Wednesday, December 8, 2010

பாகம் 2: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 8. வாடகைக்கு குதிரை பேசப் போனோம்.

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 

பாகம் இரண்டு:

அமர்நாத் புனித யாத்திரை. 

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.

பாகம் ஒன்று: வைஷ்ணோதேவி தரிசனம்.

பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.  (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: ஜம்மு to  பால்டால்  முகாமுக்கு

பாகம் இரண்டு - பகுதி 2:  காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது 

பாகம் இரண்டு - பகுதி 3. பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது: 

பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். 

பாகம் இரண்டு - பகுதி 5 : இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பாகம் இரண்டு - பகுதி 6: பால்டால் முகாமில். 

பாகம் இரண்டு. பகுதி 7. பால்டால் முகாமிலிருந்து அமர்நாத் புனித குகைக்கு 

நாள்: 11, ஜூலை, 2010 (அதிகாலை)

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.


8. வாடகைக்கு குதிரை பேசப் போனோம்.
நான் கோவிந்த் மனோஹருடன் புறப்பட்ட போது  எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றொரு நண்பரான பாண்டியனும் அவரது துணைவியாரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

குதிரைகளை வாடகைக்கு பேச புறப்பட்டோம்.  நாங்கள் முகாமை விட்டு வெளியே வரும் போது நேரம் அதிகாலை மூன்று மணி. பொழுது புலராமல் இருட்டு இன்னும் கவ்விக் கொண்டிருக்க பால்டால் முகாம் சுறுப்பாக இயங்கத் தொடங்கி இருந்தது.

குதிரைக்காரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். அமர்நாத் நிர்வாகம் குதிரை பயணத்துக்கான கட்டணங்களை நிர்ணயித்து இருந்தாலும், குதிரைக்காரர்கள் கட்டணத்தை உயர்த்திக் கேட்கிறார்கள்.  நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட உயர்த்திக் கேட்டால் அவர்களிடம் நாம் தான் சாமர்த்தியமாக பேசி கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். 

பேரம் படிந்ததும் குதிரையில் ஏறிக் கொள்ள நமக்கு உதவி செய்கிறார்கள். பேரம் படிந்த பின்னர் மேலே போட்டுக் கொடுக்கச் சொல்லி அவர்கள் நம்பூர் ஆட்டோக்காரகளைப் போல் தொந்தரவே செய்வதில்லை. வாடகை பேசி முடிந்ததும் குதிரையில் நீங்கள் ஏறிக்கொண்ட பின்னர் அவர்கள் குதிரையை வழிநடத்திச் செல்கிறார்கள்.

பால்டாலில் இருந்து மேலே குகைவரை செல்ல ஒரு குதிரைக்கு எழுநூற்று ஐம்பது ரூபாய் என்று பேசி முடித்தோம். குதிரைக்காரர்களின் அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டோம். மேலே போனதும் பணத்தை கொடுக்கும் போது அடையாள அட்டையை அவர்களிடம் ஒப்படைத்து விடுவதாக பேசிக் கொண்டோம். 

அடையாள அட்டையை ஒவ்வொரு யாத்திரியும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய காரணம் இருக்கிறது.

ஏனெனில் குதிரைகளை அமர்த்திக் கொள்ளும்போது யாத்திரிகர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் சிலவற்றைக் கீழே காண்போம்:
1. வாடகையை சரியாக, தெளிவாக, ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொண்டு பேசிக் கொள்ளுங்கள். ஹிந்தி தெரிந்திருத்தல் அவசியம். எனினும் உடைந்த ஆங்கிலத்தில் குதிரைக்காரர்கள் உங்களுடன் பேசுவார்கள். அதை வைத்துக் கொண்டு வாடகை பேசி விடலாம். நாம் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு மிக நன்றாக புரிகிறது.

2. உங்களுடைய குதிரைக்காரரின் அடையாள அட்டையை வாங்கி உங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணம் திருப்திகரமாக முடிந்த பின்னர் பணம் தந்து அவர் வாங்கிக் கொண்டு எல்லாம் திருப்தியாக நிறைவானதும், அவரது அடையாள அட்டையை அவரிடம் திரும்பக் கொடுங்கள்.

