Saturday, August 21, 2010

5. அமர்நாத், வைஷ்ணோதேவி யாத்திரை(2010)-பயண அனுபவங்கள்... பகுதி 5


அமர்நாத்வைஷ்ணோதேவி யாத்திரை(2010)-பயண அனுபவங்கள்...
பகுதி 5 
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி..
போகாதென்னுள்ளத்தில் இருந்தாய் போற்றி.
                                                         (அப்பர் சுவாமிகள்)
வைஷ்நோதேவியை தரிசனம் செய்யுமுன்னதாக ஜம்மு-காஷ்மீர்  பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகள்.

சொர்க்கத்தை பார்த்துவிட்டு வந்து நம்மிடம் சொன்னவர்கள் யாருமில்லை. அது இந்தப் பூவுலகத்தில் அதுவும் இந்தியாவில் இருக்கிறதா? என்று கேட்டால் நான், ''ஆம் அது காஷ்மீர்தான்'' என நான் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லுவேன்.

பூவுலகின் சொர்க்கம்”, ''ஆசியாவின் ஸ்விட்சர்லாந்து''என்றெல்லாம் பலவாறாகப் புகழப்படும் காஷ்மீர் பற்றி சில சுவையான செய்திகளை முதலில் பார்த்து விட்டு வைஷ்ணோதேவி செல்லலாம்.

கடலின் மழலைகளாய் பரந்து கிடக்கும் நீண்ட ஏரிகள்அழகான மிதக்கும் தோட்டங்களை போன்ற படகு வீடுகள்,  விண்ணை முட்டும் சிகரங்களை பனிபோர்த்தி இருக்கும் அழகுவற்றாமல் குதித்தோடும் ஆறுகள்வானைத் தொடுவதில் இமயச்சிகரங்களை வெல்ல எண்ணும் தேவதாரு மற்றும் சினார் மரங்கள்நாணித் தலைகவிழும் எழில் மங்கையின் முகம் போல வண்ணப்பூக்கள் மலர்ந்து சிரிக்கும் பூங்காக்கள்வழிநெடுகிலும் மரகதப் பச்சையாய் விரிந்து கிடக்கும் புல்வெளிகள்,வயல் வெளிகள் என்று இயற்கை வஞ்சனை இல்லாமல் உயிரோவியமாக் காஷ்மீரை படைத்து வைத்திருக்கிறது.

இங்கே கொடைக்கானல் ஏரியையும் காணலாம்உதகைக் குளிர்காற்றையும் அனுபவிக்கலாம்,  குற்றாலத்து மலையருவியையும் காணலாம் கேரளத்தின் பசும்பொழில்களையும்  காணலாம் காஷ்மீருக்கே உரித்தான படகு வீடுகளையும், மிதக்கும்  பூங்காக்களையும் காணலாம். மலைவளமும் மலர்வனமும் பனியாறுகளும் மலிந்து  எழில் கொஞ்சும் தோட்டமாக பாரதத்தாயின் நிலவு போன்ற குளிர் முகத்தில் உள்ள சிந்தூரத்திலகம் போல திகழ்கிறது காஷ்மீர்.



ஸ்ரீநகரின் தால் ஏரி (நன்றி: கோவிந்த் மனோகர்)

  ஜம்முவில் இருந்து ஸ்ரீ நகர் செல்லும் அழகிய பாதை.


 
 வழியெல்லாம் புரண்டோடும் புனல்கள்.
(படம் நன்றி: மகேஷ் கொண்டல்)


  பாதையின் இரு மருங்கிலும் பழ மரங்கள். (படம் நன்றி: கோவிந்த் மனோகர்)



  காலைக் கதிரவன் கிரணங்களில் சிலிர்க்கும் பசுங்காடுகள்.
(படம் நன்றி: மகேஷ் கொண்டல்)


இமயப் பெருமலையில் கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 5300அடி உயரத்தில் உள்ள காஷ்மீர் பகுதி, பூவுலகில் உள்ள எழில்மிகு சமவெளிகள் அனைத்தையும் விடப் பேரெழில் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

இமயப் பெருமலையில் கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 5300அடி உயரத்தில் உள்ள காஷ்மீர் பகுதி, பூவுலகில் உள்ள எழில்மிகு சமவெளிகள் அனைத்தையும் விடப் பேரெழில் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

மூன்று பகுதிகளை கொண்டதாய் ஜம்மு-காஷ்மீர் விளங்குகிறது.

·   லே-லடாக்கில்சித் ஆகிய மாவட்டங்களை கொண்ட மலைவெளி;
·   காஷ்மீரின் 'இன்பப் பள்ளத்தாக்குஎன்று புகழப்படும் ஜீலம் நதிப்பள்ளத்தாக்குமற்றும்
·   ஜம்மு மாவட்டத்தின் மலைவெளி

இந்தியத் துணைக்கண்டம்பாரதம்-பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரிவினைசெய்யப்படுவதற்கு முன்னர்  காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகருக்கு செல்லவிரும்புபவர்கள், முதலில் ராவல்பிண்டிக்குச் செல்வார்கள். பின்னர் அங்கிருந்து உதி, பாரமுல்லா வழியாக ஸ்ரீநகர் வந்தடைவார்கள். 

இப்போது ராவல்பிண்டி பாகிஸ்தானில் இருக்கிறது. பிரிவினைக்குப் பின் இந்தப் பாதையை பாகிஸ்தான் அரசு அடைத்து விட்டது. 

பின்னர் இந்திய அரசு ராணுவத்தின் துணையுடன் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரைக்கும் அருமையான சாலை ஒன்றினை அமைத்திருக்கிறார்கள். இப்போதும் சாலைப் பாதுகாப்புசாலை பராமரிப்புசாலை போக்குவரத்தினை ஒழுங்கு செய்தல் அனைத்தும் ராணுவம்தான்.

காஷ்மீர் என்று சொல்லும் போதே ஜம்மு-காஷ்மீர் என்றுதான் சொல்கிறோம். 

குலாப்சிங் என்ற மன்னர் காலத்தில் ஜம்முகாஷ்மீர் இரண்டு பகுதிகளும் ஒன்றிணைந்து அவரது ஆளுகைக்கு கீழே வந்ததாக வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் மன்னர் குலாப் சிங் (1850)
நன்றி : google

(யாத்திரை தொடரும்)

4. அமர்நாத், வைஷ்ணோதேவி யாத்திரை(2010)-பயண அனுபவங்கள்... பகுதி நான்கு.


அமர்நாத், வைஷ்ணோதேவி யாத்திரை(2010)-பயண அனுபவங்கள்...
பகுதி நான்கு. 
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
காஷ்மீரமும், ஜம்முவும் இப்போதைய ஆபத்தான சூழ்நிலையிலும் பல லட்சக் கணக்கான இன்பச்சுற்றுலா பயணிகளையும், ஆன்மீக அன்பர்களையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்றால் அந்த பூமிக்கு ஏதோ ஒரு மகிமை இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
வழி நெடுகிலும் எப்போதும் நடமாடிக் கொண்டிருக்கும் ராணுவம், அடைந்து கிடக்கும் வீடுகள், கடைகள், அடிக்கொரு தடவை பஸ்களை நிறுத்தி ராணுவத்தினர் நடத்தும் சோதனைகள் என்று ஒரு இறுக்கமான சூழ்நிலையை ஜம்மு தவி ரயில் நிலைய வாசலில் இருந்தே காணமுடிகிறது.
 (நமது ராணுவம்: எங்கும் விழிப்புடன்-எப்போதும். படம் உதவி:- மகேஷ் கொண்டல்)
ஆனாலும் கூட ஜம்முவிலும் சரி, பதட்டங்கள் நிறைந்த காஷ்மீர்  பகுதியாகிலும் சரி, போகும் வழி நெடுகிலும் நாங்கள் சந்தித்த மக்கள் (மாலை நேரங்களில் மட்டும் சில மணி நேரங்கள் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்படும் போது வெளிவருகிறார்கள்) எங்களிடம் பேசிய  போது அன்பாய் பழகினார்கள்,
வழி எங்கிலும் சமைக்க இடம் தந்ததும், தண்ணீர், மின் விளக்கு வசதி, உணவருந்த இடம், எங்களுடன் பயணித்த பெண்களுக்கு தமது வீட்டில் உள்ள கழிப்பறை வசதிகளை செய்து தந்தவர்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
எங்கள் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கமாக இருந்தது. கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் வாழ்வில் அமைதியின்மை, கலவரம், தொழில் நசிப்பு, பல சொல்லொணாத் துன்பங்கள், உடமை இழப்புகள், சொந்த பந்தங்களின் இழப்புக்கள் என்று பல தாக்கங்கள், தேக்கங்களுக்கும் இடையில் அவர்கள் அமர்நாத் யாத்ரிகளிடம் காட்டிய அன்பும் பரிவும் என்னால் மறக்கவே இயலாது.
 (யாத்ரா செல்லும் வழியில் காஷ்மீர் சிறுவர்கள். படம் உதவி:- மகேஷ் கொண்டல்)
யாத்திரை அனுபவத்தை பகிர்ந்து  கொள்ளுங்கள் என்று டாக்டர் சங்கர்ஜி என்னை கேட்ட போதெல்லாம் நான் இதைத் தான் முக்கிய அனுபவமாக பகிர விரும்பினேன்.
ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அரசு நிர்வாகத்துக்கும், ராணுவத்துக்கும் யாத்ரிகளை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டுமே என்கிற கவலை இருக்கிறது. எங்களிடம் பழகிய பொது மக்களும், தேவஸ்தான அதிகாரிகளும், ராணுவ வீரர்களும், எல்லாருமே மரியாதையுடன் தான் பழகினார்கள். எங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் மரியாதையுடன் எங்களிடம் கேட்டுக் கொள்ளும் போதெல்லாம் என் இதயம் நெகிழ்ந்தது.
சிவமும் சக்தியும் நிறைந்து அருள் பாலிக்கும் பூமி ஜம்மு-காஷ்மீர்.
பஞ்சபூதங்களும் மாசின்றி (elements in their purest form) அங்கே இருப்பதினால் மக்களிடம் அன்பு மனப்பான்மை இருக்கிறது. அசுரர்கள் ஆட்சி செய்யும் போது தேவர்களும், ரிஷிகளும் இருந்த மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று என் இதயத்தால் உணர முடிந்தது.  நமக்கெல்லாம் இவ்வளவு துன்பங்கள் இருந்தால் விருந்தினரிடம் எப்படி நடந்து கொள்வோம் என்று எண்ணியபோது வெட்கத்தால் குறுகிப் போனேன்.
இன்றை சூழ்நிலையில் கூட அன்பை மட்டுமே செலுத்த தெரிந்த மக்கள் நிறைந்த இந்த ஜம்மு‑காஷ்மீர் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ளுவோம். பின்னர் யாத்திரையில் பயணிப்போம்.
(யாத்திரை தொடரும்)