Tuesday, February 22, 2011

பாகம் மூன்று: பகுதி ஒன்பது:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை ஒன்பது: முக்கண்ணனை நோக்கி முயற்சியாளர்கள்.

 அமர்நாத் குகைப் பகுதி - குதிரை டெர்மினஸ் 
(நன்றி: சஹயாத்திரி ஜி.கே.சுவாமி)

குகைப் பகுதி. 
(நன்றி: சஹயாத்திரி ஜி.கே.சுவாமி)

மெள்ள எங்கள் நால்வரணி குகை நோக்கி நடக்க தொடங்கியது. ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். பால்தாலில் இருந்து புறப்பட்டு சுமார் ஐந்தரை மணி நேரமாகியும் எங்களுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்த 62 பேர்களில் எங்கள் நால்வரைத் தவிர ஒருவர் கூட எங்கள் கண்களில் படவில்லை. 

செல்போனும் அங்கு இயங்குவதில்லை. நாங்கள் நால்வரே நால்வருக்கும் துணை. ஜமாவாக ஜாலியாக செல்லலாம் என்று கனவு கண்டவர்களது கனவை கனவாக்கி விட்டார் எம்சிவம் (அப்பப்பா எத்தனைக் கனவு !?). 

உனக்கு நான் மட்டுமே துணை என்று சொல்லாமல் சொன்னார் முக்கண்ணன். 

''நீங்கள் நால்வரும்?'' என்ற கேள்வி என் செவிகளில் விழுகிறது அன்பர்களே. நாங்கள் என்ன விதிவிலக்கா? நானும் அஷ்வினும் பெரிய போராட்டமே நடத்தியல்லவா ஒன்று சேர்ந்தோம்!

அதுவும் பாண்டியனும் அவர் மனைவியும் எங்களிடமிருந்து பிரிந்து தரிசனத்திற்கு பிறகு தான் எங்களுடன் சேர்ந்தனர். 

ஐயா, விதிக்கு ஏதய்யா விலக்கு. ?

விதி ஒரு அனுபூதி. அதை படைத்தவனது அல்லது படைத்தவளது அனுபூதியாய் மனமாற எடுத்து கொண்டால் இன்பமும் துன்பமும் ஒன்றுதான். தனியாக காஷாயமோ கமண்டலமோ தேவையில்லை. (குகை நெருங்க நெருங்க என் எழுத்தில் காவியும் துறவும் ஒட்டிக்கொண்டதை கவனித்தீர்களா?) 
தனிமையிலே இனிமை காண முடியுமே.
குகைக்கு செல்லும் வழியில் ஒரு துறவி.
 (நன்றி: சஹயாத்திரி ஜி.கே.சுவாமி)

எங்கள் டென்ட் கடையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் என் ஷூ என்னை பாடாய்ப்படுத்தி விட்டது. 1995-அமர்நாத் பயணத்திற்கு வாங்கிய வுட்லன்ட்ஸ் 2011ல் பயன்படும் என்று நான் நினைக்கவில்லை. 

அன்று நான் உபயோகப் படுத்திய குச்சியைக் கூட இன்னமும் பத்திரமாய் எடுத்து வைத்திருக்கிறேன். உயிர் காத்த உன்னதக் கோலல்லவா அது? 

மெள்ள எங்கள் பயணம் தொடர்ந்தது. 

வெயில் சற்று ஏறியதால் நடக்கும் பாதை வெகுவாக வழுக்கியது. நன்றி கெட்ட ஷூ வேறு கடித்துக் கொண்டே இருந்தது. இந்தி பேசத் தெரிந்த பாண்டியனிடம் (அவர் பேசியது சரியான இந்தியா என்று ஒரு சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆனால் அவர் சிறப்பு மிகவும் வேகமாக பேசுவது. எழுதும் போது ஸ்பெலிங்க் மிஸ்டேக்கை மறைக்கும் வேகம்) ஒரு உதவி கேட்டேன். 

அவர் இந்த பயணத்தின் ஆரம்பத்தில் தான் எனக்கு தெரிந்தவரானாதால் அவரால் என்னை கோபிக்க முடியவில்லை. மேலும் அவர் நண்பர் ரமேஷ் என்னுடைய மனைவியின் சகோதரியின் கணவர் வேறு. அப்படி என்ன கேட்டு விட்டேன் என்று யோசிக்கிறீர்களா? யாராவது கடை வைத்திருப்போரிடம் கொஞ்சம் அவரது ஷீவை கடன் கேட்க முடியுமா? என்று தான் கேட்டேன். "எப்படி சார் கேட்பது" என்று ஐஸ் தரையைப்பார்த்தார். 

நான் சொன்னேன் "என்னை கைகாட்டி இதோ இவர் தான் கேட்க சொன்னார் இவர் யாரென்றே எனக்கு தெரியாது என்று சொல்லி விடுங்கள். அவர் எதைக் கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். 

நிச்சயமாக இதற்கும் அவருக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் என் முகத்தில் தெரிந்த வலி ரேகைகள் அவர் கோபத்தை அசுவாசப்படுத்தி விட்டது. அவ்வளவு படுத்தி விட்டது அந்த ஷூ. "சரி சரி வாருங்கள் நல்லவனாக பார்த்து கேட்கலாம்" என்று முன்னே சென்றார். நடக்கும் வேகம் ஆளாளுக்கு மாறுபடுவதால் நால்வரும் ஒன்றாக செல்ல முடியவில்லை. மேலும் வழுக்கும் ஐஸ்கட்டியில் நடக்க தனிப்பயிற்சி தேவைப்பட்டது. மேலும் கவனச் சிதறல் மண்டைச் சிதறலாகி விடக் கூடிய சாத்தியக் கூறு அதிகமிருந்தது. 

இந்த பயணத்தில் நான் உணர்ந்தது இதுவும். நம் நடையின் வேகத்தை தீர்மானிப்பது, 

1. நம் எடை. 
2. நம் பார்வைக் கூர்மை. 
3. அங்குள்ள ஆக்சிஜன் அளவு. 
4. நம் கவனம். 
5. எதிரே வருபவரது கவனம் அல்லது நம்மைப் பற்றிய கருணை. 
6, ஐஸ் பாளங்களின் கனம். 
7. நம் தேக பலம் அல்லது ஆரோக்கியம். 
8, சிவனருள். 

முதல் இரண்டும் அத்தனை ஸ்லாக்கியமில்லாத நானும். முதல் குறையான எடையும் கொண்ட அஷ்வினும் நடக்கையில் பின் தள்ளப்பட்டதில் பெரிய ஆச்சரியமேதுமில்லை. 

இருவருக்கும் உதவியது கடைசியில் கயிலையானருளே.

நடக்கையில் ஏற்கெனவே நடந்து சென்றோரது அடிப்பொடியை தொடர்ந்து அதிலேயே காலை வைத்து பாதுகாப்பாக போகலாம் என்ற என்னுடைய கண்டுபிடிப்பு சிறிது தூரமே சிறந்ததாக இருந்தது. 

ஆம்! வெயிலுக்கு முன்னே நடந்து பதிந்த கால் தடங்கள் வெயிலில் சற்று இளகியிருந்தது. ஒரு முறை வழுக்கி ஐஸோடு ஐஸாய் அமர்ந்த பின் யுரேகாவானது என் வரை !!!

(கோவிந்த் மனோஹரின் அனு(பூதி)பவங்கள் தொடரும்)

நன்றி: பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வரும் நண்பர் கோவிந்த் மனோஹருக்கும்,  தொடர்ந்து படித்து பின்னூட்டி வரும் அன்பர்களுக்கும் என் இதய நன்றி.
-அஷ்வின்ஜி.

Sunday, February 20, 2011

பாகம் மூன்று: பகுதி எட்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.


இடுகை எட்டு: தேடலின் இனிமை 

நாங்கள் மிகவும் அசதியாக உணர்ந்ததினால் அப்படிப்பட்ட ஒரு கடை கம் டென்டடில் இடம் பிடித்து சிறிது அமர்ந்தோம். அஷ்வின், தான் கொண்டு வந்த அக்ரூட் மற்றும் பாதாம் பருப்புகளையும் பேரீச்சம் பழங்களையும் எங்களுடன் அன்புடன் பகிர்ந்து கொண்டார். 

அதை உட்கொண்டவுடன் தண்ணீர் பருகியதும் மிகவும் தெம்பாக உணர்ந்தோம். கூடவே சேர்ந்து கொண்ட ஓய்வும் எங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. நல்ல நிலையிலிருந்து உற்சாக நிலைக்கு செல்லவில்லை. மிகவும் தொய்ந்திருந்த நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மேம்பட்டோம். 

அந்த கடைக்காரனின் உபசரிப்பில் நெகிழ்ந்து அவனிடமே (மிகவும் வயதில் இளையவனாக இருந்ததால்{"ன்"}) பூஜைப் பொருட்களை வாங்க முடிவு செய்தோம் அப்படியே எங்கள் உடமைகளையும் அங்கேயே வைத்து விட்டு வெறும் தடி மட்டும் எடுத்து கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது கடைக்காரன் தோலினாலான எந்த பொருளையும் குகைக்கருகே அனுமதிக்க மாட்டார்கள் என்றுரைத்தான். 

அப்போது நாங்கள் எங்களிடம் உள்ள தோல் பொருட்களை தேட ஆரம்பித்தோம். மணிபர்ஸிலிருந்து பெல்ட் வரை செல்போன் கவர் முதல் காமிரா பவுச் வரை எல்லாவற்றையும் களைந்து எங்கள் பைகளில் வைத்து பின் கிட்டதட்ட நிராயுதபாணியாக நின்றோம். 

எவ்வளவு பொருட்கள்? 

ஞானம் பெறும் வழி துறப்பதிலா? 

அல்லது அடைவதிலா? 

கோடி பெறும் கேள்வி !

இருப்பதை இழப்பதே ஞானம்.அதாவது உடமைகளை, அதாவது மனதில் உள்ள உடமைகளை. ஆசை, கோபம், காமம், பொறாமை இன்னும் என்னென்னமோ அத்தனையையும் புத்திசாலித்தனமென்ற போர்வையில் வாழவேண்டும் --அதுவும் இப்படித்தான் வாழவேண்டும்--என்ற அவாவில் சேர்த்துக் கொண்ட இயல்புகள். தேவையற்ற இயல்புகள். பிறக்கும் போது இல்லா இயல்புகள். வாழும் போது வழியில் கிடைத்த இயல்புகள்.  எல்லாவற்றையும் சேர்த்து சேர்த்து, எப்போதாவது பயன்படும் என்ற எண்ணத்தில் எப்போதுமே பயன் படாத இயல்புகள். 

எப்படிக் கரைசேர்வது? கரையேற கனம் தடையல்லவா? 

கனம் குறைக்கும் மார்கமே ஞான மார்கம். 

பொருட்களை இறக்கி வைக்கும் போது உடல் கனம் குறைந்தது. மனகனம் அதிகரித்தது. 

ஆம் ! இந்த பொருட்களின் மேலுள்ள ஆசை, ஆகர்ஷணம்.! 

சமவெளி சிந்தனைகளின் பிரதிநிதியான எங்களுக்கு இந்த பொருட்கள் பத்திரமாக திரும்பி வரும் வரை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது நியாயம் தானே? ஆனால் வெண்மை தோலில் மட்டுமில்லை அவர் தம் மனதும் வெள்ளையென்று மற்றுமொரு முறை அங்கு நிரூபித்தான் அந்த இளைஞன். 

ஆம்! விட்டு சென்ற நிலையிலேயே எங்கள் பொருட்கள் அங்கிருந்தன, திரும்பி வந்த போது. நான் செய்த மிகப் பெரிய தவறு என்னுடைய ஹேன்டிகேம் கேமிராவை அங்கு வைத்து விட்டு போனது. 

இல்லை.. இல்லை.. நீங்கள் தவறாக எண்ண வேண்டாம் அது இன்னமும் என்னிடம் பத்திரமாக உள்ளது. கண்கொள்ளா காட்சிகள் கொட்டிக்கிடக்கும் அந்த மலைச்சரிவுகள், உடல் வேதனையை இரண்டாம் பட்சமாக கருதிய வயதான யாத்ரீகர்கள், உடல் ஊனமுற்ற மற்ற மாநிலத்து சகோதர சகோதரிகள், சில குழந்தைகள், கைக குழந்தையுடன் வந்திருந்த இளம் தாய்கள், கடுங்குளிரில் வெற்றுடம்புடன் அங்காங்கே அமர்ந்திருந்த சிவயோகிகள், இவர்களனைவருக்கும் இலவச உணவு தயரித்துக் கொடுக்கும் லங்கர்களில் பணிசெய்யும் செல்வந்தர்கள், இவர்களூடே தனியாக தெரிந்தாலும் நமக்கு பூஜைப் பொருட்களையும் மற்ற சேவைகளையும் நம்மை கசக்காமல் பரிமாறும் காஷ்மீரிய சகோதரர்கள் என்று பதிவு செய்ய வேண்டிய ஏராளமான விஷயங்களுக்காக நான் அதை என்னுடன் சிரமம் பார்க்காமல் எடுத்து சென்று விட்டிருக்க வேண்டும். நான் அந்த விஷயங்களை எவ்வளவு தான் ரம்மியமாக ஸ்லாகித்து எழுதினாலும் அதைக் காட்சியாக காணுங்கால்.... அடடா.... 

ஊனம் மனத்தில் இல்லை. 
(நன்றி: கூகிள் இமெஜஸ்)


சங்கம் டாப். ஒரு மலை முகட்டில் 
இருந்து மற்றொரு முகட்டிற்கு...

 இறையருள் நாடி.. மனிதரில் எத்தனை நிறங்கள்.?

 குகைப் பகுதி. குதிரைகள் நம்மை இறக்கி விடும் இடம்.
இங்கிருந்து மூன்று கி.மீ. முன்னே நடந்தால் குகையை அடையலாம்.

உறைந்திருக்கும் பனிப்பாறை(தை)

வழியில் இளைப்பாறும் குதிரைகள்...
  

  குகைப் பகுதியில் இருந்து பிரவகிக்கும் அமர கங்கை 

(நன்றி: அனைத்துப் படங்களும் கூகிள் இமெஜஸ்)
இதற்காகவாவது என்னை படைத்த சக்தியே! எனக்கு இன்னொரு முறை அங்கு செல்ல திருவுளம் கொள்ள வேண்டும். ஆம். அப்படிப்பட்ட அந்த காட்சிகளை என் மனக்கண்ணும் அகக் கண்ணும் கண்டு களித்தது. ஆனால் அதை பதிவு செய்ய என்னிடம் கேமிரா இல்லை. 

இதுவும் சிவனருளோ. தெளிவாக குழப்பும் சித்தனாக தெரிந்தான் சிவன் எனக்கு. நீங்கள் நாத்திகராக இருந்தாலும் ஆத்திகராக இருந்தாலும் அமர்நாத் யாத்திரை அல்லது பயணம் நீங்கள் விரும்பும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நான் ஒன்றும் பெரிய பக்தனில்லை. 

ஆனால் ஒரு தேடல் எப்போதும் என்னிடம் இருந்திருக்கிறது. அந்த தேடல் ஒரு சுகானுபவம். அதை மறுமடியும் அனுபவிக்கும் முகமாகவே இந்த பயணக்கட்டுரை எனக்கு தெரிகிறது. 

அந்த கணங்களை மறுபடியும் வாழும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. 

எழுதுகோல் எனது, எழுதும் மை எனது, எழுத்து எனது, எண்ணம் எனது.

ஆனால், எழுதுவது நானா(?)வென்ற வினோதமான வினா என்னுள் எழுகிறது. ஏனெனில் பிரயாணக்கட்டுரை எழுதுவது எனக்கு இது முதலனுபவம். ஆனால் தங்கு தடையின்றி அங்கு பார்த்ததை, அனுபவித்ததை தொடர்ந்து எழுத வருகிறது. எப்படி? 

இனிது இனிது..

தேடல் இனிது..

தேடல் தேனினும் இனிது..

தேடும் பொருளினிது..

தேடும் களமினிது..

தேடும் காலமினிது...

(இனிமை தொடரும்...)