Showing posts with label Nepal-2011. Show all posts
Showing posts with label Nepal-2011. Show all posts

Monday, October 31, 2011

6.பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


பசுபதிநாதம்.
நேபாள யாத்திரை - 2011

கங்காதரன்
(நன்றி : கூகிள் விக்கிபீடியா)

தெள்ளுநீர்க் கங்கைச் சடையுடையாய் போற்றி 
உள்ளுவோர்க்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
பசுபதிநாதனே போற்றி போற்றி.

இடுகை: ஆறு

25.09.2011 - இரயில் பயணங்களில்...

A.C.யில் உறங்குவதை நான் விரும்புவதில்லை. இல்லத்தில் கூட எனது அறையில் தரையில் தரைவிரிப்பில் படுத்துறங்கும் வழக்கம் உள்ளவன் நான். வேறு வழியில்லாமல் நீண்டதூ(நே)ரப் பயணம் என்பதால் ஏ.சி. இரயில பெட்டிப் பயணத்தை ஏற்றுக் கொள்ளவேண்டி வந்தது. ஒரு சில வசதிகளுக்காக குழுவினர் ஒன்றாக பயணிக்க வேண்டியதின் கட்டாயமும் ஒரு காரணம்.

தினமும் காலையில் நாலரை மணிக்கே எழுந்து விடும் பழக்கம் உடைய நான் ரயிலில் பயணிப்பதால் ஐந்து மணிக்கு அலாரம் வைத்தேன். அதிகாலை ஐந்து மணிக்கு எனது மொபைல் போன் அலாரம் அடித்து என்னை உசுப்பி எழுப்பியது. முந்தைய நாளில் அதிகாலை இரண்டு மணிக்குத் தான் உறங்கிய நான் அலாரம் சத்தம் கேட்டு கண் விழித்த அதே நேரத்தில் கோரக்பூரில் இருந்து கீதா பிரஸ் விஷ்ணுஜி என்னுடன் பேசினார். எத்தனை மணிக்கு வண்டி விஜயவாடா ரயில் நிலையத்துக்கு வரும் என்று விசாரித்தார். எனது கோச் நெம்பர், பெர்த் நெம்பர் போன்றவற்றை குறித்துக் கொண்டார். அவரது நண்பர் திரு.பிரசாத் எங்களுக்காக அரிசி மற்றும் சில மளிகை சாமான்களை வாங்கி கொண்டு வந்து எங்களிடம் சேர்ப்பார் எனவும் அவற்றை வாங்கி கொண்டுவர என்னிடம் விஷ்ணுஜி கூறினார். விஜயவாடா அன்பர் பிரசாத்தின் செல்பேசி எண் தந்து குறித்துக் கொள்ளச் சொன்னார். ரயில் வரும் நேரத்தை அந்த அன்பருக்கு நான் அவரது செல்பேசியில் அழைத்து சொன்னேன். அவரும் அதைக் குறித்து கொண்டார். என்னைச் சந்திக்க வரும் விஜயவாடா அன்பருக்கு தெலுங்கு மட்டுமே பேசத் தெரியும். எனக்கு தெலுங்கு மற்றவர் பேசக் கேட்டு புரிந்து கொள்ள முடியும். ஆனால் சரளமாக பேச வராது. எனினும் அவரிடம் செய்திகளை ஒருவாறாக பரிமாற என்னால் முடிந்தது. விஜயவாடா ரயில் நிலையத்தில் திரு.பிரசாத் வந்திருந்து பொருட்களை எங்களிடம் சேர்த்தார். அவருக்கு நன்றி தெரிவித்து பிளாட்பாரத்தில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் கோரக்பூரில் இருந்து திரு விஷ்ணுஜி என்னுடன் மொபைலில் தொடர்பு கொண்டு பொருட்கள் வந்து சேர்ந்ததா என்று விசாரித்து அறிந்து கொண்டார்.

நான் சென்னையில் இருந்து புறப்படுவதற்கு ஒருவாரம் முன்னதாகத் துவங்கி சென்னை வந்து அவரவர் வீடு வந்து சேரும் வரை எங்களது பயணத்தின் போது விஷ்ணுஜி காட்டிய பேரன்பையும், ஆதரவினையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு இருந்தன. அன்பு நிறை பண்பாளர் தேவ் அவர்கள் மூலம் கிடைத்த இந்த ஆதரவு திருவருட்பயனால் விளைந்தவை என்பதை உணர்ந்து இறைவனுக்கு இதயம் நிறைந்த நன்றிகளைச் சொன்னேன்.

காலைக்  கடன்களை முடித்ததும் எங்கள் குழுவினருடன் சேர்ந்து சிவபுராணம் பாடினோம். எங்கள் அணியில் திருமதி மாதரசி மிக அற்புதமாக சிவபுராணம் சொன்னார். இல்லத்தில் இருந்து கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களில் இருந்து சிற்றுண்டி அருந்தினோம். இட்லி, சப்பாத்தி, கொஞ்சம் ஸ்வீட் மற்றும் காரம் என கலவையாக காலைச் சிற்றுண்டி படலம் நிறைவேறியது. அதன் பின்னர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இறையவன் அமைத்த சத்சங்கம்.

என்னுடன் பயணம் செய்பவர்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். திரு.நடராஜன், திருமதி நடராஜன், திரு.ராமராஜ், திருமதி மாதரசி ராமராஜ், திரு.மங்களேஸ்வரன், திருமதி.மாலதி மங்களேஸ்வரன், குமாரி ஷோபனா மங்களேஸ்வரன் என்று என்னைத் தவிர்த்து ஏழு பேர்கள் எனது சஹாயாத்திரிகளாக அமைந்தார்கள்..

கடந்த பத்து வருடங்களாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் இவர்கள் அனைவரும் சிறந்த இறைஅடியார்கள். எளிமையை மிகவும் விரும்புபவர்கள். செல்லும் இடங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து கொள்ளும் சகிப்புத் தன்மை படைத்தவர்கள். அமைதி விரும்பிகள். ஒருவருக்கொருவர் அனுசரனையாக இருந்து கொண்டு வருபவர்கள். திரு.நடராஜன் விரைவில் ஓய்வு பெற இருப்பவர். ஹிந்தி நன்றாக பேசுவார். எங்களது மொழிபெயர்ப்பாளராக இவர் இருந்தார். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர். ஹூப்ளியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தவர். கன்னடமும் நன்றாக பேசுவார். அவரது துணைவியார் பழகுவதற்கு இனிய மென்மையான சுபாவம் கொண்டவர். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி அவர்களும் பிள்ளை குட்டிகளோடு வளமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த அடியார்கள் அனைவரும் அலுவலகம் மூலமாக அறிமுகமாகி 20வருடங்களுக்கு மேல் குடும்ப நண்பர்களாக இருப்பவர்கள். ஒருவருக்கொருவர் வாழ்வு தாழ்வுகளில் இணைந்தே உறவாடி, ஒத்தாசையாக இருந்து வாழ்க்கையை செம்மையாக வாழ்பவர்கள்.

திரு.ராம்ராஜ், திருமதி ராம்ராஜ் ஆதர்ச தம்பதியினர். அரவிந்த அன்னையின் பால் மாறாத பக்தி பூண்டவர்கள். ஆழ்நிலைத் தியானம், ரெய்கி, போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருபவர்கள். மற்றவர்களுக்கு பயன்தரும் இக்கலைகளை ஒரு ஆத்மார்த்த சேவையாக செய்துவருபவர்கள். இவர்களின் இரு மகள்களில் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மற்றொரு மகள் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறாள். அந்தப் பெண்ணும் இந்த யாத்திரையில் கலந்து கொள்வதாக இருந்தது. பணியிடத்தில் லீவு கிடைக்காததினால் வரவில்லை. 


சஹயாத்திரிகளின் பிள்ளைகளை சிறு குழந்தையாக இருக்கும் போதே பார்த்திருக்கிறேன். இப்போது அவர்களில் பலர் திருமணமாகி குழந்தை குட்டிகளோடு சௌக்கியமாக இருக்கிறார்கள். இவர்களில் மங்களேஷ்வர் தம்பதியினரின் மகள் குமாரி ஷோபனா சிறுவயதில் இருந்தே தங்கள் பெற்றோருடன் அகில இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருபவள். வருகிற ஜனவரியில் அவளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதற்குள் ஒரு நல்வாய்ப்பாக மகளுடன் காத்மாண்டு போய் வந்து விடலாம் என்று அழைத்து வந்திருக்கிறார்கள். திருமணம் நிச்சயமாகி விட்ட நிலையில் இந்த பெண்ணை அழைத்து வர வருங்கால கணவனிடமும், மாமனார்-மாமியாரிடமும் அனுமதி பெற்று அழைத்து வந்திருக்கிறார்கள். அடிக்கடி போனில் தனது வருங்கால கணவனிடம் பேசி தான் பத்திரமாக இருப்பதை தெரிவித்துக் கொண்டிருந்தது அந்தப் பெண்.

இரயில் தொடர்ந்து காலதாமதமாகவே சென்று கொண்டிருந்தது. குழு அன்பர்கள் தங்களது பயண அனுபவங்களை சுவாரஸ்யமாக என்னுடன் பகிர்ந்து கொண்டு வந்தார்கள். இந்தக் குழுவின் மற்றொரு அங்கத்தினரான அன்பர் சந்திரகுமாரால் இந்த முறை யாத்திரையில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் அவர் எண்ணமெல்லாம் எங்களுடனே இருந்தது. மணிக்கொரு தடவை போன் செய்து எங்களுடன் பேசிக் கொண்டே இருந்தார். ரயில் எங்கே செல்கிறது? சாப்பிட்டாச்சா? என்றெல்லாம் விசாரித்து கொண்டு இருந்தார். யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக மிகவும் வருந்தினார். திரும்பி சென்னை வந்து சேரும் வரை நண்பர் சந்திரகுமார் எங்களோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு உரையாடியது நெஞ்சினை நிறைத்து, நெகிழவும் வைத்தது. அன்பர் சந்திரகுமாரைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். திரு.சந்திரகுமார் ஒரு சிறந்த சிவனடியார். திருக்கோவில்களில் உழவாரப் பணிகளை செய்துவருபவர். சென்னையில் உள்ள உழவாரப் பணி குழுவில் பிரதி மாதம் முதல் ஞாயிறு அன்று முன்னதாகவே திட்டமிடப்பட்ட கோவிலுக்கு காலையிலேயே சென்று உழவாரப் பணியில் ஈடுபடுவார். யாத்திரையில் என்னுடன் வரும் அன்பர்கள் உழவாரப் பணியில் கலந்து கொள்ளுவார்கள். இந்த அளவுக்கு ஈடுபாடு கொண்ட அடியார்களுடன் யாத்திரையில் பயணிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

எல்லாம் அவன் செயல்.

அன்பர்.சந்திரகுமாருக்கு பதிலாக நான் முதன் முறையாக இந்த குழுவினருடன் யாத்திரையில் கலந்து கொள்கிறேன். பத்தாண்டுகளாக இவர்களது சத்சங்கத்தை இழந்திருக்கிறேன் என்பதை எண்ணி வருந்தினேன். எனது சூழல்கள் அப்படி அமைந்திருந்ததும் வினைப்பயனே. இப்போது இவர்களுடன் இணைந்திருப்பது இறைவனின் அருட்பயனே என்று மனநிறைவு கொண்டேன். ஆட்டுவிப்பதும், கூட்டுவிப்பதும் அந்த ஆடல்வல்லானின் திருவிளையாடல் அல்லவா?

இவர்கள் தங்களது குழுவில் வேறொருவரை சேர்ப்பதற்கு மிகவும் யோசனை செய்வார்கள். எல்லோருமே அனுசரணையுடன், ஒத்தியல்புடன் பழகுவார்களா என்ற ஐயம் அவர்களுக்கு உண்டு. என்னுடன் இருபது வருடங்களுக்கு மேலாக பழக்கம் இருந்தும் பயணத் திட்டங்களை பற்றி எதுவும் கூறியதில்லை. நேபாள யாத்திரை செல்ல ரயில் முன்பதிவு கூட அவர்கள் முன்னமேயே செய்துவிட்டார்கள். கிட்டத்தட்ட பத்துநாட்கள் கழித்து பேச்சு வாக்கில் என்னிடம் இது பற்றி சொல்லிய போதுதான், நானும் கலந்து கொள்ள எண்ணினேன். அவரசரம் அவசரமாக முன்பதிவு செய்யச் சென்ற போது இரண்டாம் வகுப்பு ஏ.சி.யில் வெயிட் லிஸ்ட் ஆகி இருந்தது. எனினும் மூன்றாம் வகுப்பு ஏ.சியில் கோரக்பூர் போக, திரும்ப சென்னை வர படுக்கைகள் கிடைத்தன. அவற்றை உடனே பதிவு செய்து கொண்டு நேபாள யாத்திரையில் நான் கலந்து கொள்வதை உடனே உறுதிப்படுத்திக் கொண்டேன்.

(பகிர்தல் தொடரும்)


--
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

Thursday, October 6, 2011

பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011 - Part 2


அன்பர்களுக்கு எனது 

துர்கா பூஜை வாழ்த்துக்கள்.

நேபாளப் பயணக் கட்டுரை தொடர்கிறது:

பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011
இடுகை இரண்டு:
ஓம் நமசிவாய.
எந்தையும் தாயும் ஆனாய் போற்றி.
சிந்தை முழுதும் நிறைந்தாய் போற்றி.

நான் தற்சமயம் பணிபுரியும் அலுவலகம் சென்னையில் அயனாவரத்தில் உள்ளது. கடந்த 1985 முதல் 1992 வரை இந்த அலுவலகத்தில் பணியில் இருந்த போது நிறைய நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். அவர்கள் அனைவரும் சிவனடியார்கள்.

இப்போது போலவேஅப்போதும் சத்சங்கமும்சாதுசங்கமும் நேர்ந்து கொண்டிருந்தது. பின்னர் நேர்ந்த பணி மாற்றல் காரணமாக, எனக்கு அந்த இறையன்பர்களுடனான தொடர்பு விட்டுப் போயிற்று. நான் சென்ற இடங்களில் அதற்கேற்ற சத்சங்கங்கள் அமைந்ததும் ஒரு காரணமாயிற்று. 

இருப்பினும்பழைய நண்பர்களுடனான தொடர்புகள் முற்றிலும் அறுந்து போகவில்லை. ஏதாவது ஒரு ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சியில் நான் அவர்களை தொடர்ந்து சந்தித்து வந்தேன். பின்னர் மீண்டும் 2009ல் அதே அலுவலகத்துக்கு சென்ற போது அந்த  நண்பர்களை மீண்டும் சந்திக்க மற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் சிவனருளே. 

கடந்த ஆண்டு(2010) அமரநாதம் செல்வதற்கான ஆரம்ப விதை தொண்ணூறுகளில் எனக்கு அயனாவரம் அலுவலகத்தில்தான் தூவப்பட்டது என்பதை எனது அமர்நாத் பயணக் கட்டுரையில் தெரிவித்திருக்கிறேன். அன்பர்களுடன் அமரநாதம் சென்று வந்த பின்னர், இமயம் என்னை ஈர்க்க ஆரம்பித்துவிட்டது. இந்த ஆண்டும் ஒரு பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம மேலோங்கி இருந்தது. பின்னர் எங்களது தினசரி மதிய இடைவேளை சந்திப்பின் போது அடுத்த பயணம் எங்கேஎப்போதுஎப்படி என்ற சுவையான விவாதங்கள் துவங்கின. 

இந்த முறையும் அமர்நாத் செல்லலாம் என்று சில நண்பர்கள் கூறினர்சிலர் சார்தாம் யாத்ரா (பத்ரிகேதார்கங்கோத்ரியமுநோத்ரி) செல்லலாம் என்று கூறஎனக்கோ அடுத்த யாத்திரை திருக்கயிலாயமாக அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. கயிலைப் பயணம் பற்றி நண்பர்களிடம் பேச ஆரம்பித்ததும் அவர்களுக்கும் கயிலை யாத்திரையில் ஆர்வம் துளிர் விட்டது.

