Friday, October 28, 2011

5. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


நேபாளப் பயணக் கட்டுரை- பத்தர் பரசும் பசுபதிநாதம் 

ஓம் நமசிவாய.

lord_shiva.jpg

எந்தையும் தாயுமாய் இருந்தாய் போற்றி.
சிந்தை முழுதும் நிறைந்தாய் போற்றி.
பசுபதிநாதனே போற்றி போற்றி.

இடுகை: ஐந்து 

நேபாளப் பயணம் துவங்குகிறது.

14.09.2011: சென்னையில் இருந்து கோரக்பூருக்கு (ரயில் பயணமாக).

எங்கள் பயணத் திட்டப் படி செப்டம்பர், 2011 பதினான்காம் தேதி அன்று ரப்திசாகர் எக்ஸ்ப்ரஸ் (திருவனந்தபுரம்-கோரக்பூர்) சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு பதினொன்று இருபதுக்கு புறப்படவேண்டும். ஆனாலோ திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ரயில் அன்று சென்டிரல் வருவதற்கு தாமதாமாகிக் கொண்டிருந்தது. காரணம் அதற்கு முந்தைய தினம் (13.09.2011 அன்று) அரக்கோணம் அருகே ஏற்பட்ட மின்தொடர் வண்டி மற்றொரு ரயிலின் மேல் மோதியதால் ஏற்பட்ட துயர விபத்தின் காரணமாக சென்னைக்கு வரும் ரயில்களின் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. எனவே பல இரயில்கள் மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருந்தன. 

பலமணிநேர காலதாமதம் தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டது. அன்று முழுவதும் அடிக்கடி கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு அரக்கோணம்-சென்னை பாதை சீரமைக்கப் பட்டு விட்டதா? இரயில்கள் போக்குவரத்து  சீராகி விட்டதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தோம். தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் பணி புரியும் எனது நண்பர்கள் எங்களுக்காக இந்த தகவல்களை அடிக்கடி சேகரித்து சரிபார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அன்று மாலை இல்லம் வந்து பயண ஏற்பாடுகளை கவனித்தேன். என் மனைவி பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நிறைய சப்பாத்திகள், தொட்டுக் கொள்ள வெங்காயம்-தக்காளி தொக்கு மற்றும் புளிசாதம் போன்றவற்றை தயாரித்து வைத்திருந்தாள். அவற்றை பேக் செய்து எடுத்துக் கொண்டேன். இறையடியார் சேகர்ஜி என்னுடன் போனில் பேசினார். அவர் சென்டிரலில் வந்து எங்களை வழியனுப்ப ஆர்வமாக இருந்தார். அவருடன் மழலையும் சேர்ந்து வர திட்டமிருந்ததாம்.

சென்டிரல் ரயில் நிலையத்தில் நிறைய பயணிகள் கூட்டம் இருந்ததால், நிற்க இடமில்லாமல் இருந்தது முதல் நாள் இரவில் இருந்து பயணிகள் தாங்கள் புறப்படவேண்டிய இரயிலுக்காக காத்திருந்தார்கள். அந்த சந்தடியில் இறையடியார்கள் வந்தால் அவர்களுக்கு தொந்தரவாக அமையும் என்பதினால் அன்பர சேகர்ஜியை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர் பயணம் வெற்றியடைய வாழ்த்துக் கூறினார். சற்று நேரம் கழித்து மழலையும் என்னுடன் பேசியது. சாதுவாக பயணத்தை முடித்து வரச் சொல்லி வாழ்த்தியது மழலை. எனது துணைவியார் இல்லாமல் தனியாகச் செல்வதை சாதுவாகப் (சாமியார் மாதிரி) போய் வாருங்கள் என்று (நகைச்)சுவையாக குறிப்பிட்டார் மழலை.

இரத்தினமாலை குழும இறையடியார்கள் ஒவ்வொருவரும் எனது பயண வெற்றிக்கு மின்மடல் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்கள். மின் தமிழ் மடலாடற்குழும ஆன்றோர்களும் மின்மடல் மூலமாக வாழ்த்து சொல்லி எனது பயணத்தினை வளமாக்கினார்கள். மறவன்புலவு ஐயா, இன்னம்பூரார் போன்ற மற்றும் பல அறிஞர்கள் எல்லாம் போனில் அழைத்து வாழ்த்திட நான் என்ன புண்ணியம் செய்திருப்பேன்? என்று எண்ணி எண்ணி இறுமாந்தேன். இந்த பெரியோர்களின் அன்பும், ஆசியும் எங்களுக்கு பயண முழுமையும் ஆதரவாகவும், பக்க பலமாகவும் அமைய உதவியது.

இரவு எட்டு மணிக்கெல்லாம் சென்டிரல் இரயில நிலையம் சென்று விட்டேன். பின்னர் சக யாத்திரிகள் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர். இரவு ஒன்பதரை அளவில் அனைவரும் ஒரு இடத்தில் குழுமினோம். நிற்கக் கூட இடம் இல்லாமல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணி நேரமாக இரயில்கள் வந்து சேர்தல், புறப்படுதலில் நிச்சயமற்ற தன்மை நிலவியதால் அனைவரும் எரிச்சலுடனும், சலிப்புடனும் காணப்பட்டார்கள். அந்த மன நிலையில் அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். காரணம் எங்களுக்கு தெரியவந்த சேதி தான். அதாவது முந்தைய நாளிரவில் கேரளாவில் இருந்து வரும் ரயில்கள் அரக்கோணத்துக்கு முன்னதாக திருப்பி விடப்பட்டு ரேணிகுண்டா அல்லது கூடூர் இரயில நிலையத்தில் இருந்து புறப்பட்டனவாம். அந்த வண்டிகளில் முன்பதிவு சென்னைப் பயணிகள் சென்னையில் இருந்து வேறொரு ரயிலில் பயணித்து கூடூர்/ரேணிகுண்டா போய் அங்கு காத்திருந்த தத்தம் இரயில்களில் ஏறிச் சென்றிருக்கிறார்கள். இன்றும் அதுபோல நிகழுமா என்ற எதிர்பார்ப்பும் கவலையும் எங்களை கவ்விக் கொண்டன. இந்த மாதிரி நேரங்களில் முறையான அறிவிப்புகளை செய்யாமல் காத்திருக்கும் பயணிகளை சலிப்படையச் செய்வதில் இருந்து இரயில்வே நிர்வாகம் இன்னும் விடுபடவில்லை என்பதையும் வருத்தத்துடன் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பரபரப்புடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிர்வாகம் இன்னமும் மக்கள்தொடர்பில் சரியாக முன்னேறவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகவே இருக்கிறது. எந்த பிளாட்பாரத்தில் எந்த இரயில புறப்படும் என்று அறிவிக்கும் டிஸ்ப்ளே பலகையில் உள்ள செய்தியும், CCTVயில் அறிவிக்கப்படும் செய்திகளும் பொருந்தவே இல்லை. 

இதனால் ஏற்பட்ட சங்கடங்கள் என்னவென்றால் டிஸ்ப்ளே பலகையில் பார்த்துவிட்டு ஒன்றாம் எண் பிளாட்பாரத்தில் நாங்கள் காத்திருக்க, நீண்ட நேரம் கழித்து CCTVயில் அறிவிக்கப்பட்ட பிளாட்பாரம் எண் வேறாக இருந்தது. இதனால் ஒன்றாம் எண் நடை மேடையில் இருந்து எட்டாம் எண் நடைமேடைக்கு பயணிகள் கூட்டத்தில் நீந்தி தவித்து வர வேண்டியதாயிற்று. ஏனெனில் எனது சகபயணிகள் ஏழு பேரில் ஒருவர் மாற்றுத் திறனாளி. ஒரு செயற்கைக் காலில் நடந்தாக வேண்டும். மற்ற இருவர் வயதானவர்கள். மற்ற நால்வரில் ஒரு இளைஞி தவிர மற்ற எல்லாருமே ஐம்பது வயதினைக் கடந்த ஆண் பெண்கள். பத்து நாள் பயணம் என்பதால் பெட்டிகள் நிறைய வந்திருந்தன. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்று வந்த அனுபவம் காரணமாக எனது லக்கேஜ்களை பார்த்து பார்த்து எடுத்து வைத்திருந்தேன். சாப்பாட்டு பை ரயிலில் தீர்ந்து விடும். மற்ற பெட்டி/பைகள் சமாளிக்கக் கூடிய எடையுடன் அமைத்துக் கொண்டிருந்தேன். பிறர் உதவியின்றி இழுத்து/தூக்கிச் செல்லக்கூடியவிதமாக அவைகள் இருந்தன.

எது எப்படி இருப்பினும் நீண்ட நேர காத்திருத்தல், சலிப்பு, தூக்கம் இவற்றை எல்லாம் தாண்டி நள்ளிரவு/அதிகாலை பன்னிரண்டரை மணிக்கு ஒருவழியாக நாங்கள் பயணிக்க வேண்டிய ரப்திசாகர் எக்ஸ்ப்ரஸ் சென்டிரல் வந்து சேர்ந்தது. எங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இரயிலில் எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அதிகாலை ஒன்றரை மணிக்கு சென்டிரலில் இருந்து எங்களது வண்டி புறப்பட்டது. அவரவர் இல்லங்களுக்கு போன் செய்து விவரங்களைத் தெரிவித்து விட்டு, நல்லபடியாக பயணம் நடைபெற வேண்டும் என்று எல்லாம் வல்ல பசுபதிநாதரையும், அன்னை பராசக்தியையும் வேண்டிக்கொண்டு உறங்கச் சென்றோம். 

(பகிர்வுகள் தொடரும்)

அஷ்வின்ஜி.

4. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


நேபாளப் பயணக் கட்டுரை.

பத்தர் பரசும் பசுபதிநாதம். 
இடுகை : நான்கு - பயண முன்னேற்பாடுகள்.

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 
(திருவாசகம் - மாணிக்கவாசகப் பெருமான்)


இரவில் ஒளிரும் அருள்மிகு பசுபதி நாதர் திருக்கோவில் 
(நன்றி: கூகிள் இமேஜஸ்)

எங்கள் அனைவருக்குமே நேபாளம் செல்வது முதல் முறை என்பதால் நேபாளப் பயணம் பற்றிய நிறைய ஐயங்கள் இருந்தன. 

திருக்கயிலைக்கு நேபாளம் வழியாக யாத்திரை சென்று வந்த திருவாளர்கள் கீதாசாம்பசிவம் தம்பதியினரை நேரில் சந்தித்து ஆலோசித்தேன். செப்டம்பர் மாதம் பதினான்கு தேதிகளில் நாங்கள் புறப்படுவதை கேட்ட கீதாஜி "அந்த சமயம் நேபாளத்தில் மழைக் காலமாய் இருக்குமே. சரியாக விசாரித்துத் தானே பயணம் செல்ல திட்டமிட்டீர்கள்?" என்று கேட்டார். செப்டம்பர் பதினைந்தில் இருந்து அக்டோபர் பதினைந்து வரை நல்ல பருவ நிலை நிலவும் சமயம் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னரே பயணத்துக்கு திட்டமிட்டிருப்பதை கூறினேன். கீதா-சாம்பசிவம்  தம்பதியர் எங்கள் பயணம் வெற்றி பெற ஆசி கூறி அனுப்பினார்கள்.

மேலும் விவரங்களைப் பெற கூகிளாரின் உதவியுடன் நேபாளம் பற்றிய செய்திகளை திரட்டினேன். எனது குழுவில் இருக்கும் திரு.மங்களேஸ்வர் இணையத்தில் இருந்து நிறைய செய்திகளை திரட்டித் தந்தார். 

எண்ணங்கள் தோறும நேபாளம் நிறைந்திருக்கநேபாளம் பற்றி திரு.அருசோ எழுதியுள்ள புத்தகத்தை மயிலை இராமகிருஷ்ணமடம் நூலகத்தில் இருந்து வாங்கி வந்து படித்தேன். ஏற்கனவே நேபாளம் பற்றி திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தனது கயிலை பயணக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்கள். மற்றும் எனது அலுவலக நண்பர் திரு சுதர்ஷன் பிரசாத் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நேபாள பயணம் சென்று வந்தவர் அவரும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கடந்த ஆண்டு வைஷ்நோதேவிக்கும், அமர்நாத்துக்கும் எங்களுடன் தனது சகோதர, சகோதரியுடன் பயணம் வந்த திரு.சுதர்ஷன் பிரசாத், தவிர்க்க முடியாத அலுவலகப் பணி காரணமாக எங்களுடன் இந்த முறை வர இயலவில்லை.

சுவாமி சித்பவானந்தாவின் ''திருக்கயிலை யாத்திரை'', மற்றும் சிங்கை கிருஷ்ணன் அவர்களின் நேபாளகயிலை யாத்திரை பற்றிய புத்தகங்களைப் படித்து நேபாளம் பற்றிய செய்திகளை மனதில் குறித்துக் கொண்டேன்.
  
(பகிர்வுகள் தொடரும்)

அஷ்வின்ஜி 

Wednesday, October 26, 2011

தீப ஒளி வாழ்த்துக்கள். இன்ப ஒளி பரவட்டும்.


இனிய இறையடியார்களுக்கு 

என் தீபாவளித் திருநாள் 

வாழ்த்துக்கள்.



உங்கள் வாழ்க்கையின் 
எண்ணக கோலங்கள் யாவும் 
வண்ணக் கோலங்களாக 
மிளிர சிவனருள் வேண்டுகிறேன். 

அன்பு ஒளி பரவட்டும்;
இன்பமெங்கும் நிலவட்டும்.

நன்மைஎன்றும் நிலைக்கட்டும்,
தீதெல்லாம் விலகட்டும்.

வாழி நலம் சூழ 
இறையருள் பொலிக.

Sunday, October 23, 2011

3. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


நேபாளப் பயணம்: பசுபதிநாதரை தரிசித்தோம்.

இடுகை மூன்று.


சிவபாலன் (பசுபதிநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில்) 

திருச்சிற்றம்பலம்.
அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே
..
தாயுமானவரின் பராபரக்கண்ணி.

பசுபதிநாதர் அழைக்கிறார்.

நான் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்த சிவனடியார்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் (மார்ச் ஏப்ரல் மாதங்களில்) தொடர்ந்து சந்தித்து கயிலைப் பயணம் பற்றி பேசினேன். அவர்களுக்கு இந்த ஆண்டு கயிலைப் பயணம் செய்வதில் சில சிரமங்கள் இருந்தன. இந்த அன்பர்கள் குடும்பத்துடன் ஏற்கனவே சார்தாம் யாத்திரை (பத்ரிநாத், திருக்கேதாரம், கங்கோத்ரி, யமுநோத்ரி)  மற்றும் இந்தியாவில் வடக்குவடமேற்குவட கிழக்கு பகுதிகளில் உள்ள மிக பிரசித்தி பெற்ற சிவ/வைணவத் தலங்கள்சக்தி பீடங்களை கடந்த பல ஆண்டுகளாகத் தரிசித்தவர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு நேபாளம் செல்வதற்கான ஆயத்தங்களில் அவர்கள் ஈடுபட்டு இருந்தார்கள்.   

நான் சார்தாம் யாத்திரை இது வரை சென்றதில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஹரித்வார்ரிஷிகேசம் இரண்டு மூன்று முறை சென்ற அனுபவம் உண்டு. கடந்த ஆண்டு (2010ல்) அமர்நாத்-வைஷ்நோதேவி சென்று வந்த அனுபவம் உண்டு.

இந்த இறையடியார்கள் நேபாள யாத்திரை பற்றிய சிந்தனையில் இருந்ததால் இவர்களது சத்சங்கத்தில் இணைந்து கொண்டு பசுபதிநாதரை தரிசிக்க ஒரு வாய்ப்பினை அம்மையப்பனே எனக்குத் தந்திருப்பதாக உணர்ந்தேன்.

அவர்களது பயணத் திட்டத்தை அறிந்து கொண்டேன். என்னையும்  அவர்களுடன் இணைத்துக் கொள்ள தீர்மானித்தேன். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திர வந்த அன்பர்களிடம் நேபாளப் பயணம் பற்றித் தெரிவித்து அவர்களையும் எங்களது பயணத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்களோ, இந்த ஆண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல் இருப்பதை வருத்தத்துடன் என்னிடம் தெரிவித்து விட்டார்கள்.  பசுபதிநாதரை தரிசிக்க என்னையும் சேர்த்து பன்னிரண்டு பேர் பதிவு செய்து கொள்ள தயாரானார்கள்.

இதனைத் தொடர்ந்து நேபாள பயணத் திட்டத்தின் முதல் கட்டமாக செப்டம்பர் மாதப் பயணத்திற்கான எங்களது முன்பதிவுகளை ஜூலை மாதமே செய்தோம். 

        எங்களது பயணத் திட்டம் கீழ்க் காணும் வகையில் இருந்தது. 

  • 14-09-2011 அன்று சென்னையில் இருந்து ரப்திசாகர் (Raptisagar Express)எக்ஸ்ப்ரஸ் மூலம் கோரக்பூர்(Gorakhpur) செல்வதற்கான முன்பதிவு. 
  • 16-09-2011 அன்று மாலை கோரக்பூரை அடைதல். இரவு கோரக்பூரில் தங்குதல்.
  • 17-09-2011 அன்று காலை கோரக்பூரை விட்டு புறப்பட்டு பஸ் மூலம் சுனாவ்லியை அடைதல். (சுநாவ்லி இந்திய-நேபாளம் எல்லையில் இந்திய பகுதியில் அமைந்துள்ளது. கோரக்பூரில் இருந்து பஸ் மூலம் இந்த ஊருக்குச் செல்ல இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஆகும்)
  • பின்னர் இந்திய எல்லையை கடந்து நேபாள எல்லைக்குள் உள்ள பெலாஹியா என்னும் இடத்தை அடைதல். காத்மாண்டு செல்லும் பஸ்கள் (சிறு நடை தூரத்தில் பைரவா பஸ்/விமான நிலையம் உள்ளது) இங்கே கிடைக்கின்றன. அதன் பின்னர் அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் புறப்பட்டு காத்மாண்டு செல்ல. எட்டு மணி நேரப் பயணம் செய்யவேண்டும்.
  • 17-09-2011 அன்று இரவு காத்மாண்டுவில் தங்குதல்.
  • 18-09-2011: அன்று காலை காத்மாண்டுவில் பசுபதிநாதர் திருக்கோவில், புத்தநீல்கண்டா(ஜலநாராயணர்)புத்தநாத் (ஸ்வயம்புநாத்) மற்றும் குஹ்யேஸ்வரி திருக்கோவில்களை தரிசிப்பது.
  • இரவு காத்மாண்டுவில் தங்கி விட்டு பின்னர் அங்கிருந்து முக்திநாதம் (சாளக்ராமம்) செல்வது. முக்திநாதர் தரிசனம் பெற்ற பிறகு நேரம் கிடைத்தால் ஜனக்புரி (சீதாபிராட்டியாரின் ஜனனபூமி) செல்வதுபின்னர் லும்பினி (புத்தர் பிறந்த இடம்) செல்வது என பயணத் திட்டம் ஒன்றினை வகுத்துக் கொண்டோம். (எங்களது பயணத் திட்டங்கள் தேவைக்கு ஏற்ற படி மாற்றி அமைக்கக் கூடிய அளவுக்கு இருந்தன).
  • 22-02-02011 அன்று காலை கோரக் பூர் அடைதல்கோரக்னாதர் திருக்கோவிலை தரிசித்தல் அன்று இரவு தங்குதல்.
  • 23-09-2011 அன்று கோரக்பூரில் இருந்து காலை புறப்படும் ரப்திசாகர் விரைவு வண்டியில் பயணித்து 25-0-9-2011 அன்று நள்ளிரவு சென்னை அடைதல்.
மேற்கண்ட வகையில் எங்கள் பயணத் திட்டத்தை வடிவமைத்துக் கொண்ட பின்னர் பயணத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களுடன் புறப்படுவதற்கான நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம். 

(பகிர்வுகள் தொடரும்)
--
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?