Monday, December 2, 2013

7. தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012


திருச்சிற்றம்பலம்.

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 
(பாடல் எண் 11-முதல் தந்திரம்-சிவபரத்துவம்-திருமந்திரம்)


7. தேவபூமியில் சில நாட்கள். 

குமாவுன் பிரதேசத்தின் நீதித் தெய்வம் கோலு தேவதாவின் கதை.

நீதிவழுவாது ஆட்சி புரிந்த கோலு தேவதைக்கு பற்பல திருநாமங்கள் உண்டு. கோல்ஜியூ, கோலு தேவ்தா, ராத்காட் கோலு, கோரியா, க்வால் தேவதா, க்ரிஷன்-அவதாரி, பலதாரி, பாலகோரியா, தூடாதாரி, நிரங்காரி, கொல்லு, கொல்லா, ஹரியா கோலு, சமந்தாரி கோலு, த்வா கோலு, கொரைல், மற்றும் குகுத்தியா கோலு எனப் பற்பல திருநாமங்கள் கொண்டவர் இந்த கோலு தேவதா. 

Inline images 5
கோலு தேவதா திருக்கோவில், சித்தாய் 
(அல்மோரா-உத்தரகண்ட்)
கோலு தேவதாவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அம்சமாகவும், பைரவரின் அம்சமாகவும் வழிபடுகிறார்கள். கவுர் பைரவர் என்றழைக்கப்படும் ஸ்ரீபைரவர், ஸ்ரீகிருஷ்ணரின் அம்சம் என்றும் கூறுகிறார்கள். 
Inline images 6
நீதி தேவன் கோலு தேவதா.

சிவனின் அம்சமான காலபைரவரும் இந்த கவுர்பைரவரும் ஒன்றேதானா அல்லது வேறு வேறா என்று தெரியவில்லை! குமாவுன் பிரதேசத்தில் உள்ள கரிசம்பாவத் (Gari Champavat) என்ற பகுதியை ஆண்ட சாந்த் வமிசத்தின் புகழ் வாய்ந்த மன்னரான ஜால்ராய் என்பவரது மகனான அரசர் ஹால்ராயின் புத்திரர் தான் இந்த கோலு தேவதா. இந்த சாந்த் வமிசத்தில் தான் ராஜா ஹரிச்சந்திரனும் உதித்தவர் என்று இப்பகுதியில் நம்புகிறார்கள்.

கோலுவின் கதை:
மன்னர் ஹால்ராய் ஒரு முறை தனது படையினருடன் பக்கத்தில் உள்ள ஒரு வனத்துக்கு வேட்டையாடச் செல்கிறார். 

அந்த நேரத்தில் இரு காளைகள் கடுமையாக ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு போரிடுவதைப் பார்க்கிறார் மன்னர். அவற்றை சமரிடுவதிலிருந்து பிரிக்க அவர் செய்யும் முயற்சிகள் பலிக்காமல் போகின்றன.

களைப்படைந்த மன்னருக்கு நீர் கொண்டு வருவதற்காக அவரது மெய்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் சற்று தூரத்தில் இருக்கும் இருக்கும் ஒரு நீரோடைக்கு செல்கிறார்கள். நீர் முகந்து வரும் போது அங்கே ஒரு மரத்தடியில் அழகிய இளம்பெண் (கலிங்கா) நிஷ்டையில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறார்கள். 

விளையாட்டாக அவள் முகத்தில் தண்ணீரை ஒருவன் தெளிக்கிறான். இந்தச் செய்கையால் தனது நிட்டை கலைந்து கண் விழித்த அந்தப் பெண் அவர்களைப் பார்த்து, ‘சண்டையிடும் இரண்டு மாடுகளைப் பிரிக்கத் தெரியாத கையாலாகாத அரசனின் முட்டாள் அடிமைகள் தானே நீங்கள்? என்று கேட்கிறாள். இதனைக் கேட்டு வியந்த அந்த வீரர்கள் செய்தியை மன்னனிடம் தெரிவிக்கவும்,  மன்னன் கலிங்காவைப் பார்க்க வருகிறான். 

கலிங்காவின் அறிவிலும், அழகிலும் மயங்கிய மன்னன் அவளை மணம் புரிய விரும்புகிறான். கலிங்காவோ தனது தந்தையின் அனுமதி இன்றி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன் என்கிறாள்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மன்னன், கலிங்காவின் தந்தையைச் சந்திக்க செல்கிறான். கலிங்காவின் தந்தை ஒரு குரூபியாகவும், தொழுநோயாளியாகவும் இருப்பதைக் காண்கிறான். எனினும் கலிங்காவின் மேல் கொண்ட காதல் மாறாமல், தனது விருப்பத்தை அவளது தந்தையிடம் தெரிவித்து சம்மதம் பெறுகிறான்.

கலிங்காவை கடிமணம் புரிந்து கொண்டு தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான். மன்னனுக்கு ஏற்கனவே ஏழு மனைவியர் இருந்தும் அவர்கள் மூலம் அவனுக்கு புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. கலிங்கா அரசன் மூலம் கருத்தரிக்கிறாள். அவளது மகப்பேறு காலம் நெருங்கும் சமயத்தில் மன்னன் தலைநகரத்தை விட்டு வெளியே போகவேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. 

எனவே மன்னன் அரசியரிடம், பிரசவகாலத்தின் போது கலிங்காவுக்கு உறுதுணையாக இருக்கச் சொல்லிவிட்டு வெளியூர் செல்கிறான். 

மன்னன் சென்ற பிறகு கலிங்காவுக்கு பிரசவத்தின் போது அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. இதனைக் கண்டு பொறாமை கொண்ட ஏழு ராணிகளும், மருத்துவச்சியை மிரட்டி கைக்குள் போட்டுக் கொண்டு கலிங்காவுக்குத் தெரியாமல் குழந்தையை அகற்றி குழந்தையின் இடத்தில் ஒரு பூசணிக்காயை வைத்து விடுகிறார்கள். மருத்துவச்சியிடம் நிறைய பொற்காசுகளைக் கையூட்டாகத் தந்து அந்தக் குழந்தையை கொன்று விடச் சொல்கிறார்கள். 

ஆனால் இரக்கமுள்ள நல்லவளான மருத்துவச்சியோ குழந்தையை ஒரு கூடையில் பொற்காசுகளுடன் வைத்து ஒரு ஆற்றில் விட்டுவிடுகிறாள். ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு செம்படவனிடம் அந்த குழந்தை கிடைக்கிறது. பிள்ளை இல்லாத அவன் அந்த அழகிய குழந்தையை கொண்டு சென்று மனைவியிடம் கொடுக்கிறான். வாராது வந்த செல்வமாக வந்த அந்தக் குழந்தையை தமது சொந்தக் குழந்தை போல சீராட்டி பாராட்டி வளர்க்கிறார்கள். 

இதற்கிடையே இந்த ஏழு ராணிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு கலிங்கா ஒரு பூசணிக்காயை பெற்றெடுத்தவள். மேலும் அவள் ஒரு சூனியக்காரி என்றும், தொடர்ந்து அரண்மனையில் இருந்தால் நாட்டுக்கும், மன்னனுக்கும் ஆபத்து என்றெல்லாம் விதவிதமான வதந்திகளைப் பரப்பி அரசன் தலைநகர் திரும்பு முன்னரே சாமர்த்தியமாக கலிங்காகாவை அரண்மனையில் இருந்து வெளியேற்றி அனுப்பிவிடுகிறார்கள். திரும்ப வந்த மன்னவன் தனது இராணிகள் சொன்ன கட்டுக்கதைகளை நம்பி வாளாவிருந்து விடுகிறான்.

ஆனால் பையனோ புத்திசாலியாக வளருகிறான். அவனது சாதுர்யமான செய்கைகள் படித்தவர்களையும் விரும்பி அவனை மதிக்கும்படியாக இருக்கின்றன. அவன் தக்க பருவத்துக்கு வரும்போது அவனது வளர்ப்புத் தந்தை பையனிடம் அவன் வந்த விதம் பற்றி கூறுகிறான். இதற்கிடையே மருத்துவச்சியும் தற்செயலாக இந்தப் பையனைச் சந்திக்க நேருகிறது. அவனது பிறப்பு பற்றி அவள் கூறிய செய்திகளைக் கேட்டு தனது தாயை சந்திக்கவேண்டும் எனவும், மன்னனுக்கு உண்மை நிலவரம் தெரிய வைக்க வேண்டும் எனவும் விரும்புகிறான். தக்க தருணத்துக்காக அந்த இளைஞன் காத்திருக்கிறான்.

அவன் காத்திருந்த அந்தத் தருணமும் வந்தது. தனது பகுதிக்கு மன்னன் தனது பட்டத்து ராணிகளுடன் விஜயம் செய்யவிருப்பதை அறிந்த இந்த இளைஞன் ஒரு மரக்குதிரையை எடுத்துக் கொண்டு மன்னன் முகாமிட்டிருந்த வனப் பகுதிக்கு செல்கிறான். மன்னன் ஒரு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த இளைஞன் தனது மரக்குதிரையை எடுத்துக் கொண்டு ஆற்றில் இறங்குகிறான். இளைஞனின் செய்கையை கண்ட மன்னன் அவனை அழைத்து, ‘மரக் குதிரையை ஆற்றில் இறக்கி என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்கிறான். இளைஞனோ ‘மாட்சிமை பொருந்திய மன்னரே. எனது குதிரையை நீர் பருக அழைத்து வந்திருக்கிறேன் என்கிறான். இதனைக் கேட்ட மன்னன் நகைத்து, ‘அடே முட்டாள் பையா, பார்த்தால் அறிவுடையவன் மாதிரி தெரிகிறாய். ஆனால் நீ செய்வது அபத்தமாக இருக்கிறதே. மரக் குதிரை எப்போதாவது நீர் அருந்துமா? என்று பரிகாசமாக கேட்கிறான். 

தக்க சமயத்துக்காக காத்திருந்த இளைஞன் பணிவுடன், ‘அரசே, நான் முட்டாள்தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயம், ராணிக்கு பூசணிக்காய் குழந்தையாக பிறக்கும் என்பதை நாட்டின் மாட்சிமை பொருந்திய அரசரான தாங்கள் உட்பட இந்த நாட்டில் அனைவரும் எந்தக் கேள்வியும் கேட்காமல், உண்மை நிலவரத்தை ஆராயாமல் கண்ணை மூடிக் கொண்டு நம்பும் போது, எனது மரக் குதிரை நீர் அருந்துமா என்பதில் மட்டும் எப்படி தங்களுக்கு சந்தேகம் வருகிறது என்பது தான் புரியவில்லை என்றான். 

இளைஞனின் பதிலால் அதிர்ச்சி அடைந்த மன்னன் அவனை அருகில் அழைத்து அவனிடம் தனியே பேசி, நடந்த அனைத்தையும் அறிந்து கொள்கிறான். 

பொறாமையினால் தவறிழைத்ததை ஒப்புக் கொண்ட ராணிகளை தண்டித்த அரசன் தனது மனைவி கலிங்காவை கண்டுபிடித்து அவளை அரசியாக்கி, தனது மகனை தனது வாரிசாக பட்டம் சூட்டுகிறான். 

தனது தந்தையின் காலத்துக்கு பின்னர் கோலு முடி சூடிக் கொள்கிறான். ஆட்சிக்கு வந்ததும் நீதி, நேர்மை வழுவாது கோலோச்சுகிறான். சுபிட்சமாக நாட்டை வைத்திருக்கும் தமது மன்னனை நாட்டு மக்கள் கடவுளாக வணங்குகிறார்கள்.

கோலு மன்னனது காலத்துக்குப் பின்னரும் இன்றளவிலும் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும், கோவில்களிலும் இறைவனாகத் துதிக்கப்பட்டு வருகிறார். நீதி, நியாயத்துக்குட்பட்ட எந்த ஒரு கோரிக்கையையும் கோலு தேவதா நிறைவேற்றித் தருவார் என்று மக்கள் முழுமையாக நம்புகிறார்கள் என்பதற்கு கோலு தேவதாவுக்கு அமைந்திருக்கும் எண்ணற்ற கோவில்களும், அங்கே குவிக்கப்படும் கோரிக்கைக் கடிதங்களும், கோரிக்கைகள் நிறைவேறிய பின்னர் கோவில் வளாகத்தில் கட்டப்படும் மணிகளுமே என்றென்றும் சாட்சியாக விளங்குகின்றன.

Inline images 2
கோரிக்கைகளும், மணிகளும். 

Inline images 3
மணித் தோரணங்கள்.

Inline images 4
கோலு தேவதாவின் கருவறைக்குள்...

நாங்கள் தரிசித்த சித்தாய் கோவிலில் வீற்றிருக்கும் கோலுதேவதாவே உண்மையான கோலுதேவதா என்று அந்தக் கோவில் பண்டிட் கூறினார். குமாவுன் பிரதேசத்தின் எல்லா ஊரிலும் கோலுதேவதா கோவில் கொண்டிருக்கிறார். 
Inline images 1
ஜெய் கோலு தேவதா.
(குறிப்பு: கோலு தேவதாவின் கதைகள் பலவாறாகக் கூறப்படுகின்றன. எனினும் பெருவாரியான மக்கள் நம்பும் இந்தக் கதையை நாமும் நம்புவோமாக) 
(பகிர்வுகள் தொடரும்) 

No comments: