Tuesday, June 28, 2011

அமரநாதம் - 2011 : பகுதி நான்கு. நிறைவுப் பகுதி.


அமரநாதம் - தொடரும் சிவகணங்கள்


சிவனருள் பொலிந்தது... நலமே விளைந்தது.

குன்னூர் அன்பர்களின் 
பத்தாவது அமர்நாத் யாத்திரை 
வைபவங்கள். 

குன்னூரில் இருந்து அஷ்வின்ஜி வழங்கும் நேரடி ரிப்போர்ட்.



பகுதி நான்கு: 

நிறைவுப் பகுதி.

பிளாஷ் செய்தி: 


இந்தப் பகுதியை எழுதத் துவங்கிய இந்த நேரத்தில் (ஜூன் 25, 2011: 0800 Hrs.)
ஹரித்வாரில் இருந்து பவானி ரவி பேசினார். அவர்களது குழு இன்று காலை ஹரித்வார் அடைந்தது. பயணம் மிகவும் நல்லபடியாக அமைந்திருந்ததாகத் தெரிவித்தார். இன்று ஹரித்வாரில் உள்ள திருத்தலங்களை தரிசித்து விட்டு, இரவு ஹரித்வாரில் தங்கி, நாளைக் காலை ரிஷிகேஷ் செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து கேதார்நாத், பத்ரிநாத் செல்கிறார்கள். பின்னர் ஹரித்வார் வந்து அங்கிருந்து ஜம்மு சென்று வைஷ்நோதேவி, அமர்நாத் செல்கிறார்கள். அதன் பின்னர் அலஹாபாத், காசி, கயா சென்று விட்டு சென்னை வந்து அதன் பின்னர் ராமேஸ்வரம் சென்று யாத்திரையை பூர்த்தி செய்கிறார்கள். ஒவ்வொரு திருத்தலத்தில் இருந்தும் என்னுடன் தொடர்பு கொள்வதாக கூறியிருக்கிறார். அந்த வகையில் ஹரித்வாரில் இருந்து இன்று என்னை குழுவினர் தொடர்பு கொண்டார்கள். 


வாருங்கள் மீண்டும் நாம் குன்னூர் செல்வோம்.

பவானி ரவியை வருந்த வைத்தது வேறொன்றும் இல்லை. குன்னூரில் உள்ள லாட்ஜ்கள் அனைத்தும் ஃபுல் ஆகி விட்டதால் அறைகள் கிடைக்கவில்லை என்பதே அந்த செய்தி. 

பவானி ரவி வருந்தும் போது நான் மகிழ்ந்தேன். ஏனெனில் அவர்களுக்கு செலவு வைக்காமல் இறைவன் தடுத்தது தான் காரணம். மாறாக, எனக்கு வேறொரு எண்ணம தோன்றியது. குன்னூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி ரயில்வே அதிகாரிகள் விருந்தினர் இல்லம் உள்ளது. முன்னமே அலுவலக ரீதியாக மனுச் செய்து ஒதுக்கீடு பெற்று வந்தால் அங்கு தங்கலாம். இப்போது சீசன் இல்லை என்பதினால் காலியாக தான் இருக்கும். எனவே ரவியை கவலைப் பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நான் சம்பந்தப்பட்ட அலுவலரை சந்திக்க சென்றேன்.  நான் நினைத்தது போலவே முன்பதிவுகள் எதுவும் இல்லாமல் ஒரு சூட் காலியாக இருந்தது. நான் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல அவர் தாராளமாக குளித்துவிட்டு உடை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பையை இங்கேயே வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லுங்கள். மாலை மேட்டுப்பாளையம் புறப்படும் சமயத்தில் வந்து பையை எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தார். அனுமதி தந்த அந்த அதிகாரியின் பெயர் அருணாசலம். ஆஹா! இங்கும் சிவனருள் பொழிகிறது என்பதை உணர்ந்து நான் மனமுருகி இறைவன் திருநாமம் சொல்லி வணங்கினேன். 

நாம் நல்லோருடன் இருக்கும் போது நமக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்பது இங்கும் நிரூபணமானது. எனது தங்கும் அறை விஷயம் ஒரு வழியாக தீர்வுக்கு வந்ததும் ரவியும் அவர் நண்பரும் நிம்மதியானார்கள். என்னை குளித்து விட்டு ரெடியாக இருக்க சொல்லி விட்டு கோவில் ஏற்பாடுகளை கவனித்து விட்டு வந்து கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்வதாக சொல்லி சென்றனர். 

பவானி ரவி அவர்களின் இல்லத்துக்கே என்னை அழைத்துச் சென்று இருந்திருக்கலாம். நான் குளிக்க மட்டும்தான் வேண்டி இருந்தது. ஆனால் அவருக்கோ இவர் சென்னையில் இருந்து வருபவர் ஆயிற்றே, வசதி க்குறைவாக எண்ணி விடுவாரோ என்று கவலை.  நான் சென்னையில் இருந்து பேசும் போதே ரூம் எதுவும் போடவேண்டாம் என்று அவரிடம் கண்டிப்பாக கூறி இருந்தேன். சொல்லியும் கேட்காமல் அவர் நான் குன்னூரை அடைவதற்கு முன்னதாகவே அறை ஏற்பாடு செய்ய முயன்று இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் ரூம் கிடைக்காமல் போய் அவரது கவலைகள் அருணாசலத்தின் உதவியால் தீர்க்கப்பட்ட சந்தோஷத்தில் அவர்கள் கோவிலுக்கு சென்றனர்.

நான் அறைக்குச் சென்று சுடுநீரில் குளித்து உடைமாற்றி நீறு பூசி திருவாசகமும், கோளறு பதிகமும் வாசித்தேன். 

இறைவனின் புகழை ஓதி முடியும் தருவாயில் அன்பர்கள் வந்து என்னை அழைத்துச் சென்றனர். இந்த அமர்நாத் யாத்திரை குழுவில் உள்ள ஒவ்வொரு சிவனடியாரும் ஒவ்வொரு நாயன்மாரைப் போல சிவபெருமான் மேலும், சிவனடியார்கள் மேலும் மாறாக் காதல் கொண்டவர்களாக விளங்கினார்கள். 

அவர்களைப் பற்றி ஒவ்வொருவராக விவரிக்க முயன்றால் இந்த தொடர் நீளும் என்பதால் கோவில் வைபவங்களை பற்றி மட்டுமே நான் இந்த பகுதியில் சொல்லி விட்டு முடிக்க எண்ணி இருக்கிறேன்.  வாய்ப்பு இருப்பின் அவர்களைப் பற்றியும் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

எனக்கு விருந்துபசாரம் செய்து விட வேண்டிய ஆர்வத்தில் அவர்கள் இருந்தார்கள். நானோ அபிஷேகம் முடிந்த பிறகு அன்னதானத்தில் சாப்பிடுகிறேன் அதுவரை உபவாசமாக இருக்கிறேன் என்று எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காலை சிற்றுண்டி அருந்தச் சொல்லி என்னை நிர்பந்தித்ததின் பேரில் ஒரு பொங்கல் போதுமே என்று சொல்லியும் கேட்காமல், மேலும் ஒரு தோசை, பின்னர் காப்பி என அவர்கள் திருப்திக்காக சாப்பிட்டேன். 

பின்னர் கோவிலுக்கு சென்றோம். அங்கே ஈரோடில் இருந்து கயிலை ஈஸ்வரன் ஐயா வந்திருந்தார்கள். இவர்தான் ஆரம்பத்தில் பவானி ரவி அவர்களையும் அவரது நண்பர்களையும் அமர்நாத்துக்கு வழி நடத்தியவர். பெரியவர் கயிலை ஈஸ்வரன் ஐயாவுக்கு வயது 58 ஆகிறது. முன்னாள் ராணுவ வீரர். ஈரோட்டில் வியாபாரம் செய்கிறார். சிவனடியார்களுக்கு சேவை செய்வதை தனது வாழ்க்கை இலட்சியமாக கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு கயிலை மானசரோவர யாத்திரையை நிறைவேற்றி கயிலைநாதனை கண்ணாரக் கண்டு வந்து சிவபூரணமாக இருக்கிறார். 