ஆனால், கயிலாய யாத்திரைக்கு பாஸ்போர்ட் தேவை. அது எங்களிடம் இல்லை. எனவே பாஸ்போர்ட் பெற மனுக்களை பெற்று விண்ணப்பித்தோம். எந்த தொல்லையும் இன்றி புத்தாண்டின் போது (ஜனவரி 2011ல்) சிவப்பரிசாக பாஸ்போர்ட் எங்களை வந்து சேர்ந்தது. 

ஏற்கனவே அமர்நாத் சென்ற குழுவினரிடையே திருக்கயிலாய யாத்திரை செல்வது பற்றி தொடர்ந்து சிந்தனை செய்து வந்தோம். ஆனால் நாளாக நாளாக அவர்களது தவிர்க்க இயலாத பிரச்சினைகள் காரணமாக திருக்கயிலைப் பயணத்தை துவங்க முடியாத நிலையில் இருப்பதை வருத்ததுடன் என்னிடம் தெரிவித்துவிட்டார்கள். 

(பகிர்வுகள் தொடரும்)

--

   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

Sunday, October 2, 2011

பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011



திருச்சிற்றம்பலம்.

பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011

இடுகை ஒன்று.

ஓம் நமசிவாய.

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே. 
(திருமந்திரம் - 2623)

fiveheaded_sadashiva_hk43.jpg
பஞ்சமுக சதாசிவர் 
(நன்றி : கூகிள் இமேஜஸ்)

எல்லாம் வல்ல அம்மையப்பனை வணங்கி இந்த ஆண்டு நான் நேபாள யாத்திரை சென்று வந்த அனுபவங்களை பகிர துவங்குகிறேன். 

கடந்த ஆண்டு (2010) நம் பரமர் அமரநாதரையும், அகில புவன அம்பிகை வைஷ்நோதேவியையும் தரிசனம் செய்து வரும் வாய்ப்பு கிடைத்தது. அமர்நாத் சென்று வந்த பின்னரோகொண்டாடும் பக்தர் தம் இதயத்தில் உறையும் ஈசன்பனி உறையும் இமயத்தை தன்னிடமாக கொண்ட நாதன்என் உள்ளத்தில் புகுந்தது மட்டுமின்றி உள்ளத்தை கவர்ந்தும் விட்டார். எனவேதினம் தோறும எண்ணங்கள்செயல் எல்லாம் அவனே நிறைந்து நிற்க ஆரம்பித்துவிட்டான்.

எந்த அருகதையும் இல்லாத எனக்கு சிவம் காட்டி வரும் அன்பும்ஆதரவும் வார்த்தைகளால் விவரிக்க அரியது என்பதற்கு தின வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளே ஆதாரமாக அமைந்து விட்டது. எங்கேயும் எப்போதும் சத்சங்கமாக அமைய சிவபெருமான் ஆசி கிட்டியது. 

வெளியூர் பயணிக்கும் போதெல்லாம் அடியார் ஒருவர் எனக்கு அறிமுகம் ஆகிவிடுவார். அவரது உதவிகள் எனக்கு தேவையானதாகவே இருந்திருக்கும். அலுவல் பணியாக செல்லும் போது கூட நான் சந்திக்க நேரிடும் அன்பர் ஒரு இறையடியாராக இருப்பார். எனது தேவைகளும் தடங்கல் ஏதுமின்றி அவனருளால் இனிதே நிறைவேறிவிடும். 

அடியார் அடியார் அடியார்க் கடிமைக்
கடியவனாய் நல்கிட் டடினையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் டானே. 
(திருமந்திரம் - 2624)

சிவனருளாலே அமைந்த சிவனடியார்களின் சத்சங்கம் என்னை இந்த ஆண்டு நேபாளம் வரை அழைத்து சென்று உலக ஆன்மாக்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாக விளங்கும் பசுபதிநாதரை தரிசிக்க செய்தது.


 (பகிர்தல் தொடரும்)
-- 
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

அமர்நாத் பயண அனுபவங்களை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்: