“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (யங் இந்தியா, ஜூன் 10, 1921)
“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)
“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்” (யங் இந்தியா, 6-8-1925, p274. )
“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism - By M. K. Gandhi p. 205)
“மாறாத சத்தியத்திற்கான உண்மையான தேடல் இந்துமதத்தில் தான் உள்ளது, ஏனெனில் ‘சத்தியமே கடவுள்’ என்று அது முரசறைகிறது. இன்று நாம் தேக்கநிலையிலும், ஊக்கமின்றியும், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் போலவும் இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் நாம் களைத்திருக்கிறோம், அயர்ந்திருக்கிறோம். இந்த அயற்சி நீங்கியவுடனேயே முன் எப்போதும் கண்டிராத உத்வேகத்துடன் இந்துமதம் விழிப்புற்று உலகெங்கும் பரவும்” (Young India, 24/11/1924 p. 390-396)
“இந்துமதம் கங்கை நதியைப் போன்றது. மூலத்தில் எந்த மாசுகளும் அற்று தூய்மையாகவும், செல்லும் வழியில் வந்து சேரும் சில கசடுகளையும் தன்னகத்தே கொண்டும் அது விளங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்னை கங்கையைப் போன்றே, அது உலகிற்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கிறது. கங்கையும் சரி, இந்துமதமும் சரி, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றினாலும், இந்த எல்லா இடங்களிலும் சாரமான உட்பொருள் அப்படியே தான் இருக்கிறது” (Young India 8-4-1926)
“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (”கீதை என் அன்னை” முன்னுரை)
“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்” (source: The UpanishadsTranslated for the Modern Reader By Eknath Easwaran. Nilgiri Press. 1987. pg 205
நன்றி : தமிழ் ஹிந்து டாட் காம் (02-01-2009)