Tuesday, November 8, 2011

7. பத்தர் பரசும் பசுபதிநாதம் - நின் திரு யாழில் என் இறைவா...

ஓம் நமசிவாய.

இந்தச் சேதியை இங்கே பகிர்ந்து கொள்ளலாமா ? வேண்டாமா? என்றெல்லாம் பல முறை யோசித்து விட்டு இதனை இங்கே எழுதுகிறேன்.

நின் திருயாழில் என் இறைவா 
பல பண் தரும் நரம்புண்டு.
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே அதில் 
இணைத்திட வேண்டும் இசையரசே.
 (தாகூரின் கீதாஞ்சலியில் இருந்து)

கடந்த செப்டம்பர் மாதம் நேபாள யாத்திரையின் போது தாகூரின் மேற்கண்ட கீதாஞ்சலி பாடலை அழகிய குரலில் பாடி, எனக்கும் பாடக் கற்றுத் தந்த சகோதரி திருமதி மாதரசி நேற்று (07-11-2011 அன்று ) சிவனின் திருவடியை அடைந்து விட்டார்.

சகோதரி மாதரசி, கணவர் ராம்ராஜுடன் 
பசுபதி நாதர் திருக்கோவில் வாசலில்.
.
எங்களது யாத்திரை முழுதும் எல்லா நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் சிவபுராணம் பாடியும், எல்லா விதமான பக்திப் பாடல்களையும் பாடி எங்கள் அனைவரையும் பக்தி பரவசத்தில் திளைக்க வைத்த அந்த ஜீவன் சிவனைத் தேடிச் சென்று விட்டது.

சிவபுராணத்தினை பாடிடும் பொழுதெல்லாம் நெக்குருகி, கண்ணீர் பெருக பாடுவார்கள் இந்த அம்மையார். அன்பே சிவமாய் விளங்கி எங்கள் எல்லோரிடமும் பழகிய சகோதரி அன்பே சிவமாக அமர்ந்து விட்டார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளாக எனக்கு பரிச்சயமான இந்த அன்பு உள்ளம, தனது இரு மகள்களையும், அன்புக்கு ஏங்கும் கணவனையும் தவிக்க விட்டுவிட்டு இறைவனடியை சேர்ந்து விட்டது.

பயணம் முழுதும் சஹயாத்திரிகளிடம் பண்புடனும், தூய அன்புடனும் பழகி வந்த பாசப் பறவை பறந்து சென்று விட்டது.

மரணம் இனிதுதான். ஆனால் பிரிவு கொடிது.

பக்தி மயமாக விளங்கிய அந்த ஆன்மா அவரது குடும்பத்தை வழி நடத்தி உதவ எல்லாம் வல்ல பரமனை வேண்டுகிறேன். 

கல்மனம் கொண்ட எனது இதயத்தையும் கரையச் செய்து என்னை வாய் விட்டு அழவைத்துச் சென்ற சகோதரி மாதரசியின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சிவகணங்களில் ஒருவராக அவர் விளங்குவார் என்பதில் எனக்கு எந்த எவ்வித ஐயமும் இல்லை.  

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
(மணிவாசகப் பெருமானின் சிவபுராண வரிகள்)

திருச்சிற்றம்பலம்.

பயணக் கட்டுரையை தொடர்வதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடியார்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். கூடிய விரைவில் தொடருகிறேன்.

-- 
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

1 comment:

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அந்த சிவனடியவ்ரின் ஆன்மா சாந்தியடையட்டும். விரைவில் கயிலை சென்று வந்து அந்த அனுபவங்களையும் எழுதுங்கள். ஓம் நமச சிவாய