3. போய்த் திரும்பி வர வாடகை பேசாதீர்கள். இவர்கள் எல்லோருடைய பெயரும், முகமும் குழப்பும் வகையும் ஒரே மாதிரியாக இருக்கும். அவர்கள் உங்களை அடையாளம் கண்டு பிடித்து விடுவார்கள் எனினும், இங்கிருந்து மேலே செல்ல மட்டும் பேசிக் கொள்ளுங்கள். மேலிருந்து கீழே திரும்பி வரும்போது குதிரை தேவை எனில் குகை அருகிலேயே குதிரைக்காரர்கள் பலர் இருப்பார்கள். அவர்களிடம் கட்டணம் பேசி குதிரைகளை அமர்த்திக் கொள்ளலாம்.  கால தாமதமாகி ஒரு வேளை நீங்கள் கீழே இறங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் குதிரைக்காரர்களைக் கண்டு பிடித்து பணத்தை திரும்ப வாங்குவதில் சிரமங்கள் உள்ளன.


4.  பேசிய முழு பணத்தையும் குறிப்பிட்ட இடத்தைச் சேருவதற்கு முன்னதாக எக்காரணத்தைக் கொண்டும் கொடுத்து விடாதீர்கள். அதே போல உங்கள் பைகளை சுமந்து வர உதவியாளரை வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் குதிரைக் காரரிடமும் உங்கள் உடமைகளைக் கொடுக்காதீர்கள். யாத்திரை அடையாள அனுமதிச் சீட்டை பத்திரமாக உங்களிடமே வைத்திருங்கள். குதிரைக்காராரிடம் ஒருபோதும் தரவேண்டாம்.


5. சில சமயங்களில் குதிரை புறப்பட்ட பிறகு கொஞ்ச தூரம் சென்றதும் சிறுவர்கள் யாராவது உங்களுக்கு உதவியாளராக (pithoos)வருவதாகச் சொன்னால் ஒரு போதும் ஒப்புக் கொள்ளாதீர்கள். குதிரைக்குப் பின் சும்மா நடந்து வருவதற்கு உங்களிடம் தனியாகப் பணம் கேட்டு தகராறு செய்வார்கள். பிரச்சினை ஏதும் பின்னர் வந்தால் குதிரைக்காரர்கள் இவர்கள் விஷயத்தில் உங்களுக்கு எந்த உதவிக்கும் வரமாட்டார்கள்.

6. இடைவழிகளில் ஓய்வுக்கு நிறுத்துகையில், குதிரைக்காரரின் டீ செலவு உங்களுடையது. டீ ஒன்றுக்கு பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். டீ அப்படி ஒன்றும் ரசித்து, ருசித்துச் சாப்பிடும்படியாக இருக்காது. ஆனால் அடிக்கிற குளிரும், குதிரையில் உட்கார்ந்து செல்வதால் ஏற்படும் உடல் வலியும் வேறு வழியில்லாமல் அந்தத் டீயைக் குடிக்க வைத்து விடும்.

7. நீங்களாக மனமுவந்து தரும் டிப்ஸ்களை அவர்கள் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறார்கள். குதிரைக்குத் தரும் வாடகை மிக அதிகம் என்று எண்ணுபவர் கூட மலையேறிச் செல்லும் வழியில் உள்ள இடர்ப்பாடுகளையும்,நம்மை அழைத்துச் செல்ல குதிரையும், குதிரைக்காரரும் படும்பாடுகளையும் பார்த்தபின் தாராளமாக டிப்ஸ் தந்து விடுவார்.இந்தக் குறிப்புகள் பல்லக்குத் தூக்கிகளுக்கும் பொருந்தும்.


9. குதிரை அமைவதெல்லாம் .. 

எனக்கு குதிரை சவாரி செய்து பழக்கமில்லை. சிறிய வயதில் சென்னை பீச்சில் கூட குதிரை மீது ஏறி விளையாட்டுச் சவாரி (joyride) கூட சென்றதில்லை. எனினும் சிரமம் பார்க்காமல் எப்படியாவது குதிரையில் போய் அமரநாதனைத் தரிசனம் செய்துவிட்டு வந்து விடுவோம் என்று எண்ணியிருந்த எனக்கு ஒரு சோதனை கொஞ்ச நேரத்தில் ஒரு குதிரை வடிவில் வந்து சேர்ந்தது.

(தொடரும்)

No comments: