Friday, October 28, 2011

4. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


நேபாளப் பயணக் கட்டுரை.

பத்தர் பரசும் பசுபதிநாதம். 
இடுகை : நான்கு - பயண முன்னேற்பாடுகள்.

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 
(திருவாசகம் - மாணிக்கவாசகப் பெருமான்)


இரவில் ஒளிரும் அருள்மிகு பசுபதி நாதர் திருக்கோவில் 
(நன்றி: கூகிள் இமேஜஸ்)

எங்கள் அனைவருக்குமே நேபாளம் செல்வது முதல் முறை என்பதால் நேபாளப் பயணம் பற்றிய நிறைய ஐயங்கள் இருந்தன. 

திருக்கயிலைக்கு நேபாளம் வழியாக யாத்திரை சென்று வந்த திருவாளர்கள் கீதாசாம்பசிவம் தம்பதியினரை நேரில் சந்தித்து ஆலோசித்தேன். செப்டம்பர் மாதம் பதினான்கு தேதிகளில் நாங்கள் புறப்படுவதை கேட்ட கீதாஜி "அந்த சமயம் நேபாளத்தில் மழைக் காலமாய் இருக்குமே. சரியாக விசாரித்துத் தானே பயணம் செல்ல திட்டமிட்டீர்கள்?" என்று கேட்டார். செப்டம்பர் பதினைந்தில் இருந்து அக்டோபர் பதினைந்து வரை நல்ல பருவ நிலை நிலவும் சமயம் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னரே பயணத்துக்கு திட்டமிட்டிருப்பதை கூறினேன். கீதா-சாம்பசிவம்  தம்பதியர் எங்கள் பயணம் வெற்றி பெற ஆசி கூறி அனுப்பினார்கள்.

மேலும் விவரங்களைப் பெற கூகிளாரின் உதவியுடன் நேபாளம் பற்றிய செய்திகளை திரட்டினேன். எனது குழுவில் இருக்கும் திரு.மங்களேஸ்வர் இணையத்தில் இருந்து நிறைய செய்திகளை திரட்டித் தந்தார். 

எண்ணங்கள் தோறும நேபாளம் நிறைந்திருக்கநேபாளம் பற்றி திரு.அருசோ எழுதியுள்ள புத்தகத்தை மயிலை இராமகிருஷ்ணமடம் நூலகத்தில் இருந்து வாங்கி வந்து படித்தேன். ஏற்கனவே நேபாளம் பற்றி திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தனது கயிலை பயணக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்கள். மற்றும் எனது அலுவலக நண்பர் திரு சுதர்ஷன் பிரசாத் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நேபாள பயணம் சென்று வந்தவர் அவரும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கடந்த ஆண்டு வைஷ்நோதேவிக்கும், அமர்நாத்துக்கும் எங்களுடன் தனது சகோதர, சகோதரியுடன் பயணம் வந்த திரு.சுதர்ஷன் பிரசாத், தவிர்க்க முடியாத அலுவலகப் பணி காரணமாக எங்களுடன் இந்த முறை வர இயலவில்லை.

சுவாமி சித்பவானந்தாவின் ''திருக்கயிலை யாத்திரை'', மற்றும் சிங்கை கிருஷ்ணன் அவர்களின் நேபாளகயிலை யாத்திரை பற்றிய புத்தகங்களைப் படித்து நேபாளம் பற்றிய செய்திகளை மனதில் குறித்துக் கொண்டேன்.
  
(பகிர்வுகள் தொடரும்)

அஷ்வின்ஜி 

No comments: