Saturday, October 10, 2009

ஷ்யமந்தக மணி -1


துவாபர யுகத்தில், துவாரகாபுரியில் ஸ்ரீகிருஷ்ண பகவான் நல்லாட்சி புரிந்து வந்த நேரத்தில், அந்த பட்டணத்தில் சத்ரஜித் என்பவன் இருந்தான்.  அவன் பரம ஏழை. ஆனால் சூரிய பகவான் மேல் சிரத்தையுடன் கூடிய பக்தி கொண்டவனாக அவன் இருந்தான். தினமும் சூரிய பகவானை த்யானித்து பின்னர் தனது வாழ்க்கை நடைமுறைகளை பின் பற்றி வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த சூரிய பகவான் ஒரு நாள் அவன் எதிரே பிரத்யட்சமாகி அருள் புரிந்தார். அதைக் கண்டு பெரும் இன்பம் அடைந்தான் சத்ரஜித்.  
சூரிய பகவான் அவனுக்கு வேண்டிய வரம் தர சித்தமானார். 'சத்ரஜித், உனக்கு என்ன வரம் வேண்டுமோ, தயங்காமல் கேள். நான் அதை உனக்குக் கொடுப்பேன்', என்றார். சத்ரஜித் சூரியனிடம் தன ஏழ்மையைப் போக்க வரம் வேண்டினான். அதை கேட்ட சூரிய பகவானும், அவனிடம் ஒப்பற்ற ரத்தினக்கல் ஒன்றைத் தந்தருளினார். 'சத்ரஜித், இந்த மணிக்கு 'ஷ்யமந்தக மணி' என்று பெயர். தினமும் காலையில் உன் பூசனைகள் முடிந்ததும், இந்த மணி உனக்கு தங்கக் காசுகளை வழங்கும். நீ அதைக் கொண்டு வளமுடனும், நலமுடனும் உன் குடும்பத்தாரோடு நீண்ட நாட்கள் ஆனந்தமாய் வாழ்ந்திருப்பாயாக" என்று கூறி மறைந்தார்.  
ஷ்யமந்தகமணி சூரியன் போல பிரகாசித்தது. அதை கண்டு மகிழ்ச்சி அடைந்த சத்ரஜித் அதை வீட்டுக்குக் கொண்டு சென்றான். விஷயம் கேள்விப்பட்டு அக்கம் பக்கம் உள்ளோர் கூட்டம் கூட்டமாக் வந்து ஷ்யமந்தக மணியைப் பார்த்து வியந்து பாராட்டிச் சென்றனர். சிலர் சாட்சாத் சூரிய பகவானே ஷ்யமந்தகமணி வடிவில் வந்திருப்பதாக பாராட்டினர். வேறு சிலர், இந்தக் கல்லின் மூலம் ஏதோ தீங்கு விளையப்போவதாக அச்சம் தெரிவித்தனர். "சூரியனே பூமிக்கு வந்து விட்டால் பூமி என்னாவது?" என்றார்கள்.  
மக்களில் சிலர் துவாரகாபுரி அரசனான ஸ்ரீகிருஷ்ணரிடம் சென்று விஷயத்தை தெரிவித்தனர். தமது அச்சத்தையும் கூறி நேரக்கூடிய ஆபத்திலிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர்.  ஸ்ரீ கிருஷ்ணர் மக்களைப் பார்த்து, "நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். நான் என்னவென்று விசாரிக்கிறேன், நீங்கள் தைரியமாக வீடு செல்லுங்கள்," என்று அவர்களை தேற்றி அனுப்பினார்.  
நாட்டின் குடிமகன் என்ற வகையில் சத்ரஜித் ஷ்யமந்தகமணியை எடுத்துச் சென்று ஸ்ரீகிருஷ்ணரிடம் காட்டினான். அது அவன் கையில் வந்த விவரத்தினைச் சொன்னான். ஷ்யமந்தகமணியை கையில் வாங்கிப் பார்த்த ஸ்ரீ கிருஷ்ணர், 'அற்புதம்! என்ன ஒரு பிரகாசம்? என்று சொல்லி புகழ்ந்தார். பின்னர், சத்ரஜித்தை பார்த்து, "சூரியனை போன்று பிரகாசிக்கும் இந்த ஷ்யமந்தகமணி உனக்கு தினமும் பொன்னை வாரி வழங்கக் கூடிய வல்லமை படைத்தது. ஏற்கனவே மக்கள் இது பற்றி வியந்து பேசுவதால் கொள்ளையர் வந்து உன்னிடமிருந்து இதனை களவாடிச் செல்கின்ற வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த மணி என் அரண்மனையிலேயே பாதுகாப்பாக இருக்கட்டும். நீ தினமும் காலையில் வந்து உனக்கு சேர வேண்டிய பொன்னை வாங்கி கொண்டு செல்வாயாக. கிடைத்தற்கரிய இந்த பொக்கிஷம் என் பாதுகாவலில் இருப்பதே நல்லது," என்று கூறினார். 
ஸத்ரஜித் ஸ்ரீகிருஷ்ணர் மேல் மதிப்பு வைத்திருந்தான். ஆனால், தவமாய்த் தவமிருந்து பெற்ற இந்த ஷ்யமந்தகமணியை இழக்கத் தயாராக இல்லை. மேலும் ஸ்ரீகிருஷ்ணர் நைச்சியமாகப் பேசி இந்த மணியைக் கவர நினைப்பதாக எண்ணினான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,  'அரசே, நீண்ட நாட்கள் தவமிருந்து இந்த மணியை நான் சூரியனிடமிருந்து பெற்றேன். மேலும் இதை பத்திரமாக் வைத்துக் கொள்ளும்படி அவரது ஆணை. இதற்கு மாறாக நான் இதை ஒருவேளை உங்களிடம் தந்து விட்டால், சூரிய பகவான் என்னை கோபித்துக் கொண்டால் என்ன செய்வது? நீங்களோ அரசர், நீங்கள் கேட்டு கொடுக்கவிட்டாலோ தண்டித்து விடுவீர்கள். அதே சமயம் சூரிய பகவான் என்னை சபித்துவிட்டால் நான் என்ன செய்வது" என்று கேட்டான். ஸ்ரீக்ருஷ்ணருக்கா தெரியாது சத்ரஜித் உள்ளத்தில் என்ன எண்ணம் உள்ளது என்று? அவர் உடனே, அவன் கையில் ஷ்யமந்தக மணியைக் கொடுத்து, 'சத்ரஜித் பயப்படாதே. உன் நன்மையைக் கருதி தான் நான் அப்படி சொன்னேன். இந்த மணி எனக்கு வேண்டாம். இது உனக்குச் சொந்தமான பொருள். எனவே நீ இதைக் கொண்டு உன் இல்லம் செல்வாயாக," என்றார். 
இதை கேட்ட சத்ரஜித் மகிழ்ச்சியுடன் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி விடை பெற்று வீடு ஷ்யமந்தகமணியுடன் வீடு வந்து சேர்ந்தான். மணியை பாதுகாப்பான இடத்தில் வைத்தான். தினமும் அதற்கு பூசைகள் செய்ததும், அது அவனுக்கு பொன்னைத் தந்தது. அவன் வேண்டிய துணி மணிகள் எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக இருந்தான். மிக பெரிய தனவந்தனாகவும் மாறினான். சத்ரஜித்துக்கு பிரசேணன் என்ற தம்பி ஒருவன் இருந்தான். தம்பி மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். அவன் கேட்டதை எல்லாம் வாங்கித் தந்தான். பிரசேணனும் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தான். பகட்டாக உடை அணிந்து நண்பர்களுடன் வீணே பொழுது போக்கிக் கொண்டிருந்தான். ஒரு நாள் பிரசேணன் தன நண்பர்களுடன் காட்டுக்குச் சென்று வேட்டையாட விரும்பினான். அப்போது ஷ்யமந்தகமணியை தன் மார்பில் அணிந்து கொண்டு போய்வர ஆசைப் பட்டான். அண்ணனிடம் சென்று தன் விருப்பத்தினை தெரிவித்தான். சத்ரஜித்தும் மறுப்பேதும் சொல்லாமல் ஷ்யமந்தக மணியை தம்பியிடம் கொடுத்தான்.  'ஜாக்கிரதையாய் போய் வா', என்று கூறி பிரசேணனை, சத்ரஜித் வழியனுப்பி வைத்தான். பிரசேணனும் பகட்டான உடை பூண்டு, ஷ்யமந்தக மணியை அணிந்து கொண்டு தன் நண்பர்கள் புடை சூழ காட்டுக்குள் வேட்டையாட சென்றான்.  

(தொடரும்)





No comments: