Friday, June 24, 2011

அமரநாதம் - 2011 : பகுதி இரண்டு


அமரநாதம் - தொடரும் சிவகணங்கள்

சிவனருள் பொலிந்தது... நலமே விளைந்தது.

குன்னூர் அன்பர்களின் 
பத்தாவது அமர்நாத் யாத்திரை 
வைபவங்கள். 

குன்னூரில் இருந்து அஷ்வின்ஜி வழங்கும் நேரடி ரிப்போர்ட்.


குழும இறையடியார்களுக்கு என் பணிவன்பான வணக்கங்கள். 

கடந்த பதிவில் குன்னூர் சிவனடியார்கள் நிகழ்த்தும் பத்தாவது அமர்நாத் யாத்திரை பற்றியும், புறப்படுவதகு முன்னதாக சிவனுக்கு அவர்கள் செய்த அபிஷேக பூஜைகள், மற்றும் அன்னதானம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். பவானி ரவி (குன்னூர்) அவர்கள் பலமுறை என்னை இந்த வைபவங்களில் கலந்து கொள்ள வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டுவிட நானும் இந்த முறை நம்மால் அமர்நாத் போக இயலவில்லை. சிவனடியார்கள் நிகழ்த்தும் இந்த வைபவங்களில் கலந்து கொண்டு சிவனருள் பெறலாமே என்று புறப்பட ஏற்பாடு செய்தேன். 

ஜூன் ஒன்றாம் தேதி அன்றே ஜூன் இருபத்தோராம் தேதி பயணத்துக்கு நீலகிரி எக்ஸ்ப்ரசில் முன்பதிவு செய்யச் சென்றேன். காத்திருப்போர் பட்டியல் எண் ஐந்து எனனை பார்த்து சிரித்தது. 

திரும்பி வருவதற்கு இருபத்தி இரண்டாம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் நீலகிரி எக்ஸ்ப்ரசிலும் இதே பிரச்சினை தான்.

எனினும், நான் பரவாயில்லை என்று சொல்லி விட்டு பயண டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டேன். இறையருள் வேண்டி நின்ற எனக்கு புறப்படும் நாளான இருபத்தோராம் தேதி அன்று வெயிட் லிஸ்ட் கிளியர் ஆகி தானாகவே கன்ஃபர்ம் ஆகி இருந்தது. இறைவனின் திருவருளால்  இது ஆயிற்று என்று எண்ணி மனமிக மகிழ்ந்து சிவனுக்கு நன்றி பாராட்டினேன். 

அது என்னவோ தெரியவில்லை. தற்போதெல்லாம் சத் சங்கங்கள் வெகு சாதாரணமாக வாய்க்கின்றன .அதுவும் இறையருளின்றி நடக்காது அல்லவா? 

ரயில் நிலையம் சென்றதும் நான் எனது பெட்டி எண்ணையும், படுக்கை எண்ணையும் ஊர்ஜிதம் செய்து கொண்டு பெட்டிக்கு சென்றேன். எனக்கு எதிரே ஒரு சுவாமிஜி அமர்ந்திருந்தார். நல்ல உயரம், ஆஜானுபாகுவாக இருந்தார். தொப்பை எதுவும் இல்லை. முகம் அதிதேஜஸாக இருந்தது. அவருக்கு நமஸ்காரம் சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்தேன். உதகையில் உள்ள ஸ்ரீநாராயண குருகுல ஆஷ்ரமத்தின் சீனியர் ஸ்வாமிகளில் அவரும் ஒருவர். ரயில் புறப்படும் வரை சுவாரசியமான ஆன்மீக விஷயங்களை நிறைய என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் என்னைப் பற்றி அவருக்கு அறிமுகம் செய்து கொண்டேன். அவரது பூர்வீகம் கல்கத்தா ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டி தான் என்றார். ஆங்கில மீடிய  பள்ளிகளில் படித்ததினால் தமிழ் பேச வராது. ஆனால் யாராவது பேசினால் தமக்கு நன்றாக புரியும் என்கிறார். அப்போது நான் ஸ்ரீநாராயண குரு எவ்வாறு தமிழ், ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றிருந்தார் என்பதையும் தமிழில் அவர் எழுதிய பாடல்களைப் பற்றியும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வள்ளலார் பற்றிய நாராயண குருவின் பார்வைகளை சுவாமிஜி மிகவும் ச்லாகித்து பேசினார். ''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்னும் பிற உயிரை தன உயிர் போல நேசிக்கும் பாடலை தமிழில் சொல்லி அவருக்கு விளக்கிய போது மிகவும் மகிழ்ந்தார். இவ்வாறாக அருமையான சத் சங்கத்துடன் எனது குன்னூர் பயணம் துவங்கியது. வடநாட்டுப் பக்கம் தொடர் பயணங்கள் முடித்து வரும் சுவாமிஜிக்கு ஓய்வு தேவை என்பதால் அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு அவருக்கு படுக்க இடம் கொடுத்து விட்டு மேல் பெர்த்துக்கு சென்றேன். ஒன்பதரை மணியளவில் உறங்கச் சென்றேன். நல்லதொரு சத்சங்கத்தினை தந்த சிவனுக்கு நன்றி கூறி ஆராதித்து விட்டு படுத்தேன். அதிகாலை மேட்டுப்பாளையம் செல்லும் வரை நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தேன். காலை சுமார் ஆறு மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்று சேர்ந்தேன். 

(தொடரும்)

அமரநாதம் - 2011 - பகுதி ஒன்று

அமர்நாத் - தொடரும் சிவகணங்கள்....


ஓம் நமசிவாய..

கடந்த ஆண்டு வைஷ்ணோதேவி, அமர்நாத் திருத்தல யாத்திரை போய் வந்த பிறகு இங்கே நான் பதிவிட்ட அனுபவங்களை தொடர்ந்து படித்து பாராட்டிய இறையடியார்களுக்கு பணிவான வணக்கங்கள். 

கடந்த ஆண்டு (2010) அமர்நாத் யாத்திரை செல்வதற்காக பால்டால் அடிவார முகாமில் தங்கியிருந்த போது குன்னூர், ஈரோடு, கோவை பகுதிகளைச் சேர்ந்த பதினைந்து அன்பர்களை சந்தித்தேன். இருபத்தைந்து முதல் முப்பந்தைந்து வயது கொண்ட துடிப்பான சிவனடியார்களான அவர்கள் ஒன்பதாவது முறையாக அந்த சமயம் அமர்நாத்துக்கு தொடர் யாத்திரையாக வந்திருந்தார்கள். பவானி இரவி என்னும் அன்பர் (நீலகிரி-கூனூரை சேர்ந்தவர்) அவர்களை வழிநடத்தி வந்திருந்தார். அவர்களது அன்பும், ஆர்வமும், துடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களுடன் அளவளாவிய சமயம் அவரது முகவரி செல்பேசி எண்ணைக கேட்டு வாங்கினேன். ஆனால் மிகச் சிறிய துண்டு காகிதத்தில் எழுதி வாங்கியதால் சென்னை வந்த பின்னர் என்னால் அதனைக் கண்டு பிடிக்க இயலாமல் போய் விட்டது. 

எனது முகவரியையும் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்களால் என்னையோ அல்லது நான் அவர்களையோ தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனை ஒரு துர்பாக்கியமாகவே கருதினேன். 

தொடர்பு கிட்டாமல் போனதால் அவர்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கிடைக்காமல் போனது. அதனால் அவர்களைச் சந்தித்த அந்த இனிய கணங்களை எனது யாத்திரை பயண அனுபவத் தொடரில் குறிப்பிட இயலாமல் போய்விட்டது.

ஆனால் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வேறு ஏதோ புத்தகத்தை தேட எதை எதையோ குடைந்த போது சிறிய துண்டுக் காகிதம் கண்ணில் தென்பட பவானி இரவி (அமர்நாத் பாத யாத்திரைக் குழு) என்ற அந்தப் பெயர் என் நினைவுப் பகுதியை தூண்டி விட ''ஆஹா. கிடைத்து விட்டதே என மகிழ்ந்து பவானி இரவியை செல்பேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினேன்.'' 

கிட்டத்தட்ட 340 நாட்கள் கழித்து பேசியும் இரவி என்னை நினைவில் வைத்திருந்தார். இரண்டு மாதங்கள் முன்புதான் அந்த அணியினர் நேபாளம் சென்று பசுபதிநாதரையும், முக்தினாதரையும் தரிசனம் செய்து விட்டு வந்ததை தெரிவித்தார். 

இந்த ஆண்டு பத்தாவது முறையாக அவர்கள் ஜூன் இருபத்து மூன்றாம் தேதி அன்று சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்ப்ரசில் பதிவு செய்திருந்த செய்தியைத் தெரிவித்தார். என்னையும் அவர்களுடன் கலந்து கொள்ள அழைத்தார். ஜூன் இருபது (அதாவது நான் பதிவிடும் இந்த நாள்) வரை எனது எம்.எஸ்சி. (யோகா) தீசிஸ் சப்மிஷன், வைவா போன்ற கமிட்மெண்ட்கள் இருப்பதினால் என்னால் அவர்களுடன் யாத்திரையில் கலந்து கொள்ள இயலாமல் இருப்பதினை அவருக்கு தெரிவித்தேன். அ(சி)வன் அழைக்காமல் எப்படி செல்லமுடியும்?

இருப்பினும் பவானி இரவி என்னை இருபத்தி இரண்டாம் தேதி அன்று குன்னூரில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் பூஜை மற்றும் அதற்கு பின்னர் நிகழ உள்ள அன்னதான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்னை அழைத்தார். அதனை சிவனின் அழைப்பாக ஏற்றுக் கொண்டு உடனே நீலகிரி விரைவு ரயிலில் 21-ந்தேதி அன்று இரவு முன் பதிவு செய்தேன். 

மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழில் என் பெயரை அன்னதான வைபவத்தை துவங்கி வைப்பவர்கள் பட்டியலில் வெளியிட்டிருந்தார். எனது பெயரை குறிப்பிட்டு, அதனைத் தொடர்ந்து சிவனடிமை, சென்னை என்று வெளியிட்டிருந்த விதம் என்னை நெகிழச் செய்தது. 

கடந்த முறை என்னுடன் அமர்நாத் பயணித்த அன்பர்களோடு இந்த விவரங்களை பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வசூலித்து அதனை அவருக்கு மணி ஆர்டர் அனுப்பினேன். மிகவும் மகிழ்ந்து போன அவர்கள் நான் கண்டிப்பாக குன்னூருக்கு வந்தே ஆக வேண்டும் என்று அடிக்கடி போன் செய்து அழைத்தார். இன்று கூட என்னை நினைவு படுத்தினார். சிவனருளால் இன்று எனது தீசிஸ் மற்றும் ப்ராஜெக்ட்களை யூனிவர்சிட்டியில் சேர்த்து விட்டேன் (இருபது ஜூன் தான் அதற்கான கடைசி நாள்). எனது தீசிசை கடந்த சனியன்று (18.06.2011) ICF Colony சத்சங்கத்தில் நிகழ்ந்த திருமந்திர வகுப்பின் போது, சிவனுக்கு அர்ப்பணித்து பூசைகள் செய்து எடுத்துக் கொண்டேன். 

எனது தீசிசின் டெடிகேஷன் பக்கத்தில் இவ்வாறு எழுதி இருந்தேன்:

DEDICATED
TO LORD SHIVA-THE YOGISHWAR, 
MAHARISHI PATHANJALI,
SAINT THIRUMOOLAR, ALL YOGINS, YOGINIS, MY PARENTS,
BELOVED FAMILY MEMBERS
&
TO MY YOGA ASAN
YOGI DR.T.A.KRISHNAN, THIRUMOOLAR YOGA &NATURAL DIET RESEARCH CENTRE, CHENNAI

சிவனருளால் அனைத்தும் நல்ல படியாக நடந்து வருகிறது. ஆகவே, 21.6.2011 இரவு சிவனடியார்கள் நடத்தும் சிவபூசை, மற்றும் அன்னதான நிழச்சியில் கலந்து கொள்ள குன்னூர் சென்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் குழும அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த முறை பவானி இரவி குழுவினர் பத்ரிநாத், கேதார்நாத் சென்று பின்னர் அங்கிருந்து ஜம்மு சென்று வைஷ்ணோதேவி (கத்ரா) யாத்திரை மேற்கொண்டு அதன் பின்னர் அமர்நாத் குகைக்கு பயணிக்கிறார்கள். 

நான் அவர்களது குன்னூர் வைபவங்களில் கலந்து கொண்டு விட்டு பின்னர் அவர்களுடனே புறப்பட்டு சென்னை வந்து அவர்களை புனித யாத்திரைக்கு வழியனுப்ப இருக்கிறேன். 

இந்த முறை அமர்நாத் செல்ல இரண்டரை லட்சம் பக்தர்கள் பதிவு செய்திருப்பதாக சமீபத்தில் வெளியான செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 

எண்ணமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் என் சிவன் என்னை அவரது அடியார்களுடன் தொடர்பு கொள்ள வைத்திருப்பதை என்னவென்று சொல்வேன்? எல்லாம் சிவனருள் தான் என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது. அடுத்த ஆண்டு அவர்களது அணியில் என்னையும் இடம் பெறச் சொல்லி குன்னூர் சிவனடியார்கள் எனக்கு அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்கள். அதனை இறைவன் எனக்கு இட்ட ஆணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

குன்னூர் சென்று வந்த அந்த நிறை இறை அனுபவங்களை உங்களுடன் படங்களுடன் காணொளிகள் எண்ணப் பதிவுகள் என்று பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை போன்ற இறையன்பர்களுடன் அளவளாவ மீண்டும் ஒரு நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கும் இறையருளை பணிகிறேன். 

சிவனருள் பொலிக. 


(சிவகணங்கள் தொடரும்)

-- 

   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?