அவன் மரணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.
சாகும் தருவாயில் இருக்கும் போது தெரிந்தவர்கள் எல்லாம் வந்து பார்த்து விட்டு போவது வழக்கமான ஒன்று.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், என்றோ ஓர் நாள் மரணிக்கப் போகிறவர்கள் கொஞ்ச நேரத்தில் இறக்கப் போகின்றவனை பார்த்து விட்டுச் சென்றார்கள்.
அப்போது அவனைக் காண அவனது கனவு வந்தது.
அவன் வாழ்நாளில் ஒருமுறை கூட கனவைக் கண்டதில்லை. அதனால் கனவு அவனைக் காண வந்தது. உள்ளே கனவு நுழைந்ததை அவன் ஓரக்கண்ணால் பார்த்தான். கொஞ்சம் அவமானமாய் உணர்ந்ததினால் தன பார்வையை கீழே தாழ்த்திக் கொண்டான்.
அவன் அருகே சென்ற கனவு அவனை பார்த்து, "ஏன் நீ என்னை ஒரு முறை கூட உணரவில்லை?" என்று கேட்டது.
அவன் சுருதி அற்ற மெல்லிய குரலில், "உன்னைக் காண எனக்கு பயமாய் இருந்தது" என்றான்.
"எதற்குப் பயந்தாய்?" அவனிடம் கேட்டது கனவு.
"தோற்று விடுவேனோ என்ற பயம்", என்றான் அவன்.
கனவு கேட்டது. "ஆனால் என்னைக் காண மறுத்ததிலேயே நீ தோற்று விட்டாயே! அதை உணரவில்லையா நீ?"
"ஆமாம்", அவன் குரலில் விரக்தி தெரிந்தது, "நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்"
இந்த பதிலைக் கேட்ட கனவுக்கு கோபம் வந்தது,
"முட்டாள்! நாளை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை என்று உனக்கு தெரியாதா? இந்தக் கணத்தை விட்டால் வேறு எதுவும் நித்தியம் இல்லை என்று தெரியாதா உனக்கு? நாளை என்ற ஒன்று இருப்பதாக இப்போதும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயே! மரணம் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த கணத்தில் கூட உனக்குத் தெரியாதா, மரணத்தை நாளைக்குத் தள்ளி போட முடியாது என்பது?" கனவின் குரலில் கோபத்தை விட பரிதாப உணர்வே மிகுந்திருந்தது.
"முட்டாள்! நாளை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை என்று உனக்கு தெரியாதா? இந்தக் கணத்தை விட்டால் வேறு எதுவும் நித்தியம் இல்லை என்று தெரியாதா உனக்கு? நாளை என்ற ஒன்று இருப்பதாக இப்போதும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயே! மரணம் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த கணத்தில் கூட உனக்குத் தெரியாதா, மரணத்தை நாளைக்குத் தள்ளி போட முடியாது என்பது?" கனவின் குரலில் கோபத்தை விட பரிதாப உணர்வே மிகுந்திருந்தது.
அவன் கன்னத்தில் கண்ணீர்த் துளிகள் உருண்டோடின, "புரிந்து கொண்டேன், நாளைக்கு என்று எதையும் தள்ளிப் போட முடியாது"
கனவுக்கு அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. அதற்கு தெரியும். வலிகள் இரு வகையானவை. ஒழுக்கம் தரும் வலி. ஆனால் ஒழுக்கம் தரும் வெற்றி கனியில் வலி மறந்து போய் விடும். மற்றொன்று, தோல்வியும் விரக்தியும் தருகின்ற வலி. அதன் வேதனை அதிகமாயிருக்கும்.
இதற்கும் மேல அவனிடம் பேச என்ன இருக்கின்றது? கனவு குனிந்து அவனை ஆறுதலாகப் பார்த்து, அவன் விழி நீரை துடைத்து விட்டு சொல்லியது, "நீ ஒரு அடி முன் எடுத்து வைத்திருந்தாய் எனில் என்னை பார்த்திருக்கலாம். உனக்கும் எனக்கும் இடைவெளியை உருவாக்கியது உன் அடிமனத்தில் இருந்த நம்பிக்கையின்மை"
சில கணங்கள் மௌனமாய்க் கரைந்தன. வாழ்க்கை உணர்த்தாததை மரணத்தின் கடைசி பொழுதுகள் உணர்த்தி விடும். அவன் முகத்தில் வேதனை மறைந்து ஓர் மலர்ச்சி பூத்தது. சில நொடிகளில் இருவரும் பார்வையாலேயே விடை பெற்றுக் கொண்டார்கள்.
அவனோடு சேர்ந்து அந்தக் கனவும் இறந்து போயிற்று.