பவானி ரவி அவர்களது இந்த பத்தாவது ஆண்டு யாத்திரையை வாழ்த்தி வழியனுப்பவும், அபிஷேக ஆராதனைகளை துவங்கி வைத்து திருமுறைகளை ஓதி முறைப்படுத்தவும், அன்னதானத்தினை துவங்கி வைக்கவும் அவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள். அன்பு மயமாக இருக்கும் அந்த கயிலை புனிதரை அறிமுகப் படுத்திய போது நான் அவரது திருவடி பணிந்த போது அவரும் பதிலுக்கு பணிந்தார். அந்த அளவுக்கு சிவ மயமாக இருந்தார். 

கோவிலுக்குள் சென்று எல்லாத் தெய்வங்களையும் வணங்கினோம். சிவாசாரியார் மகேஷைக் கண்டதும், ஆரத்தி முடித்து தட்டினை காட்ட வந்த போது அவர் பெயரைச் சொல்லி அழைத்ததும் ஆச்சரியத்தில் கண்களை விரித்தார். என்னை முன்னதாக பார்த்ததில்லை அவர். அந்த நிலையில் நான் அவரது பெயரைச் சொல்லி அழைத்தில் அவருக்கு வியப்பு தோன்றியது. நான் பிரதோஷ அன்பர் அரவங்காடு சிவனடியார் திரு.ஜோகராஜ் அவர்களின் பெயரைச் சொன்னபோது மேலும் வியந்தார். என்னைப் பொறுத்த வரையில் இந்தமுறை நான் எல்லாரையுமே முதல் முறையாகத் தான் சந்திக்கிறேன். ஆனால் பழகிய அனைவருமே பல ஜென்மங்களுக்கு முன்னரே பார்த்த மாதிரி பழகினார்கள். யாத்திரையில் இந்த முறை ஏழு பேர்கள் தான் போகிறார்கள் என்று கூறினார் பவானி ரவி. 

அந்த குழுவில் உள்ளவர்கள் பவானி ரவி, அவரது அன்னை, ரவியின் மனைவி மற்றும் திரு 'புல்லட்' குமரேசன், குமரேசனின் மனைவி திருமதி ரேவதி, ரேவதியின் சகோதரி திருமதி கலாவதி மற்றும் இவர்களுடன் சிவா என்னும் ஒரு இளைஞர். 

முதலில் பதினைந்து பேர்கள் புறப்படுவதாக இருந்த போது இந்த நான்கு பெண்மணிகளும் அந்தக் குழுவில் இல்லை. மற்றவர்கள் சில காரணங்களால் வர இயலாத நிலை ஏற்பட்ட போது பத்தாவது முறையாக செல்லும் யாத்திரை தடைபட்டுவிடக் கூடாதே என்கிற எண்ணத்தில் திரு புல்லட் குமரேசனின் மனைவியும் அவரது சகோதரியும் யாத்திரை வர விரும்பி இருக்கிறார்கள். இதனைப் பார்த்த ரவியின் தாயாரும், மனைவியும் சேர்ந்து கொள்ள யாத்திரை குழு உருவாகி விட்டது. 

திரு பவானி ரவியும், சிவா என்கிற இளைஞரும் ஏற்கனவே தொடர்ந்து அமர்நாத் யாத்திரை செல்பவர்கள். புல்லட் குமரேசனும் மற்ற நான்கு பெண்டிரும் இப்போது தான் முதல் முறையாக அமர்நாத் யாத்திரை செல்லுகிறார்கள். 

இந்த அறிமுகங்களை செய்து கொண்டிருந்த போது மகேஷ் சிவாசாரியார் சுவாமி அபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். எனது நண்பர் ஜிகேசுவாமியின் காமிராவை கொண்டு சென்று இருந்தேன். கடந்த அமர்நாத் பயணத்தின் போது மகன் ஹரீஷுடன் சுவாமி வந்திருந்தார். இந்த முறை கயிலாயகிரி செல்ல திட்டமிட்டு இறைவன் அனுமதி இல்லாததால் நாங்கள் பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை. குன்னூர் அன்பர்கள் அமர்நாத் செல்லும் விஷயம் கேள்விப்பட்டதும் என் அலுவலக நண்பர்களைப் போலவே ஐவரும் அன்னதானத்துக்கு நன்கொடை தந்து தனது டிஜிடல் காமிராவையும் தந்து என்னை குன்னூர் அனுப்பினார்.

கடந்த அமர்நாத் பயண புகைப்படங்களை சிறந்த முறையில் அவரது காமிரா எடுத்து தந்தது. இந்த முறை அது என்னுடன் குன்னூர் வந்தது. தனது கடமையை செவ்வனே நிறைவற்றியது. அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடந்தேறியது. பின்னர் அன்னதானமும் மிகச் சிறப்பாக செய்விக்கப்பட்டது. 


அடியார்கள் திருவமுது செய்ததும், இரண்டரை மணி அளவில் ''புல்லட்'' குமரேசன் வீட்டுக்கு என்னையும் கயிலை ஈஸ்வரனையும் அழைத்து சென்றார்கள். 

புல்லட் என்ற பெயர்க்காரணம் கேட்டேன். அவர் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக இருக்கிறார். புல்லட் பிரபலமாக இருந்த காலங்களில் அவர்தான் புல்லட் சர்வீஸ் செய்வாராம். அதனால் அவருக்கு அந்த பெயர் நிலைத்து விட்டது. பெரிய குடும்பம். அனவைரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். மூன்று மருமகள்கள், ஆறு பேரக் குழந்தைகள் மற்றும் குமரேசனின் தாய் என்று அந்த குடும்பம் நிறைவாழ்வு வாழ்ந்து கொன்று இருக்கிறது.  

குமரேசனைப் போலவே அவரது மனைவி ரேவதி அவர்களும் முழு ஆன்மீகத்தில் திளைத்திருக்கிறார்கள். ரேவதியின் சகோதரி கலாவதி அருமையாக பக்திப் பாடல்களை பாடுகிறார். அக்கம்பக்கத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று கோவிலை சுத்தப் படுத்துதல், அன்னதானத்தின் போது காய்கறிகளை நறுக்குதல், பாத்திரங்களை கழுவித் தருதல் என்று வசதி படைத்த வாழ்க்கையில் இருந்தாலும் ஈஸ்வர சேவைகளில் தம்மை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 

ஆணவம் குறைய இந்த சேவைகள் பயன்படுவதாக மகிழ்ந்து சொல்லிக் கொள்ளுகிறார்கள். குமரேசனும் அவர்களது எல்லா சேவைகளிலும் தம்மையும் அர்ப்பணித்துக் கொள்ளுகிறார். 

அவரது இல்லத்தில் உள்ள அனைவரும் எங்களை பணிந்து வணங்கி ஆசி பெற்றதும், யாத்திரையின் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகளை கயிலை ஈஸ்வரனும் நானும் அவர்களுக்கு சொன்னோம். அரவங்காடு ஜோகராஜ் அவர்கள் என்னை போனில் தொடர்பு கொண்டு நான் வந்த நோக்கம் அனைத்தும் நலமாய் ஈடேறியது குறித்து கேட்டு மனமகிழ்ந்தார். நான் சென்னை திரும்பியதும் (அதாவது வியாழன்) காலையில் ஜோகராஜ் என்னுடன் பேசினார். ஞாயிறு அன்று சென்னை வருகிறார். அவரை எனது இல்லத்துக்கு அழைத்திருக்கிறேன். அவர் கேட்டிருந்த உதவியையும் அவர் வந்ததும் செய்ய உறுதி கூறி இருக்கிறேன். 


குமரேசன் அவர்களின் வீட்டில் இருந்து புறப்பட்டு கோவிலுக்கு சென்றோம். நான் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று எனது உடைகளை மாற்றி பையை எடுத்துக் கொண்டு நான்கு மணி அளவில் மீண்டும் கோவிலுக்கு வந்து யாத்திரை குழுவினர் ஏற்பாடு செய்திருந்த டாடா சுமோவில் பயணித்து சுமார் ஆறரை மணி அளவில் மேட்டுப் பாளையம் ரயில்வே நிலையம் சென்று சேர்ந்தோம். 

அந்து மாலை ஏழு நாற்பத்தைந்து மணி அளவில் சென்னைக்கு புறப்படும் நீலகிரி எக்ஸ்ப்ரசில் சென்னை நோக்கி பயணித்தோம். 

எங்கள் எல்லோருக்கும் ஆசி கூறி ஈரோட்டில் கயிலை ஈஸ்வரன் இறங்கி கொண்டார். 

இந்த முறை குன்னூர் பயணம் எனக்கு முற்றிலும் புதிய உறவுகளை ஏற்படுத்தி தந்தது. இறைவன் போட்டிருக்கும் முடிச்சுக்கள் எந்த வகையானவை என்பதினை உணரும் போது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 

வியாழன் அன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்ததும் எனது நண்பர் திரு.ராஜூ அவர்கள் என்னையும் யாத்திரைக் குழுவினரையும் சென்னை சென்ட்ரலில் வரவேற்றார். குழுவினர் காலைக் கடன்களை முடித்ததும் அவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி வழங்கும் செலவினை நண்பர் ராஜூ அன்புடன் ஏற்றுக் கொண்டார்.

காலை ஒன்பது நாற்பதுக்கு புறப்படும் டேராடூன் எக்ஸ்ப்ரசில் அவர்களை வழியனுப்பி விட்டு பிரிய மனமின்றி இல்லம் வந்தேன். 

யாத்திரை குழுவினர் நீண்ட பயணம் மேற்கொண்டு சென்னைக்கு திரும்பும் சமயத்தில் அவர்களை வரவேற்று மதிய உணவு ஏற்பாடு செய்து அவர்களை அமுது செய்வித்த பின்னர் ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் வழியனுப்ப சித்தமாய் ஆவலுடன் காத்திருக்கிறேன். 
எனது இந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கும் என் சிவனை பணிந்து வணங்குகிறேன். ஆர்வத்துடன் படித்து ரசித்து வரும் இறையடியார்களை திருவடி பணிந்து வணங்கி எனது இதய நன்றியை காணிக்கையாக்குகிறேன். 

ஆங்காங்கே சில சொற்பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். பிழை பொறுத்து அருள உங்களை பணிந்து வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 

இந்த முறை குன்னூர் சென்று வந்த பின்னர் மூன்று மாதங்களாக தடைப் பட்டிருந்த சில வேலைகள் வெற்றிகரமாக நடந்தேறின என்ற பெரும் மகிழ்வு தரும் செய்தியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது இரண்டாவது மகன் வெள்ளிக்கிழமை நேற்று எம்காமில் அட்மிஷன் ஆனார். 

எத்துணை முறை சொல்லியும் எனது வண்டியை சர்வீசுக்கு கொண்டு செல்லாமல் காலம் கடத்திய மெக்கானிக் நான் இல்லாத சமயத்தில் எனது இல்லம் தேடி வந்து என் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வண்டியை எடுத்துச் சென்றார். 

இப்படி பல விஷயங்கள். படிப்பதற்கு சுவாரஸ்யமான சிலவற்றை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். 

இறையவன் இன்னருளால், எந்நாளும் சிவனருள் பொழிந்து, மனசெல்லாம் நிறைந்து எல்லாம் சிவக் கணங்களாக விளங்குகின்றன. 

இந்த தொடரை எல்லாம் வல்ல சிவனுக்கு அர்ப்பணித்து நிறைவு செய்கிறேன்.

ஓம் சிவோஹம். 


-

   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

No comments: