடையாள அட்டையை தருவேன். இல்லாவிட்டால் அமர்நாத் புனித யாத்திரை நிர்வாகத்திடம் புகார் செய்வேன் என்றேன்.

நண்பர் பாண்டியன் எனது சார்பில் குதிரைக்காரரிடம் எனது தரப்பு வாதத்தை இந்தியில் விளக்கினார்.  நல்ல வெளியாக எங்களது நான்கு குதிரைக்காரர்களில் ஒருவருக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தது. அவர் என் தரப்பு வாதத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து குதிரைக்காரரிடம் பேசினார். பதினைந்து நிமிடங்கள் காரசாரமாக காஷ்மீரியில் அவர்களுக்குள் விவாதித்த பின்னர், இப்போதைக்கு சவாரி இல்லாத குதிரை எதுவும் கிடைக்காது என்பதால் நான் வந்த அதே (சண்டிக்)குதிரையில் நான் பயணித்தாக வேண்டும் என்றும், மீண்டும் குதிரை சண்டித்தனம் செய்தால் வேறு குதிரை (வழியில் ஒரு வேளை கிடைத்தால்) ஏற்பாடு செய்து தருவதாகவும், எனது குதிரைக்காரர் சொன்னார்.

இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட நான் (வேறு வழி?) எந்தக் காரணத்தைக் கொண்டும் குகைக்குச் செல்லுமுன்பாக அடையாள அட்டையைத் தரமாட்டேன் என்று உறுதிபடக் கூறிவிட்டேன்.

ஒருவழியாக சுமுகமாகி எல்லோரும் டீ சாப்பிட்ட பின்னர், மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. அதுவரை ஆறு கி.மீ கடந்திருப்போம் என்று நினைக்கிறேன். குதிரைகளை வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டுவது சிவனுக்கு கைவந்த கலை ஆயிற்றே. உருகி உருகி திருவாசகம் பாடிய மணிவாசகரை குதிரைகளை கொண்டே சோதித்த சிவனுக்கு நான் ஒரு சுண்டைக்காய் அல்லவா? எனது ஆணவ மலம் அகல ஒருவேளை சிவன் குதிரையைக் கொண்டு இந்த சோதனையை செய்திருப்பாரோ என்று எண்ணினேன். சிவனிடம் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டேன். ஆனால் சிவன் அன்பு மிகுந்தவர் என்பது போகப் போக புலனாயிற்று. எனது குதிரை ஒழுங்காக நடந்து செல்ல ஆரம்பித்து விட்டது.

விடாக் கண்டன், கொடாக் கண்டன் கதையாக வேறு வழியில்லாமல் குதிரையும் நானும் ஒத்துப் போனோம். எப்படியோ பனி படர்ந்த இமய மலை மேல் மலை போல வந்த சோதனை ஆதவனைக் கண்ட பனி போல மறைந்து போனது.

ஆனாலும் இந்த சந்தடியில் எனக்கு பயணத்தின் சந்தோஷம் ஒரு மாற்று குறைந்து போனது என்னவோ உண்மைதான்.

எங்களைச் சுமந்து சென்ற குதிரை பக்தரை மாற்றுக் குதிரையா, இல்லை பத்தரை மாற்றுக் குதிரையா? 

ஓம் நமசிவாய.

(தொடரும்)

No comments: