Wednesday, February 2, 2011

பாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.



கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.


இடுகை மூன்று: சமவெளி மனிதனின் மலைவெளிப் பார்வை.

அதிகாலைக் கருக்கலில், நீண்ட நெடிய மலைப்பாதையில் யாத்ரிகள்.

மூன்று மணியளவில் குதிரைகள் குகை நோக்கி பயணத்தை தொடங்கின. வெகு தூரத்திற்கு அந்த பாதையில் லங்கர்கள் (இலவச உணவு மையங்கள்) வந்து கொண்டே இருந்தன. முடிவில் இருளடர்நத மலைப்பாதையில் செல்ல ஆரம்பித்தோம். 


உடம்பை நன்றாக இன்சுலேட் (insulate) பண்ணியிருந்தாலும் குளிரியது. குதிரைப்பயணம் அவ்வளவு சவுகரியமாக இல்லை. இருட்டில் பள்ள மேடுகளும் உயரங்களும் சரியாக தெரியாதலால் விடியும் வரை பயம் தெரியவில்லை. விடிந்த பின் பயம் பழகிவிட்டது. 


என் குதிரையின் உயரம் என் காலை தரையில் தேய்த்துக் கொண்டே வந்ததால் நான் அஷ்வினின் உயரமான குதிரையை மாற்றிக் கொண்டேன்(அவருக்கு அதில் விருப்பமில்லை). ஆனால் வழியில் அது செய்த அட்டகாசம், மற்றவர்க்கு சிரிப்பும் அஷ்வினுக்கு கோபத்தையும் வலியையும் கொடுத்தது. 


ஒரு முறை அது திடீரென்று எதிர்ப் புறமாக திரும்பிக் கொண்டு மலையில் இருந்து கீழே நோக்கி இறங்க ஆரம்பித்து விட்டது. குதிரைக்காரன் காஷ்மீரியில் சிரித்துக் கொண்டே போராடி இழுத்து வந்தான். அதிகம் சிரித்தால் உதடு வெடித்து விடும் அபாயத்தால் நான் சிரிக்கவில்லை. (இதை படிக்கும் அஷ்வின் கண்டிப்பாக பல்லை கடிப்பது உறுதி). மனிதனுக்கு இன்பம் நீண்டு கொண்டே சென்றால் எந்த ஆட்சேபணையும் இருக்காது.  ஆனால் துன்பம் ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டாலும் சடுதியில் முடிந்துவிட வேண்டும், என்ற தீர்மானம் அவனுக்குக் குழந்தையிலிருந்தே தீர்ககமாக இருக்கிறது. 


ஆகவே எங்கள் குதிரைப் பயணம் சட்டென்று முடிய வேண்டும் என்ற எண்ணம் எங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம், குளிர் ஏறத் தொடங்கியது.  ஐயா! அது மார்கழி மாத சென்னைக் குளிரில்லை. இமயமலைக் குளிர் !!!!


தங்கஒதுங்க இடமில்லா மலையோரத்து p பாதையில் உயரங்கள் பயமுறுத்தும் குளிரான குளிர்! இறங்கு முகமே தெரியவில்லை.

குளிரோ அதிகரித்துக் கொண்டே சென்றது. 


சென்னை வெயிலில் திட்டித் தீர்த்த சூரியனை வேண்ட வைத்த குளிர். 

புகைப் பழக்கமில்லாத நபரையும் புகை(போ)க்க வைத்த குளிர். 

மாநிறமான என் முகமே சிவந்து போக காரணமாகிய குளிர். 

ஆனால் எங்களை சுமந்த குதிரைகளுக்கு வியர்த்தது. உழைப்பு எந்த துன்பத்தையும் தாங்கும் என்று காட்டிய வியர்த்த குதிரைகள் ஓரிடத்தில் இயற்கை மலையில் தொங்க விட்ட சிற்றருவியில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டன. தண்ணீருக்கு அவை முண்டியடிக்கும் போது சற்று நம்மை தடுமாற வைத்தது. குதிரையின் பால் எனக்கேற்பட்ட பரிதாப உணர்வை பயமாக்கியது அந்த தடுமாற்றம். 

நானும் அடங்காமல் எனது ஹேன்டிக்காமில் இந்த நிகழ்வை பதிவு செய்து கொண்டிருந்தேன். தடுமாற்றத்தில் காமிராவை விட நானே முக்கியம் என்ற தெளிவு ஏற்பட்டது. சமவெளி மனிதர்களின் சராசரி புரிதல்கள் மற்றும் திரிபுகள் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க வேண்டிய அவசியம் அந்த மலையனுபவத்தில் எல்லோருக்கும் ஏற்படும். இதுவே இந்த பயணத்தில் நான் கண்டறிந்த மிகப்பெரிய உண்மை. 


(கோவிந்த் மனோஹரின் பயண அனுபவம்  தொடர்கிறது)


-----------------------------------------------------------------------------
கோவிந்த் மனோஹரிடம் இருந்து நன்றியுடன் இந்த பதிவுகளை வேதாந்த வைபவம் 
வலைப்பூவில் பதிவிடுபவர்: -
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------

Sunday, January 30, 2011

பாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள் - கோவிந்த் மனோகர்.


கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.
இடுகை இரண்டு:-

கோவிந்த் மனோகர் (லங்கரில் கையில் தண்ணீர் பாட்டில்களுடன்)

அதிகாலை 2 மணியளவில் பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் பரபரப்பாய் இயங்கும் ஒரு இடத்தின் இரைச்சலில் எழுப்பப்பட்டோம் அன்று. முன்னிரவில் கடைசியாக சிந்தடிக் கழிவரை சென்று திரும்பும் போது ஏற்பட்ட நடுக்கம் ஞாபகத்திலிருந்து மறையும் முன்பே மறுபடியும் நடுங்கும் குளிரில் அமர்நாத் குகைக்கு செல்லவேண்டிய தருணம் வந்து விட்டதில் எந்த சென்னைவாசிக்குமே ஓவ்வாமை ஏற்படும்தான்.

முந்தைய நாளில் 'முடியவில்லையென்றால் நாம் குகைக்கு செல்ல வேண்டாம்' என்று தெளிவாக பேசிக் கொண்ட நானும் அஷ்வினும் மனம் மாறாமலேயே படுக்கையை விட்டு எழுந்தோம்.

எங்களை மதிக்காமல், அதாவது நாங்கள் வருவோமா மாட்டோமா என்ற கேள்வி எழுப்பாமல், என் மனைவியும் அவர் சகோதரியும் மற்ற சில பெண்களும் (பெண்களுக்கு திட சிந்தனை ஆண்களைவிட அதிகம் என்ற ஞானமும் எனக்கேற்பட்டது அப்போது) டோலியில் ஏறி குகைக்கு முன்னேறிவிட்டனர். (ஒரு டோலிக்கு ரூ.6500 குகை சென்றுவர). 

எங்களுள் சிலர் நடந்து போக போவதாக கூறினர் அதில் திருமதி உஷாராணியும் (எங்கள் அலுவலக நண்பி) அடக்கம். 

நடந்து போவதால் ஏற்படும் பிரச்சனைகள் எனக்கு சுமாராக தெரியுமாதலால் அவர்களுக்கு அதை எடுத்துச் சொன்னேன். விதி வலியதில்லையா? யாருமே நான் சொன்னதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. (ஆனால் அன்று மாலையே குதிரையில் திரும்பி வந்து என்னை போற்றினர்). 

வலிமையான விதிக்கு நாங்கள் மட்டும் விலக்கா? குகைக்கு செல்ல வேண்டும் என எனக்கு தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து சும்மா திரும்பி செல்வதா? அதுவும் இது பால்டால் வழி 

1995ல் நாங்கள் சென்றதோ வேறு ஒரு வழி பெஹல்காம்சந்தன்வாரி பாதை. ஆகையால் புது அனுபவத்தை இழக்க மனம் குளிரிலும் விரும்பவில்லை. உடனே அஷ்வினிடம் 'சார் குதிரையில் செல்லலாம் வாருங்கள்' என்றேன். 

அவர் எட்டப்பனை பார்த்த கட்டபொம்மனாக என்னை பார்த்தார். சுமாரான வெளிச்சத்தில் வெளிறிய அவர் முகம் தெரிந்தது. 'என்ன போலாம்கிறீங்களா?' என்றார் பரிதாமாக. 

அவர் முகத்தை பார்க்காமல் 'வாங்க குதிரை ரேட் கேட்கலாம்' என்று டென்டை விட்டு வெளியே வந்தேன். வெளியே திருவிழா கோலமாக இருந்தது. என் முடிவை வெளியிலிருந்த அத்தனை பேரும் ஆமோதித்தது போல் இருந்தது. 

ஒரு குதிரைக்காரன் நேரே என்னிடம் வந்து 'கோடா ச்சாயே' என்று கேட்டான்(ர்). அதற்குள் எங்கள் குழுவிலிருந்த பாண்டியன் ஹிந்தியில் அவனுடன் பேரம் பேசி நான்கு குதிரைகள் (அவர்அவர் மனைவி,  நான் மற்றும் அஷ்வின் ஆகிய நால்வருக்கு) வேண்டுமென்றும் ஒருவருக்கு ரூ750 என்றும் பேசி முடித்தார்.
(அனுபவங்கள் தொடரும்)

இந்த இடுகையை திரு.கோவிந்த் மனோஹரிடம் 
இருந்து பெற்று வேதாந்த வைபவம் வலைப்பூவில் 
வெளியிடுவது: 'அன்பே சிவம்' அஷ்வின்ஜி.