Sunday, June 24, 2012

பன்னிரண்டாவது ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை.

ஓம் சிவோஹம்.
வேதாந்த வைபவம் வலைப்பூவின் பக்கங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் தங்களை பணிந்து வணங்கி வரவேற்கிறேன். தொடர் பதிவிடுவதில் ஒரு மீண்டும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது. மன்னியுங்கள். இறையருளால் யாவும் நலமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நேரம் இன்மையே முக்கிய காரணம்.

ஓம்  நமசிவாய.

ஜூலை 2010-இல் வைஷ்நோதேவி-அமர்நாத் யாத்திரை (இணைப்பைச் சொடுக்குக) சென்று வந்து அந்த சுவையான அனுபவங்களை உங்களிடையே பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். 

காண்போர் நெஞ்சில் கலந்து 
உணர்வில் உறைந்த அமரநாதன்.

அந்த யாத்திரையின் போது அமர்நாத் மலை அடிவார (பால்டால்) முகாமில் நான் சந்தித்த குன்னூர் சிவனடியார் பவானி இரவி அச்சமயம் தனது தலைமையில் ஒரு குழுவோடு பத்தாவது முறையாக அமர்நாத் வந்திருந்தார். அந்தச் சமயத்தில் திரு.இரவியின் தொடர்பு எனக்குக் கிடைத்ததும் சிவனருளே என்று சொல்லவேண்டும்.

கடந்த ஆண்டு (2011) குன்னூர் இரவி அவர்கள் தனது துணைவி, தாயார் மற்றும் சிவனடியார்களுடனும் ஒரு குழுவாக பதினொன்றாவது முறையாக அமர்நாத் செல்ல திட்டமிட்டு என்னையும் அவர்களுடன் வர அழைத்த போது அந்த புனித யாத்திரையில் கலந்து கொள்ளும் நற்பேறு எனக்கு வாய்க்கவில்லை.

எனினும் அவர்கள் புறப்படுவதற்கு முன்னதாக குன்னூரில் நிகழ்த்திய சிவாபிஷேகம் மற்றும் அன்னதான வைபவத்தில் கலந்து கொண்டு அந்து குழுவுடன் குன்னூரில் இருந்து சென்னை வரை இரயிலில் பயணித்து சென்னைக்கு வந்து அவர்களை அமர்நாத்துக்கு வழியனுப்பி வைத்தேன். அந்த அனுபவங்களை அமரநாதம்-தொடரும் சிவகணங்கள்  (படிக்க சொடுக்குக) என்ற பதிவுத் தலைப்பில் இந்த வலைப்பூவில் பகிர்ந்து கொண்டேன்.

குன்னூர் அடியார்கள் இந்த  ஆண்டும் (2012) ஜூலை மாதம் 20 அன்று குன்னூரில் இருந்து பன்னிரண்டாவது ஆண்டு அமர்நாத் புனித யாத்திரையை  சிவனடியார் பவானி இரவி அவர்களின் தலைமையில் மேற்கொள்ள ஒரு குழு இறையருளால் சித்தமாக உள்ளது.  

வழக்கப்படி மிக சிறப்பான வகையில் இந்த ஆண்டும்  குன்னூர் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிவபெருமானுக்கு ஒரு சிறப்பான அபிஷேகமும், அன்னதான வைபவமும் ஏற்பாடு ஆகி உள்ளது. 

அவர்களது  அழைப்பை ஏற்று இந்த தெய்வீகமான வைபவத்தில் கலந்து கொள்ள இருக்கிறேன். சென்று வந்ததும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த குழுவினரின் தொடர் புனித யாத்திரை வெற்றி பெற எல்லாம் வல்ல அம்மையப்பனை பணிந்து வேண்டுகிறேன். 

அமர்நாத் செல்ல இயலாதோர் இந்த யாத்திரைக் குழுவுக்கு காணிக்கைகளை செலுத்தி அருள் மிகு அமரநாதன் இன்னருள் பெறலாம். 

யாத்திரைக் குழுவுக்கு உதவிகளை செய்ய விரும்புவோர் குன்னூர் இரவி அவர்களை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவ வேண்டுகிறேன்.

சிவநெறிச் செல்வர் குன்னூர் இரவி  அவர்கள்,
ஸ்ரீ ஹரி ஓம் அமர்நாத் யாத்ரா சேவா சங்கம், 
குன்னூர் (நீலகிரி), தமிழ் நாடு.
கைபேசி எண்: 94878 65751


இந்த பதிவைக் கண்ணுறும் இறையடியார்களுக்கு எல்லா நலமும், வளமும் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்.

சிவனருள் பொலிக.


'அன்பே சிவம்' அஷ்வின்ஜி.
சென்னை.

No comments: