Showing posts with label Amarnath Yatra. Show all posts
Showing posts with label Amarnath Yatra. Show all posts

Friday, June 24, 2011

அமரநாதம் - 2011 - பகுதி ஒன்று

அமர்நாத் - தொடரும் சிவகணங்கள்....


ஓம் நமசிவாய..

கடந்த ஆண்டு வைஷ்ணோதேவி, அமர்நாத் திருத்தல யாத்திரை போய் வந்த பிறகு இங்கே நான் பதிவிட்ட அனுபவங்களை தொடர்ந்து படித்து பாராட்டிய இறையடியார்களுக்கு பணிவான வணக்கங்கள். 

கடந்த ஆண்டு (2010) அமர்நாத் யாத்திரை செல்வதற்காக பால்டால் அடிவார முகாமில் தங்கியிருந்த போது குன்னூர், ஈரோடு, கோவை பகுதிகளைச் சேர்ந்த பதினைந்து அன்பர்களை சந்தித்தேன். இருபத்தைந்து முதல் முப்பந்தைந்து வயது கொண்ட துடிப்பான சிவனடியார்களான அவர்கள் ஒன்பதாவது முறையாக அந்த சமயம் அமர்நாத்துக்கு தொடர் யாத்திரையாக வந்திருந்தார்கள். பவானி இரவி என்னும் அன்பர் (நீலகிரி-கூனூரை சேர்ந்தவர்) அவர்களை வழிநடத்தி வந்திருந்தார். அவர்களது அன்பும், ஆர்வமும், துடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களுடன் அளவளாவிய சமயம் அவரது முகவரி செல்பேசி எண்ணைக கேட்டு வாங்கினேன். ஆனால் மிகச் சிறிய துண்டு காகிதத்தில் எழுதி வாங்கியதால் சென்னை வந்த பின்னர் என்னால் அதனைக் கண்டு பிடிக்க இயலாமல் போய் விட்டது. 

எனது முகவரியையும் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்களால் என்னையோ அல்லது நான் அவர்களையோ தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனை ஒரு துர்பாக்கியமாகவே கருதினேன். 

தொடர்பு கிட்டாமல் போனதால் அவர்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கிடைக்காமல் போனது. அதனால் அவர்களைச் சந்தித்த அந்த இனிய கணங்களை எனது யாத்திரை பயண அனுபவத் தொடரில் குறிப்பிட இயலாமல் போய்விட்டது.

ஆனால் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வேறு ஏதோ புத்தகத்தை தேட எதை எதையோ குடைந்த போது சிறிய துண்டுக் காகிதம் கண்ணில் தென்பட பவானி இரவி (அமர்நாத் பாத யாத்திரைக் குழு) என்ற அந்தப் பெயர் என் நினைவுப் பகுதியை தூண்டி விட ''ஆஹா. கிடைத்து விட்டதே என மகிழ்ந்து பவானி இரவியை செல்பேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினேன்.'' 

கிட்டத்தட்ட 340 நாட்கள் கழித்து பேசியும் இரவி என்னை நினைவில் வைத்திருந்தார். இரண்டு மாதங்கள் முன்புதான் அந்த அணியினர் நேபாளம் சென்று பசுபதிநாதரையும், முக்தினாதரையும் தரிசனம் செய்து விட்டு வந்ததை தெரிவித்தார். 

இந்த ஆண்டு பத்தாவது முறையாக அவர்கள் ஜூன் இருபத்து மூன்றாம் தேதி அன்று சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்ப்ரசில் பதிவு செய்திருந்த செய்தியைத் தெரிவித்தார். என்னையும் அவர்களுடன் கலந்து கொள்ள அழைத்தார். ஜூன் இருபது (அதாவது நான் பதிவிடும் இந்த நாள்) வரை எனது எம்.எஸ்சி. (யோகா) தீசிஸ் சப்மிஷன், வைவா போன்ற கமிட்மெண்ட்கள் இருப்பதினால் என்னால் அவர்களுடன் யாத்திரையில் கலந்து கொள்ள இயலாமல் இருப்பதினை அவருக்கு தெரிவித்தேன். அ(சி)வன் அழைக்காமல் எப்படி செல்லமுடியும்?

இருப்பினும் பவானி இரவி என்னை இருபத்தி இரண்டாம் தேதி அன்று குன்னூரில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் பூஜை மற்றும் அதற்கு பின்னர் நிகழ உள்ள அன்னதான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்னை அழைத்தார். அதனை சிவனின் அழைப்பாக ஏற்றுக் கொண்டு உடனே நீலகிரி விரைவு ரயிலில் 21-ந்தேதி அன்று இரவு முன் பதிவு செய்தேன். 

மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழில் என் பெயரை அன்னதான வைபவத்தை துவங்கி வைப்பவர்கள் பட்டியலில் வெளியிட்டிருந்தார். எனது பெயரை குறிப்பிட்டு, அதனைத் தொடர்ந்து சிவனடிமை, சென்னை என்று வெளியிட்டிருந்த விதம் என்னை நெகிழச் செய்தது. 

கடந்த முறை என்னுடன் அமர்நாத் பயணித்த அன்பர்களோடு இந்த விவரங்களை பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வசூலித்து அதனை அவருக்கு மணி ஆர்டர் அனுப்பினேன். மிகவும் மகிழ்ந்து போன அவர்கள் நான் கண்டிப்பாக குன்னூருக்கு வந்தே ஆக வேண்டும் என்று அடிக்கடி போன் செய்து அழைத்தார். இன்று கூட என்னை நினைவு படுத்தினார். சிவனருளால் இன்று எனது தீசிஸ் மற்றும் ப்ராஜெக்ட்களை யூனிவர்சிட்டியில் சேர்த்து விட்டேன் (இருபது ஜூன் தான் அதற்கான கடைசி நாள்). எனது தீசிசை கடந்த சனியன்று (18.06.2011) ICF Colony சத்சங்கத்தில் நிகழ்ந்த திருமந்திர வகுப்பின் போது, சிவனுக்கு அர்ப்பணித்து பூசைகள் செய்து எடுத்துக் கொண்டேன். 

எனது தீசிசின் டெடிகேஷன் பக்கத்தில் இவ்வாறு எழுதி இருந்தேன்:

DEDICATED
TO LORD SHIVA-THE YOGISHWAR, 
MAHARISHI PATHANJALI,
SAINT THIRUMOOLAR, ALL YOGINS, YOGINIS, MY PARENTS,
BELOVED FAMILY MEMBERS
&
TO MY YOGA ASAN
YOGI DR.T.A.KRISHNAN, THIRUMOOLAR YOGA &NATURAL DIET RESEARCH CENTRE, CHENNAI

சிவனருளால் அனைத்தும் நல்ல படியாக நடந்து வருகிறது. ஆகவே, 21.6.2011 இரவு சிவனடியார்கள் நடத்தும் சிவபூசை, மற்றும் அன்னதான நிழச்சியில் கலந்து கொள்ள குன்னூர் சென்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் குழும அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த முறை பவானி இரவி குழுவினர் பத்ரிநாத், கேதார்நாத் சென்று பின்னர் அங்கிருந்து ஜம்மு சென்று வைஷ்ணோதேவி (கத்ரா) யாத்திரை மேற்கொண்டு அதன் பின்னர் அமர்நாத் குகைக்கு பயணிக்கிறார்கள். 

நான் அவர்களது குன்னூர் வைபவங்களில் கலந்து கொண்டு விட்டு பின்னர் அவர்களுடனே புறப்பட்டு சென்னை வந்து அவர்களை புனித யாத்திரைக்கு வழியனுப்ப இருக்கிறேன். 

இந்த முறை அமர்நாத் செல்ல இரண்டரை லட்சம் பக்தர்கள் பதிவு செய்திருப்பதாக சமீபத்தில் வெளியான செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 

எண்ணமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் என் சிவன் என்னை அவரது அடியார்களுடன் தொடர்பு கொள்ள வைத்திருப்பதை என்னவென்று சொல்வேன்? எல்லாம் சிவனருள் தான் என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது. அடுத்த ஆண்டு அவர்களது அணியில் என்னையும் இடம் பெறச் சொல்லி குன்னூர் சிவனடியார்கள் எனக்கு அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்கள். அதனை இறைவன் எனக்கு இட்ட ஆணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

குன்னூர் சென்று வந்த அந்த நிறை இறை அனுபவங்களை உங்களுடன் படங்களுடன் காணொளிகள் எண்ணப் பதிவுகள் என்று பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை போன்ற இறையன்பர்களுடன் அளவளாவ மீண்டும் ஒரு நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கும் இறையருளை பணிகிறேன். 

சிவனருள் பொலிக. 


(சிவகணங்கள் தொடரும்)

-- 

   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

Friday, April 8, 2011

பாகம் மூன்று: பகுதி பதினேழு :- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.அமர்நாத் புனித யாத்திரை - தொடரும் நினைவலைகள்.


அமர்நாத் யாத்ரா - தொடரும் நினைவலைகள்.

கடந்த ஜூலை (2010) மாதம், நானும் என் நண்பர்களும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி மற்றும் அமர்நாத் புனிதத் தலங்களுக்கு பயணம் சென்று இருந்தோம். அந்தப் பயண அனுபவங்களை ஒரு தொடர் கட்டுரையாக இந்த வலைப்பூவில் நான் வெளியிட்டேன். அந்தப் பயண கட்டுரையை படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்.


அதே கால கட்டத்தில் சென்னையில் இருந்து வேறொரு குழுவில் அமர்நாத் சென்று வந்த அனுபவங்களை ஒரு பெண் அமர்நாத் யாத்ரி பதிவு செய்து உள்ளார். அதனை இங்கே வெளியிட்டு மகிழ்கிறேன்.

ஓம் சிவோஹம்.


அவனருள் இன்றி அணுவும் அசையாது.

இயற்கை எழில் ஏகாந்தமாய் இன்னிசை பாடும் இமயமலையில் பனிலிங்கமாய் உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அமர்நாத் குகைக்கு சென்று ஈஸ்வரனை தரிசிக்கும் பெரும் பேறு அவ்வளவு சுலபமாய் எல்லோருக்கும் கிட்டிவிடுவதில்லை. அப்படி ஒரு பாக்கியத்தை அவனருளால் பெற்ற நான் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் இப்பயணம் கைகூடும். 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபது பேர் கொண்ட குழுவுடன் அமர்நாத் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றோம். டால் ஏரியில் மிதந்த போட் ஹவுஸில் தங்கினோம். மிதக்கும் மார்க்கெட், பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள் என டால் ஏரியின் அழகு மனதை மயக்கியது.

படகில் சுற்றி வந்த போது ஏரியின் ஒரு பகுதி நம்மூர் கூவத்தை ஞாபகப்படுத்தியது. நாங்கள் சென்ற சமயம் காஷ்மீரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தது, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் கண்ணில் படவில்லை.

மறுநாள் அதிகாலை சோனாமார்க் என்ற ஊருக்கு நான்கு ஸ்கார்ப்பியோ கார்களில் கிளம்பினோம். அங்கு கிளேசியர் என்ற ஹோட்டலுக்கு சென்று குளிர் காக்கும் உடைகளை அணிந்து காலில் சாக்ஸ், பூட்ஸ் சகிதம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பால்தால் என்ற இடத்திற்கு சென்றோம். 

அங்கிருந்து தான் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.

ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதரணி எனும் இடத்தை அடைந்தோம். 

அங்கிருந்து 5கிலோமீட்டர் தூரம் நட்தோ, டோலி அல்லது குதிரை மூலமோ தான் செல்ல வேண்டும். 

ஒத்தையடிப்பாதை, ஒருபக்கம் அதலபாதாளம். கீழே சிந்து நதி அமைதியாய் அழகாய் ஓடிக்கொண்டிருந்தது. வழி முழுவதும் பனி மூடிய இமயமலையின் இயற்கை அழகும், சிந்துநதியின் சிங்காரமும் கண் குளிர கண்டோம். 

இருபுறம் பனி உறைந்து இருக்க, நடுவே பள்ளத்தில் உருகி ஓடும் தண்ணீர்.

அமர்நாத் குகை, 3888 அடி உயரத்தில் இமயமலைழில் உள்ளது. முகலாய மன்னர் அக்பர், ஷாஜகான் காலங்களிலும் அமர்நாத் யாத்திரை சிறப்புடன் நடந்துள்ளது என்பதை ஜகன்நாத பண்டிதராஜ் என்பவர் எழுதிய நூலான அசிப் விலாசம் என்ற நூலில் தேவர்கள் தலைவர் இந்திரன் சிவபெருமானை வணங்க அமர்நாத் வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகரிலிருந்து பகல்காம் எனும் இடம் வரை வாகனத்தில் சென்று 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமர்நாத் குகைக்கு நடந்து அல்லது குதிரை, டோலி மூலம் செல்லலாம். 

இடையிடையே டென்ட்டுகளில் தங்கி 3 நாள் யாத்திரையாக செல்ல வேண்டிய வழி அது. நாங்கள் சென்றது வேறு பாதை.

150 அடி உயரமும் அகலமும் கொண்டது. அமர்நாத் குகை. 

ஈஸ்வரனை காணும் படப்படப்புடன் குதிரை மூலம் பயணித்தோம். ஓரிருவர் டோலி மூலம் சென்றார்கள். குதிரைக்கு 350 ரூபாய் வாங்குகிறார்கள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது சென்றோம்.

பம்பம் போலோ அமர்நாத் கீ ஜெய் எனும் பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.

குதிரைப் பயணம் கோடாஸ் ஸ்டாண்டில் முடிந்தது. 

அங்கிருந்து பனிக்கட்டி மீது குச்சியை ஊன்றி நடந்து சென்றோம். சிரமமாக இருந்தது. பனியின் மீது நடக்க வழுக்கலும், சறுக்கலுமாக இருந்தது. அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் டோலிவாலாக்கள் 200 ரூபாய் வாடகை பேசி படிக்கட்டு வரை கொண்டு போய் விட்டார்கள். அங்கிருந்து கொஞ்ச தூரம் பனிமூடிய படிக்கட்டுகள் ஏறினோம். இவ்வளவு கடுமையான பயணத்திலும் ஈசனை தரிசிக்க தேனீக்கூட்டம் போல் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.

குகைக்கு அருகில் சென்றதும், அண்ணாந்து பார்த்தால் மலையில் ஒரு புறம் விநாயகர் உருவம், இன்னொரு இடத்தில் நந்தி உருவம் தெரிகிறது.  ஒரு வழியாக குகைக்குள் சென்று கம்பி வேலிக்கு பின்னால் உருவாகியிருந்த பனி லிங்கத்தை பார்த்தபோது கண்கள் பனித்தன. 

அந்த இடம் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து அடைக்காமல் லிங்கமாக மட்டும் பனி உறைவது இறையின் அற்புதம் தான். 

நாங்கள் பார்த்தபோது பதினொரு அடி உயர பனிலிங்க தரிசனம் கிடைத்தது. இங்கு சில சமயம் இரண்டடி உயர லிங்கம் தான் இருக்குமாம். எங்களுடன் தெனாலி எனும் ஊரிலிருந்து வந்தவர், சென்ற வருடம் இவ்வளவு சிரமப்பட்டு வந்து தரிசனம் கிடைக்காமல் திரும்பினாராம். 

சிலசயம் உருவாகும் லிங்கம் சீக்கிரம் உருகி விடுகிறது என்றும் சொல்கிறார்கள். கேதார், பத்ரி போன்ற இடங்களுக்கு சிரமப்பட்டு சென்றாலும் தரிசனம் நிச்சயம். 

அமர்நாத் அப்படியல்ல. அவனருள் இருந்தால் தான் அவனை தரிசிக்க முடியும் என்பது நிதர்சனம். ஹெலிகாப்டர்கள் இயற்கை சூழல் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கப்படுகின்றன. எல்லாவிதத்திலும் ஈஸ்வரனருளால் எங்களுக்கு அவரை பிரமாண்டமான லிங்கமாக தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

மனநிறைவுடன் திரும்பி டோலி, குதிரை மூலம் பஞ்சதரணியை அடைந்தோம். நாங்கள் மாலை அறரை மணியளவில் தான் திரும்ப முடிந்தது. 5 மணிக்கு மேல் ஹெலிகாப்டர்கள் இயங்காது. எனவே அங்கு ஒரு டென்டில் தங்கினோம். மறுநாள் காலை ஆறரை மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பால்தால் வந்து பின்னர் காரில் சோனாமார்க் வந்து சேர்ந்து ஓய்வெடுத்தோம்.

எங்கள் குழுவில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களும், அவர் மனைவி ஆண்டாளும் பெங்களூரிவிலிருந்து வந்திருந்தார்கள். இருவரும் மூத்த குடிமக்கள்.

ஆண்டாள் அம்மாவுக்கு பல ஆபரேஷன்கள் நடந்திருந்தும் மன உறுதியுடன் வந்தார்கள். மற்றுமொரு வயதான அம்மா காலில் சாக்ஸூடன் செருப்பு அணிந்து வந்து ஜில்லிப்பு தாங்காமல் அழுதார்கள். 

எங்கள் குழு காப்டன் சுனில் அதிகாரிகளிடம் சிரமப்பட்டு அனுமதி வாங்கி அவர்களை டோலி மூலம் அழைத்து வந்து தரிசனம் செய்வித்தார்கள்.

கடுமையான பயணத்தை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். எங்கும் ராணுவ வீரர்கள் காவலாகவும், உதவியாகவும் இருக்கிறார்கள். மறுநாள் ஸ்ரீநகர் திரும்பினோம். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. எனவே ஸ்ரீநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன்களை பார்த்தோம்.  சாலிமார் கார்டன் மிக அழகு. பரிமகல் கார்டனில் மெடிகேட்டட் வாட்டர் வந்தது. நேருவுக்கு அந்த தண்ணீர் அனுப்பப்பட்டதாக சொன்னார்கள். 

துலீப்கார்டன் மிகப் பெரியது. துலீப் மலர்கள் ஒரு சீசனில் தான் பூக்குமாம். 250 படிக்கட்டுகள் கொண்ட சங்கராச்சாரியார் கோயில் சென்றோம். ஆதிசங்கரர் அங்கு வந்து ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்ததாக சொன்னார்கள்.

மறுநாள் குல்மார்க் சென்றோம். அங்கு மிக அதிக தூரம் உயர் செல்லும் கேபிள் கார்கள் மூலம் 2 பாயிண்டுகள் சென்று பனி சூழ்ந்த மலைப்பாறை நடுவில் பனியில் அமர்ந்து சிறிது விளையாடினோம்.

இறைவனை தரிசித்த மனநிறைவோடு காஷ்மீரை காணும் பாக்கியமும் சேர்ந்தது. உற்சாகமாகவும், உன்னதமாகவும் இருந்தது. மகிழ்வுடன் நெஞ்சம் நிறைவுடன் சென்னை திரும்பினோம்.
பனி லிங்க வடிவெடுத்துபக்தர்களை உருக வைக்கும்அமர்நாத் ஈஸ்வரன்அற்புதத்தின் ஆனந்தம்மூச்சிரைக்க நடந்தும்குதிரை டோலி என குதித்தோடியும் வரும்குவலயத்து பக்தர்களின்குமுத மலர் நெஞ்சை அமுதமெனஅள்ளிப் பருகும் ஆண்டவனவன்பனிமலர் பாதம் வணங்குவோம்
-இந்திராணி அண்ணாமலை, சென்னை.

நன்றி: தினமலர் வாரமலர் : செப்டம்பர் 01,2010.

Tuesday, March 8, 2011

பாகம் மூன்று: பகுதி பதின்மூன்று :- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.


கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை 13: யாத்திரையின் நிறைவும் யாத்ரீகனின் பிரிவும் 

தரிசனம் முடிந்து கீழே இறங்க ஆரம்பித்ததும் பசி தான் இருப்பதை நினைவூட்டியது. 

குகைக்கு மேலேறும் போது வந்த கம்பிக் கதவுகளைத் தாண்டி இறக்கத்தில் திரும்பிய இடத்தில் ஒரு பெரிய லங்கர் இருந்தது. 

அதில் தோசை வார்க்கும் காட்சியும் சப்தமும். 

அடடா....

''பசிக்கு அவனுக்கு தோசை கொடு, நீ குழந்தையா இருக்கச்சே அதைத்தான் கொடுத்தேன்'' என்று என் பாட்டி என் தாயிடம் சொல்வதாகப் பட்டது எனக்கு. 

ஆசை(பசி)யோடு லங்கரில் நுழைந்ததும் திரு பாண்டியனையும் அவர் துணைவியாரையும் கண்டோம். மேலும் சில தெரிந்த முகங்கள் (பெரிய அறிமுகமில்லாததால் நட்புடன் ஒரு சிரிப்பை உதிர்த்தேன்) உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்

தோசையை கைகளில் வாங்கி ஒரு விள்ளல் எடுத்து சுவைத்தேன். என் முகம் ஜாமெட்ரிக் பாக்ஸில் உள்ள செட்ஸ் ஸ்கொயர் போலானது அங்கிருந்த கண்ணாடித் துண்டில் தெரிந்தது. 

ஆம்! அது அவர்களது தோசை.

எதையோ தடவி சுட்ட தோசை. 

காட்சிக்கு அந்த தோசையையும் சுவைக்கு என் ஞாபகத்தில் உள்ள தோசையையும் சிங்க் (sinc)  செய்து சாப்பிட்டு முடித்தேன். இத்தகைய சித்து விளையாட்டெல்லாம் கல்யாணமான கனவான்களுக்கு கை வந்த கலையாயிற்றே. அதுவும் எனக்கு 22 வருட அனுபவம்.! விடுவேனா?

வெளுத்து கட்டினேன்..... சோகத்தோடு. 

பின் மெதுவாக வரிசையாக அடுக்கியிருந்த கடைகளை மெள்ள கண்களால் நிரடிக்கொண்டே நாங்கள் நால்வரும் நடந்து வந்தோம்.இப்போது திருச்சியிலிருந்து எங்களுடன் வந்திருந்த இரு நண்பர்களில் ஒருவரான திரு.மகேஷ்-ஐ அங்கே பார்த்தோம். மிகவும் களைத்துப் போனவராக காணப்பட்டார். எங்களை பார்த்ததும் அதிகம் உணர்ச்சிகளை காட்டாத அவர் முகத்திலும் சிரிப்பு வெளிப்படையாக தெரிந்தது. எங்கள் ஸ்நேகம் அங்கிருந்து அதிகமானது. 

அங்கிருந்த ஒரு கடையில் அமர்நாத் உள்ள புகைப்படங்களை வாங்கினோம் (ஒரு காம்ப்ரமைஸ் தான்). தொடர்ந்து வந்து ஷூ இரவல் தந்த நண்பரை எப்படியோ அடையாளம் கண்டு திரும்ப அவரிடம் என்னுடையதை வாங்கிக் கொண்டு அவருடைய பொருளைத் திருப்பி நன்றியுடன் தந்து விட்டு  நடந்தேன். 

வெயில் இருந்த வானம் சட்டென மேகமூட்டமாகியது. பின் சடுதியில் சடசடவென ஐஸ் தூறல் ஆரம்பித்து ஜோவென கொட்டியது.  நினைத்துப் பாருங்கள் ! அந்த கணவாய் பகுதியில் ஐஸ்கட்டி மழையால் ஏற்பட்ட சப்தமும், குளிரும் சடுதியில் அதிகமாகியது. 

என் கைகளால் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை பிடித்து தாங்க முடியாது குளிரால் அவற்றை அப்படியே போட்டு விட்டேன். 

ஐஸ் படிமங்கள்.
கணங்களில் கரைந்தாலும், உணர்வினில் உறைந்தவை.

ஆனால் அந்த ஐஸ் தூறல்கள் அழகோ அழகு!  வலியோ வலி! கல்கண்டு போல (அளவில்) இருந்தது. முதலில் அதில் நடக்க முயற்சித்தேன் ஆனால் ஐஸ்கட்டியால் தொடர்ந்து அடிவாங்க முடியாததால் ஏற்கெனவே அங்கு தஞ்சம் புகுந்து விட்ட அஷ்வின் அவர்களுடன் அருகிலிருந்த ஒரு கடைக்குள் நுழைந்து விட்டேன்.

சற்று தூரத்தில் ஒருவர்(ன்) பெரிய சட்டையைப் போலவே இருந்த மழைக் கோட்டை விற்றுக் கொண்டிருந்தார்(ன்). நான் ஓடிச் சென்று ஒன்று வாங்கிக் கொண்டேன் (விலை ரூ20 மட்டுமே. விலையைப் போலவே அதன் ஆயுளும் மிக குறைவு) உடனே தரித்தும் கொண்டேன். 

பின் ஐஸ் மழை அடங்கியதும் கொஞசம் பொறுப்புடன் எங்கள் உடமைகளை வைத்திருந்த கடையை நோக்கி சற்று வேகமாக நடந்தோம். அந்த வேகத்திற்கு காரணம் அங்கு நிலவிய நிச்சயமற்ற சீதோஷ்ண நிலைதான். வெயில் சட்டென்று மழையானதும் அந்த மழையால் குளிர் அதிகமானதும் எவருக்கும் பொறுப்புணர்வை வரவழைக்கும்.

நல்ல வேளையாக எங்கள் கடைக்கு வந்ததும் மழை கொட்ட ஆரம்பித்தது. காலில் இருந்த ஷூவை மட்டும் கழற்றி விட்டு நான் சாய்ந்து விட்டேன். நாஙகள் மழை விட்டும் சில மணித்துளிகள் அங்கிருந்தோம். அந்த நேரத்தில் எங்கள் கடைக்கெதிரே இருந்த பாதையில் ஒரு நாலைந்து பேராவது உருகிய ஐஸ் பாதையில் சறுக்கி விழுந்ததைப் பார்த்திருப்போம். 

இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். எங்கள் குழுவில் 62 பேர் இருந்தாலும் வெறும் 4 நபர்கள் மட்டுமே பால்தாலில் இருந்து அமர்நாத் குகைக்கு நடந்த வந்து பின் நடந்தே திரும்பினர்.

மற்ற எல்லோரும் குதிரையிலாவது இல்லை டோலியிலாவதே இந்த திரும்பி வரும் பயணத்தை மேற்கொண்டனர். 

அந்த நால்வரில் ஒருவரான திரு சிவக்குமார் அப்போது எங்கள் டென்டிற்கு வந்திருந்தார். அவர் மனோபலம் எங்களை ஆச்சர்யப்பட வைத்தது. (பின்னர் ரெயில் பயணத்தில் தான் பட்ட உடற்துன்பங்களை என்னுடன் பகிர்ந்துக் கொண்டார்).அவருக்காக சில மணித்துளிகள் அங்கிருந்துவிட்டு கிளம்பினோம். 

அந்த நேரத்தில் நாங்கள் நடந்து வந்த பாதையே மழையால் சற்று மாறியிருந்ததைக் கண்டோம். ஒரு இடத்தில் உருகிய ஐஸூக்குள் நான் காலை வைத்து அது உடைந்து ஒரு கால் ஷூவையும் சாக்சையும் குளிர் நீரில் நனைத்துக் கொண்டேன். ஒருக்கால் ! (அந்தக் கால்) செய்த பாவத்திற்கான தண்டனையோ என்னவோ? 

பின் குதிரை பேசி (இந்த முறை குதிரைகளை நன்றாக பார்த்து கிட்டதட்ட அந்த குதிரையையே விலைக்கு வாங்குபவரது கூர்மையுடன்) குதிரை ஒன்றை மாற்றி பின் செட்டிலானோம். மெள்ள அக்குதிரைகள் பால்தாலை நோக்கி நடையிட்டன. 

குகையை மீண்டுமொருமுறை திரும்பி கண்களால் படமெடுத்து விட்டு கிளம்பினோம்... 

பம் பம் போலே......போலே.... 

பம் பம் போலே. 

(அமர அனுபவங்களுக்கு நிறைவு. நிறைவு எழுத்தில் மட்டுமே. ஆனால் அவை நம் நினைவுகளில் என்றென்றும் உறைந்திருக்கும்.)

கோவிந்த் மனோஹரின் நன்றி நவிலல்:-
அமரத்துவத்துமான அந்த கணங்களில் மறுமடியும் என்னை திளைக்க வைத்த அஷ்வின் அவர்களுக்கு ஒரு பெரிய விர்ச்சுவல் காஷ்மீர் சால்வைப் போர்த்துகிறேன். 

நிஜ யாத்திரைப் பயணத்தில் உள்ள துன்பமான உணர்வுகளை முழுமையாக வடிகட்டி இன்புற்ற கணங்களை மட்டுமே எழுதும் போது உணர்ந்தேன். ஆக இந்த செயற்கரிய செயலை(?) என்னை செய்விக்க ஊக்கப்படுத்தி என் எழுத்துக்களுக்கு ஒரு வேடந்தாங்கலையும் ஏற்படுத்தித் தந்த அஷ்வினுக்கு என் இதய பூர்வமான நன்றிகள் பல. 

மேலும் இந்த பதிவினைப் படித்த நண்பர்கள் பலர் என்னை பலமுறை நேரில் பாராட்டினாலும் கீதா மேடம் போன்ற ஆன்றோர் பலர் நோக்கும் ஒரு ப்ளாக்ஸ்பாட்டில் என் எண்ணப் பதிவுகளை வாரந்தோறும் அயராமல் (நான் சீக்கிரம் யாரையும் அயர வைத்து விடுவேன் - அதாவது நேரத்திற்கு என் படைப்புகளை தராமல் பல சமயங்களில் திரு.அஷ்வினை படுத்தியுள்ளேன்) வெளியிட்டு அதற்கான கருத்துரைகளை எனக்கு இமெயில் செய்தும் அவற்றுக்கும் அவரே என் சார்பில் நன்றியறிந்ததும் என்னை அவருக்கு மிகவும் கடமைப்பட்டவனாக்கியுள்ளது. 

ஒரு இடுகையில் அவர் "நான் எழுதிய வைஷ்ணோதேவி-அமர்நாத் தொடர் பயணக் கட்டுரையில் சில விஷயங்களை குறிப்பிடாமல் தவிர்த்து விட்டேன். நண்பர் கோவிந்த் மனோஹரின் பயண அனுபவங்களைப் படிக்கும் போது அந்த அனுபவங்களை அவரைப் போன்று சரியாக வெளிப்படுத்த என்னால் இயலாது போனமை தான் நான் அவற்றை எழுதாமைக்கு சரியான காரணம் என புரிந்தது" என்று கருத்திட்டிருந்தார். இதைப் படித்ததும் என் மேல் அவர் வைத்திருக்கும் அன்பு எவ்வளவு ஆழமானது என்று மற்றுமொரு முறை புரிந்தது. 

அவர் படைப்புக்கும் என் பகிர்வுக்குமான வித்தியாசம் ஒரியன்டேஷன் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது தான். அதாவது எழுத எடுத்துக் கொண்ட நிலைப்பாடு. அவர் "தகவலறிவு பகிர்வை" தளமாகக் கொண்டார் நானோ "அனுபவ பகிர்வை" தளமாகக் கொண்டேன். 

அவரது பதிவில் அமர்நாத் செல்லுவோர்க்கான அத்தனை செய்திகளும் இருக்கின்றன. ஆதலின் என்னிடம் புதிதாக சொல்ல தகவல்களை விட என் அனுபவம் இருந்தது. அதனால் அதை பகிர்வுத் தளமாக கொண்டேன். வேறுபாடு இது மட்டுமே. 

அவர் வலைப் பக்கத்தில் என்னை எழுத வைத்து அதையும் தாயுள்ளத்துடன் பாராட்டிய அஷ்வினுக்கு உங்கள் எல்லோரது சார்பாகவும் நான் நன்றி நவில்கிறேன். 

ஆன்றோர் பலர் அன்புடன் வெளியிட்ட, வெளியிடப் போகின்ற பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. 

மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதில் சந்திக்கலாம். 

இவண்

தங்கள்,

கோவிந்த் மனோஹர்.
-------------------------------

உங்களுடன் அஷ்வின்
பிரிய வலைப்பதிவர்களே.
மனம் இல்லாமல் தான் இந்த பதிவுகளை நிறைவு செய்கிறோம்.  சுவையான அனுபவங்களை தொடர்ந்து தந்த கோவிந்த் மனோஹருக்கும், பொறுமையுடன் வாசித்து பின்னூட்டங்கள் தந்து வரும் உங்களுக்கும் எங்கள் இதய நன்றி. 

கோவிந்த் மனோகர் வழங்கும் ஒரு புகைப்படத் தொகுப்பை அடுத்த இடுகையில் இட்டு இத் தொடரை நிறைவு செய்கிறேன். 

எல்லாம் வல்ல பரமனருள் அனைவருக்கும் எல்லா நலமும் தர பிரார்த்திக்கிறேன். 

ஓம் நமசிவாய.  

Sunday, March 6, 2011

பாகம் மூன்று: பகுதி பன்னிரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை 12: சிவதரிசனமும் சுயநிதர்சனமும்

வரிசையில் நிற்கும் போது குடும்பத்தோடு வந்திருந்த யாத்ரீகர்களுடன் நிற்க வேண்டி வந்தது. 

திருப்பதியில் வரிசையில் நிற்கும் போது கலகலவென பேசிக் கொண்டிருக்கும் பக்த கோடிகளைப்போலவே இவர்களும் சிரித்து பேசிக் கொண்டிருந்தது அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பறை சாற்றிற்று.  நாம் அரிசி சாப்பிடும் பகுதியினரானதால் குளிர் தாங்குவதில் கோதுமை உணவுக்காரர்களைவிட சற்று சளைத்தவர்கள் தாம். 

அதனால் அவர்கள் அந்த பயணத்தின் முக்கிய தருணத்தில் இயல்பாய் இருப்பதைப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது (எந்த செயற்கைத்தனமும் இல்லை). 

எங்களை அனுமதித்த வேளையில் மெள்ள மேலேறி அமரநாதன் மெள்ள மெள்ள எங்களுக்கு தரிசனம் தந்த பொழுதுகளில் சற்று சிலிர்த்துத்தான் போனேன்.

ஆனால் இரும்பு தடுப்புக்களின் பின்னால் (1995ல் அப்படி நான் பார்க்கவில்லை) அந்த அற்புத காட்சியை சிறை வைத்திருந்த மனிதர்கள் மேல் எனக்கு கோபமும் வருத்தமும் ஏற்பட்டது. 


மேலும் நெருங்கிச்  சென்று பார்த்ததில் பக்தர்களின் ப்ரசாத தட்டுகளும் பூக்களும் இலைகளும் சிகப்பு நூல்களும் அந்த ஐஸ் மேடையில் பரந்து விரிந்து படர்ந்திருந்ததும் எனக்கு சற்று அதிருப்தியாக இருந்தது. 


மனிதர்களின் ஆக்கிரமிப்பில் அந்த இடம் (1995க்கும் 2010க்குமான கால இடைவெளியில்) நிறையவே மாறியிருந்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 

பக்தர்கள் தாயைக் கண்ட சேயாகத்தான் இத்தகைய புனித இடங்களில் நடந்து கொள்கிறார்கள்.

அவ்வேளைகளில் இடத்தின் புனிதத்தை விடவும் (சமயங்களில் மருத்துவ மனைகளில் கூட நாம் ஓங்கார அழுகையையும் வெடிச் சிரிப்பொலிகளையும் கேட்டிருக்கிறோமல்லவா?) தங்களின் பக்திப் பெருக்கமே அவர்களுக்கு முதன்மையாய்த் தெரியும்.

பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த பக்தி பரவசமும் கெடாமல் இடத்தின் புனிதமும் கெடாமல் பார்த்துக் கொள்வது சற்று சிரமமான கடமையாகத்தான் உள்ளது. அதுவும் இந்த குகைக்கான சிறப்பம்சம் என்னவென்றால் வருடத்தில் அதிகபட்சம் இரண்டு மாதங்களே இங்கு மனிதர்கள் நடமாட, சேவைகள் புரிய முடியும். 

ஆதலின் பெரிய அல்லது நிரந்தரமான வசதி வாய்ப்புக்களை இங்கே யாருமே எதிர்பார்க்க முடியாது மேலும் செய்து தரவும் முடியாது. ராணுவத்தின் உதவியில்லாமல் இங்கு எதுவுமே நடக்கவியலாது. ஆக அங்கு செல்லும் பக்தர்களே தங்கள் கடமைகளாக இந்த இடத்தின் புனிதத்தைக் காக்கும் விதமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. கங்கைக்கு நேர்ந்த கதியை நாம் இந்த தருணத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஆனாலும் அந்த லிங்க வடிவம் எதையோ அமானுஷ்யமாக நமக்கு உணர்த்துவதாக இருந்தது. 

அப்படியே ஒரு ஓரத்தில் நின்று மொத்த இடத்தையும் கண்களால் பருகினேன். குகையின் கூரைப்பகுதி சுமார் 40லிருந்து 50 அடி உயரமிருக்கலாம். மேலே இருந்த ஏதோ ஒரு ஆதாரமான இடத்தில் ஒரு புறா இடம் மாறி இடம் மாறி பறந்து பறந்து உட்கார்ந்தது.. .

இதோ இன்னொன்று... 

இதோ இன்னொன்று...  

அட ! மொத்தம் மூன்று புறாக்கள். !!!

அந்த புறாக்களைப்பற்றி பெரிய கதையென்று கூறப்பட்டு அதைப் பார்ப்பதே பெரிய புண்ணியமென்ற செய்தி அல்லது நம்பிக்கை அங்கே உண்டு. சென்ற முறை அந்த வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை ஆனால் இம் முறை அந்த காட்சி கிடைக்கப் பெற்றேன். பார்வதிதேவியிடம் அமரத்துவம் பற்றி சிவனார் போதிக்கும் பொழுது அங்கிருந்த முட்டையிலிருந்த புறாக்கள் இரண்டு அதை கேட்டு விட்டன. அதனால் அவை இரண்டும் அமரத்துவம் பெற்று விட்டது என்றும் இன்று வரை அவை அந்த இடத்திலேயே இருப்பதாகவும் இந்துக்கள் நம்பிக்கை. 

அமரத்துவம் பற்றி போதித்த கயிலைநாதனே அமர்நாத் அல்லது அமரநாதன் என்று போற்றப்படுகிறார். இக்குகைக்கு வருகை தரும் யாருக்கும் அமரத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டென்பதும் ஒரு நம்பிக்கை. 


கூட இருந்த அஷ்வினே சற்று நேரங் கழித்து தான் என் ஞாபக்திற்கு வந்தார். அவர் ஏதோ ஸ்லோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அவர் பக்தி நிலையை மிகவும் அருகிலிருந்து பார்த்தவனானேன். கடவுளைப்போலவே உண்மையான பக்தியும் புனிதமானது, பார்க்க பரவசமானது.  அவர் உணர்ச்சிப் பிழம்பாக இருந்ததால் அவரிடம் அதிகம் பேசவில்லை. 

அந்த சமயத்தில் கேமிராவுடன் வந்த ஒருவர் போட்டோ எடுக்கவா? ஒரு ஸ்னாப் 100 ரூபாய் என்றார். சட்டென்று வேண்டாமென நான் மறுத்து விட்டேன். அதற்கு பிற்பாடு மிகவும் வருத்தப்பட்டேன். 

இன்றும் ஏன் அந்த வாய்ப்பை நான் மறுதலித்தேன் என்ற கேள்வி என்னை குடைந்து கொண்டு இருக்கிறது. அதற்கான விடைகளாய் நான் பலவாறாக யோசிக்கிறேன் இப்போதும். போட்டோ அந்த இடத்தின் புனிதத்தை கெடுத்துவிடும் என்று நான் நினைத்தேனோ என்று வியந்து போகிறேன் சில வேளைகளில். 

அந்த இடத்தின் புனிதத்தின் மேல் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடாய் அந்த மறுதலிப்பு தென்படுகிறது சில வேளைகளில்.

நான் என் மனக்கண்ணால் பார்த்து இதயத்தில் பதித்து கொண்ட காட்சிக்கு என் நினைவு உள்ளவரை நீங்காத உணர்வாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அமரநாதனை பிரிய மனமில்லாது குகையைவிடடு இறங்கும் வழியில் ஒரு சடாமுடி சிவனடியார் கால்களில் எல்லோரும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கிச் சென்றனர். அவரும் கைகளிலிருந்த தட்டில் உள்ள குங்குமமோ வீபூதியோ பக்தர்களுக்கு நெற்றியிலிட்டு காணிக்கைப் பெற்றுக் கொண்டிருந்தார். 

எனக்கு அவரிடம் "சென்னைத்தனம்" இருப்பதாய்ப் பட்டதால் நான் அவரிடம் ஆசிபெறவில்லை. அவர் அதைக் கண்டு சின்ன புன்முறுவல் ஒன்றை எனக்கு பரிசாக தந்தார். நாங்கள் கண்களால் பேசிக் கொண்டது நிஜம்.! 

முதல் நாள் பள்ளி வகுப்புக்குச் செல்லும் குழந்தை தன் தாயை திரும்பி திரும்பிப் பார்த்து கொண்டு செல்வது போல நான் அந்த குகையோவியத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே கீழே இறங்கினேன். 

என் பழுதுபட்ட கண்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிரப்பிக் கொண்டேன். இது வாழ்நாள் முழுக்க பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய பொக்கிஷமல்லவா? 

மறுமுறை கிடைக்க திருவுளம் எப்படியோ? 

அமரத்துவமான பொழுதுகளிலிருந்து சாதாரண கணங்களுக்கு திரும்பினேன். 

கீழே இறங்க ஆரம்பித்தோம்.........

(கோவிந்த் மனோகர் அடுத்த இடுகையில் நிறைவு செய்வார்)

இதய நன்றி:
படங்கள் தந்த கூகிலாருக்கு. 
பதிவு தந்த கோவிந்த் மனோஹருக்கு.
பின்னூட்டங்களையும், ஆதரவையும் தந்து வரும் அனைவருக்கும்.

அடுத்த பதிவு அடுத்த ஞாயிறு அன்று 
(வரும் புதன் அன்று நான் ஊரில் இல்லை)
-அஷ்வின்ஜி.

Sunday, February 20, 2011

பாகம் மூன்று: பகுதி எட்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.


இடுகை எட்டு: தேடலின் இனிமை 

நாங்கள் மிகவும் அசதியாக உணர்ந்ததினால் அப்படிப்பட்ட ஒரு கடை கம் டென்டடில் இடம் பிடித்து சிறிது அமர்ந்தோம். அஷ்வின், தான் கொண்டு வந்த அக்ரூட் மற்றும் பாதாம் பருப்புகளையும் பேரீச்சம் பழங்களையும் எங்களுடன் அன்புடன் பகிர்ந்து கொண்டார். 

அதை உட்கொண்டவுடன் தண்ணீர் பருகியதும் மிகவும் தெம்பாக உணர்ந்தோம். கூடவே சேர்ந்து கொண்ட ஓய்வும் எங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. நல்ல நிலையிலிருந்து உற்சாக நிலைக்கு செல்லவில்லை. மிகவும் தொய்ந்திருந்த நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மேம்பட்டோம். 

அந்த கடைக்காரனின் உபசரிப்பில் நெகிழ்ந்து அவனிடமே (மிகவும் வயதில் இளையவனாக இருந்ததால்{"ன்"}) பூஜைப் பொருட்களை வாங்க முடிவு செய்தோம் அப்படியே எங்கள் உடமைகளையும் அங்கேயே வைத்து விட்டு வெறும் தடி மட்டும் எடுத்து கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது கடைக்காரன் தோலினாலான எந்த பொருளையும் குகைக்கருகே அனுமதிக்க மாட்டார்கள் என்றுரைத்தான். 

அப்போது நாங்கள் எங்களிடம் உள்ள தோல் பொருட்களை தேட ஆரம்பித்தோம். மணிபர்ஸிலிருந்து பெல்ட் வரை செல்போன் கவர் முதல் காமிரா பவுச் வரை எல்லாவற்றையும் களைந்து எங்கள் பைகளில் வைத்து பின் கிட்டதட்ட நிராயுதபாணியாக நின்றோம். 

எவ்வளவு பொருட்கள்? 

ஞானம் பெறும் வழி துறப்பதிலா? 

அல்லது அடைவதிலா? 

கோடி பெறும் கேள்வி !

இருப்பதை இழப்பதே ஞானம்.அதாவது உடமைகளை, அதாவது மனதில் உள்ள உடமைகளை. ஆசை, கோபம், காமம், பொறாமை இன்னும் என்னென்னமோ அத்தனையையும் புத்திசாலித்தனமென்ற போர்வையில் வாழவேண்டும் --அதுவும் இப்படித்தான் வாழவேண்டும்--என்ற அவாவில் சேர்த்துக் கொண்ட இயல்புகள். தேவையற்ற இயல்புகள். பிறக்கும் போது இல்லா இயல்புகள். வாழும் போது வழியில் கிடைத்த இயல்புகள்.  எல்லாவற்றையும் சேர்த்து சேர்த்து, எப்போதாவது பயன்படும் என்ற எண்ணத்தில் எப்போதுமே பயன் படாத இயல்புகள். 

எப்படிக் கரைசேர்வது? கரையேற கனம் தடையல்லவா? 

கனம் குறைக்கும் மார்கமே ஞான மார்கம். 

பொருட்களை இறக்கி வைக்கும் போது உடல் கனம் குறைந்தது. மனகனம் அதிகரித்தது. 

ஆம் ! இந்த பொருட்களின் மேலுள்ள ஆசை, ஆகர்ஷணம்.! 

சமவெளி சிந்தனைகளின் பிரதிநிதியான எங்களுக்கு இந்த பொருட்கள் பத்திரமாக திரும்பி வரும் வரை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது நியாயம் தானே? ஆனால் வெண்மை தோலில் மட்டுமில்லை அவர் தம் மனதும் வெள்ளையென்று மற்றுமொரு முறை அங்கு நிரூபித்தான் அந்த இளைஞன். 

ஆம்! விட்டு சென்ற நிலையிலேயே எங்கள் பொருட்கள் அங்கிருந்தன, திரும்பி வந்த போது. நான் செய்த மிகப் பெரிய தவறு என்னுடைய ஹேன்டிகேம் கேமிராவை அங்கு வைத்து விட்டு போனது. 

இல்லை.. இல்லை.. நீங்கள் தவறாக எண்ண வேண்டாம் அது இன்னமும் என்னிடம் பத்திரமாக உள்ளது. கண்கொள்ளா காட்சிகள் கொட்டிக்கிடக்கும் அந்த மலைச்சரிவுகள், உடல் வேதனையை இரண்டாம் பட்சமாக கருதிய வயதான யாத்ரீகர்கள், உடல் ஊனமுற்ற மற்ற மாநிலத்து சகோதர சகோதரிகள், சில குழந்தைகள், கைக குழந்தையுடன் வந்திருந்த இளம் தாய்கள், கடுங்குளிரில் வெற்றுடம்புடன் அங்காங்கே அமர்ந்திருந்த சிவயோகிகள், இவர்களனைவருக்கும் இலவச உணவு தயரித்துக் கொடுக்கும் லங்கர்களில் பணிசெய்யும் செல்வந்தர்கள், இவர்களூடே தனியாக தெரிந்தாலும் நமக்கு பூஜைப் பொருட்களையும் மற்ற சேவைகளையும் நம்மை கசக்காமல் பரிமாறும் காஷ்மீரிய சகோதரர்கள் என்று பதிவு செய்ய வேண்டிய ஏராளமான விஷயங்களுக்காக நான் அதை என்னுடன் சிரமம் பார்க்காமல் எடுத்து சென்று விட்டிருக்க வேண்டும். நான் அந்த விஷயங்களை எவ்வளவு தான் ரம்மியமாக ஸ்லாகித்து எழுதினாலும் அதைக் காட்சியாக காணுங்கால்.... அடடா.... 

ஊனம் மனத்தில் இல்லை. 
(நன்றி: கூகிள் இமெஜஸ்)


சங்கம் டாப். ஒரு மலை முகட்டில் 
இருந்து மற்றொரு முகட்டிற்கு...

 இறையருள் நாடி.. மனிதரில் எத்தனை நிறங்கள்.?

 குகைப் பகுதி. குதிரைகள் நம்மை இறக்கி விடும் இடம்.
இங்கிருந்து மூன்று கி.மீ. முன்னே நடந்தால் குகையை அடையலாம்.

உறைந்திருக்கும் பனிப்பாறை(தை)

வழியில் இளைப்பாறும் குதிரைகள்...
  

  குகைப் பகுதியில் இருந்து பிரவகிக்கும் அமர கங்கை 

(நன்றி: அனைத்துப் படங்களும் கூகிள் இமெஜஸ்)
இதற்காகவாவது என்னை படைத்த சக்தியே! எனக்கு இன்னொரு முறை அங்கு செல்ல திருவுளம் கொள்ள வேண்டும். ஆம். அப்படிப்பட்ட அந்த காட்சிகளை என் மனக்கண்ணும் அகக் கண்ணும் கண்டு களித்தது. ஆனால் அதை பதிவு செய்ய என்னிடம் கேமிரா இல்லை. 

இதுவும் சிவனருளோ. தெளிவாக குழப்பும் சித்தனாக தெரிந்தான் சிவன் எனக்கு. நீங்கள் நாத்திகராக இருந்தாலும் ஆத்திகராக இருந்தாலும் அமர்நாத் யாத்திரை அல்லது பயணம் நீங்கள் விரும்பும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நான் ஒன்றும் பெரிய பக்தனில்லை. 

ஆனால் ஒரு தேடல் எப்போதும் என்னிடம் இருந்திருக்கிறது. அந்த தேடல் ஒரு சுகானுபவம். அதை மறுமடியும் அனுபவிக்கும் முகமாகவே இந்த பயணக்கட்டுரை எனக்கு தெரிகிறது. 

அந்த கணங்களை மறுபடியும் வாழும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. 

எழுதுகோல் எனது, எழுதும் மை எனது, எழுத்து எனது, எண்ணம் எனது.

ஆனால், எழுதுவது நானா(?)வென்ற வினோதமான வினா என்னுள் எழுகிறது. ஏனெனில் பிரயாணக்கட்டுரை எழுதுவது எனக்கு இது முதலனுபவம். ஆனால் தங்கு தடையின்றி அங்கு பார்த்ததை, அனுபவித்ததை தொடர்ந்து எழுத வருகிறது. எப்படி? 

இனிது இனிது..

தேடல் இனிது..

தேடல் தேனினும் இனிது..

தேடும் பொருளினிது..

தேடும் களமினிது..

தேடும் காலமினிது...

(இனிமை தொடரும்...)