Sunday, October 23, 2011

3. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


நேபாளப் பயணம்: பசுபதிநாதரை தரிசித்தோம்.

இடுகை மூன்று.


சிவபாலன் (பசுபதிநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில்) 

திருச்சிற்றம்பலம்.
அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே
..
தாயுமானவரின் பராபரக்கண்ணி.

பசுபதிநாதர் அழைக்கிறார்.

நான் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்த சிவனடியார்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் (மார்ச் ஏப்ரல் மாதங்களில்) தொடர்ந்து சந்தித்து கயிலைப் பயணம் பற்றி பேசினேன். அவர்களுக்கு இந்த ஆண்டு கயிலைப் பயணம் செய்வதில் சில சிரமங்கள் இருந்தன. இந்த அன்பர்கள் குடும்பத்துடன் ஏற்கனவே சார்தாம் யாத்திரை (பத்ரிநாத், திருக்கேதாரம், கங்கோத்ரி, யமுநோத்ரி)  மற்றும் இந்தியாவில் வடக்குவடமேற்குவட கிழக்கு பகுதிகளில் உள்ள மிக பிரசித்தி பெற்ற சிவ/வைணவத் தலங்கள்சக்தி பீடங்களை கடந்த பல ஆண்டுகளாகத் தரிசித்தவர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு நேபாளம் செல்வதற்கான ஆயத்தங்களில் அவர்கள் ஈடுபட்டு இருந்தார்கள்.   

நான் சார்தாம் யாத்திரை இது வரை சென்றதில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஹரித்வார்ரிஷிகேசம் இரண்டு மூன்று முறை சென்ற அனுபவம் உண்டு. கடந்த ஆண்டு (2010ல்) அமர்நாத்-வைஷ்நோதேவி சென்று வந்த அனுபவம் உண்டு.

இந்த இறையடியார்கள் நேபாள யாத்திரை பற்றிய சிந்தனையில் இருந்ததால் இவர்களது சத்சங்கத்தில் இணைந்து கொண்டு பசுபதிநாதரை தரிசிக்க ஒரு வாய்ப்பினை அம்மையப்பனே எனக்குத் தந்திருப்பதாக உணர்ந்தேன்.

அவர்களது பயணத் திட்டத்தை அறிந்து கொண்டேன். என்னையும்  அவர்களுடன் இணைத்துக் கொள்ள தீர்மானித்தேன். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திர வந்த அன்பர்களிடம் நேபாளப் பயணம் பற்றித் தெரிவித்து அவர்களையும் எங்களது பயணத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்களோ, இந்த ஆண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல் இருப்பதை வருத்தத்துடன் என்னிடம் தெரிவித்து விட்டார்கள்.  பசுபதிநாதரை தரிசிக்க என்னையும் சேர்த்து பன்னிரண்டு பேர் பதிவு செய்து கொள்ள தயாரானார்கள்.

இதனைத் தொடர்ந்து நேபாள பயணத் திட்டத்தின் முதல் கட்டமாக செப்டம்பர் மாதப் பயணத்திற்கான எங்களது முன்பதிவுகளை ஜூலை மாதமே செய்தோம். 

        எங்களது பயணத் திட்டம் கீழ்க் காணும் வகையில் இருந்தது. 

  • 14-09-2011 அன்று சென்னையில் இருந்து ரப்திசாகர் (Raptisagar Express)எக்ஸ்ப்ரஸ் மூலம் கோரக்பூர்(Gorakhpur) செல்வதற்கான முன்பதிவு. 
  • 16-09-2011 அன்று மாலை கோரக்பூரை அடைதல். இரவு கோரக்பூரில் தங்குதல்.
  • 17-09-2011 அன்று காலை கோரக்பூரை விட்டு புறப்பட்டு பஸ் மூலம் சுனாவ்லியை அடைதல். (சுநாவ்லி இந்திய-நேபாளம் எல்லையில் இந்திய பகுதியில் அமைந்துள்ளது. கோரக்பூரில் இருந்து பஸ் மூலம் இந்த ஊருக்குச் செல்ல இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஆகும்)
  • பின்னர் இந்திய எல்லையை கடந்து நேபாள எல்லைக்குள் உள்ள பெலாஹியா என்னும் இடத்தை அடைதல். காத்மாண்டு செல்லும் பஸ்கள் (சிறு நடை தூரத்தில் பைரவா பஸ்/விமான நிலையம் உள்ளது) இங்கே கிடைக்கின்றன. அதன் பின்னர் அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் புறப்பட்டு காத்மாண்டு செல்ல. எட்டு மணி நேரப் பயணம் செய்யவேண்டும்.
  • 17-09-2011 அன்று இரவு காத்மாண்டுவில் தங்குதல்.
  • 18-09-2011: அன்று காலை காத்மாண்டுவில் பசுபதிநாதர் திருக்கோவில், புத்தநீல்கண்டா(ஜலநாராயணர்)புத்தநாத் (ஸ்வயம்புநாத்) மற்றும் குஹ்யேஸ்வரி திருக்கோவில்களை தரிசிப்பது.
  • இரவு காத்மாண்டுவில் தங்கி விட்டு பின்னர் அங்கிருந்து முக்திநாதம் (சாளக்ராமம்) செல்வது. முக்திநாதர் தரிசனம் பெற்ற பிறகு நேரம் கிடைத்தால் ஜனக்புரி (சீதாபிராட்டியாரின் ஜனனபூமி) செல்வதுபின்னர் லும்பினி (புத்தர் பிறந்த இடம்) செல்வது என பயணத் திட்டம் ஒன்றினை வகுத்துக் கொண்டோம். (எங்களது பயணத் திட்டங்கள் தேவைக்கு ஏற்ற படி மாற்றி அமைக்கக் கூடிய அளவுக்கு இருந்தன).
  • 22-02-02011 அன்று காலை கோரக் பூர் அடைதல்கோரக்னாதர் திருக்கோவிலை தரிசித்தல் அன்று இரவு தங்குதல்.
  • 23-09-2011 அன்று கோரக்பூரில் இருந்து காலை புறப்படும் ரப்திசாகர் விரைவு வண்டியில் பயணித்து 25-0-9-2011 அன்று நள்ளிரவு சென்னை அடைதல்.
மேற்கண்ட வகையில் எங்கள் பயணத் திட்டத்தை வடிவமைத்துக் கொண்ட பின்னர் பயணத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களுடன் புறப்படுவதற்கான நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம். 

(பகிர்வுகள் தொடரும்)
--
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

No comments: